Monday, March 7, 2016

ரவிக்குமார் கவிதைகள்


1. பெயரற்றது

* மொழி தோற்றுப்போகும் என ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே 
கேட்கமுடியும் 
மௌனத்தின் உரையாடலை

* நேசம் என்பதொரு சொல்
நேசம் என்பதொரு உணர்வு
நேசம் என்பதொரு மாயை
நேசம் என்பதொரு வர்த்தகப் பெயர்

* அடைத்துக் கிடக்கும்
வீட்டுக்குள்ளும்
வருகிறது போகிறது 
காற்று

2. விண்ணப்பம்

நோயாளிகளை உற்பத்தி செய்யுங்கள்
மருத்துவர்களுக்கு 
வேலைகொடுங்கள்
குற்றவாளிகளை உற்பத்திசெய்யுங்கள்
நீதிமான்களுக்கு 
வேலைகொடுங்கள்
கையேந்திகளை உற்பத்திசெய்யுங்கள்
கருணாமூர்த்திகளுக்கு 
வேலைகொடுங்கள்

பாவிகளை உற்பத்திசெய்யுங்கள்
மீட்பர்களுக்கு 
வேலை கொடுங்கள்

No comments:

Post a Comment