Saturday, March 19, 2016

ஆணவக் கொலைகள் : ஆட்சியைப் பிடிக்க விரும்புவோர் அளிக்கவேண்டிய வாக்குறுதி - ரவிக்குமார்



ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பொன்ற 23.02.2015 அன்று வழங்கியிருக்கிறார். மன்மீத் சிங் எதிர் ஹரியானா மாநிலம் என்ற வழக்கில் ( WP 26734/2014 dt 23.02.2015 )தீர்ப்பளித்த நீதியரசர் அவர்கள் காவல்துறைக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்களை ஆணையாகப் பிறப்பித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில் ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார். 

மன்மீத் சிங் என்பவர் தனது மனைவியைப் பிரித்துக்கொண்டுபோன அவரது பெற்றோர் அவரைப் படுகொலை செய்துவிட்டனர் என்று தொடுத்த வழக்கில் பின்வரும் உத்தரவை நீதியரசர் கே.கண்ணன் பிறப்பித்திருக்கிறார்:

1. ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை ஆதரிக்கவும் அவர்களுக்கு ஆலோசனைகளை நல்கவும் ; கலப்புமணம் நடந்தால் கிராமத்தில் பதற்றம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்தவும்,  ஒவ்வொரு கிராமத்திலும் ‘மக்களின் நண்பர்கள் ‘ என்ற பெயரில் அங்கிருக்கும் முற்போக்காளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். 

2. ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஆணவக் கொலை குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கென தனிப் பிரிவுகள் ஏற்படுத்தவேண்டும்.

3. கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளில் ஆணையோ பெண்ணையோ அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் பெற்றோருடன் அனுப்பக்கூடாது.

4. ஆணவக் கொலை தொடர்பான வழக்கை எஸ்.எஸ்.பி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ளவர்தான் விசாரிக்கவேண்டும். 

5.பழமையான மரபுகள் கலப்பு மணத்துக்குத் தடையாக இருக்குமெனில் தனி மனிதரின் சுதந்திரத்துக்குத்தான் காவல்துறை முன்னுரிமை அளிக்கவேண்டும்.

6. திருமணப் பதிவு அலுவலகங்களில் பதிவின்போது தம்பதியினரின் பெற்றோர் உடன்வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாது. 

ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் நீதியரசர் கே.கண்ணன் “ ஊடகங்களில் வெளியிடப்படும் வரன் தேடும் விளம்பரங்கள் பல சாதியப் பெருமிதத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வருமானத்தை முதன்மையாகக் கருதாமல் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிப்போம் என இந்தத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? 

No comments:

Post a Comment