Friday, March 18, 2016

காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கட்சிகள் - ரவிக்குமார்



தமிழ்நாட்டில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முடியவில்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு 'தேர்ச்சி' பெற்றவையாக இங்கே இருக்கும் 'பெரிய' கட்சிகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இது உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது கட்சி சாராதவர்களைக் கெடுத்ததுமட்டுமின்றி கட்சியின் ஊழியர்களையும் காவுகொண்டுவிட்டது. இதனால் கட்சிப் பிடிமானம் கொண்ட வாக்காளர்களின் ( Committed Voters ) அளவு கணிசமாகக் கரைந்துவிட்டது. 

முன்பெல்லாம் இடைத்தேர்தலைத்தான் வாக்காளர்களுக்கு பணம் அதிக அளவில் கொடுக்கப்படும் தேர்தலாகச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ பொதுத் தேர்தலும் அப்படி ஆகிவிட்டது. கட்சிசாராத வாக்காளர்கள் மட்டுமின்றி கட்சியின் ஊழியர்களும்கூட தேர்தலைப் பணம் ஈட்டும் வாய்ப்பாகப் பார்க்கும் நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனால் கட்சி ஊழியர்களிடம் அரசியல் பிடிமானம் தளர்ந்து சந்தர்ப்பவாதம் தலைதூக்கியிருக்கிறது. கட்சி வாக்குகள் கரைந்துபோய்விட்டதை இடைத் தேர்தல்களில் துலக்கமாகப் பார்க்கமுடிகிறது. 

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதன்மூலம் உடனடி லாபம்பெற்ற கட்சிகள் 'சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ' கதையாகத் தமது கட்சிசார்பு வாக்குகளைப் பறிகொடுத்து நிற்கின்றன. இது கட்சியின் செயல்பாடுவரை எதிரொலிக்கிறது. கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகக் கூட்டங்களுக்கு வருவதற்கேகூட காசுகொடுக்கும் நிலை இன்று பெரிய கட்சிகளில் உள்ளது. 

ஆதரவாளர்களை ஈர்க்கக்கூடிய அரசியல் எதுவும் இல்லாத நிலையில் தனிநபர் வழிபாட்டின்மூலம் அதை பெரிய கட்சிகள் ஈடுகட்டிவந்தன. அந்த ஈர்ப்பு இப்போது குறையத் தொடங்கியதும் பணத்தைக்கொண்டு அதை சரிசெய்யப் பார்க்கின்றன. அவர்களது தந்திரத்துக்கு 2016 தேர்தல் முடிவுகட்டுமா என்பதைத் தேர்தல் முடிவில்தான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment