Friday, March 18, 2016

பேத்ரீஸ் லிபெர்( Beatrice Libert) கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்



1. 
ஒருநாள் நீ பிறந்தாய்
பனியின் வெண்மையில் முழுதாய் மறையாத
காலத்தின் கறுமை

நீ அழுதாய் அலறினாய் 
பாடினாய் தொழுதாய்
சிவப்பு விழுங்குகிறது நிறங்கள் அனைத்தையும்
பூமியின் யுகங்கள் அனைத்தையும் கடக்கிறாய்

ஒருநாள் நீ கற்றுக்கொண்டாய் 
க்ரீஸ் பெயிண்ட்டுக்குக் கீழே சிவப்பு இருப்பதை 
வெண்மையின் அடியில் கறுப்பு இருப்பதை

ஒரு வீரன் உன் இதயத்தின்மீது வைத்தான் செந்நிற ரோஜாவை 
அதிலிருந்து 
நீ பார்க்கிறாய் ஆன்ம உணர்வோடு மலர்களை 
அவை தமது ஜொலிப்பை இழக்கின்றன
தாமிர சமையல் பாத்திரங்களாய் களையிழக்கின்றன

ஒரு மின்னல் பொழுதில் நீ இழந்த உன் பெயரை வாரிக்கொள்கிறாய் 
நீ பசியோடிருக்கிறாய், உறைந்திருக்கிறாய், பயந்திருக்கிறாய் 
நீ திரும்பிச்செல்கிறாய் 
செடிகளிடம், புதர்களிடம்
திராட்சைக் கொடிகளிடம் பழுத்துக் குலுங்கும் ஆரஞ்சுகளிடம் 
இனிய பெயர்கொண்ட மரங்களிடம் 
உன்னிடம் மீந்திருக்கும் சக்தியை நுண்திறனை நீ காப்பாற்றிக்கொள்கிறாய்

ஒருநாள் நீ செத்துப்போகிறாய் நீ 
யார் என்பதை அறிந்துகொள்ளாமலே 

2.
நிலைக்கதவருகில் நிற்கலாமென நம்பினாள்
நிலைக்கதவு இல்லை

கதவைத் தட்டலாமென நம்பினாள்
அங்கு கதவும் இல்லை

திரும்பிச்செல்லலாமென முயன்றாள்
சாலையைக் காணவில்லை

3.

அவள் தன் உடையைக் களைந்தாள் 
     இன்னொன்றை 
     இன்னுமொன்றை 
     அடுத்ததை அடுத்ததை 
     நீண்டநேரமாக 
சருமம் வரையில் 
அதுவுமொரு உடைதான்
அதையும் களையவேண்டும்
எப்போதென்பது எவருக்கும் தெரியாது

4. 

அவள் ஊற்று
நீ பாறை
நதி பெருக்கெடுக்கிறது அவளூடாக 
பலவாய் ஆக்குகிறது அவளை 
நீயும் இருக்கிறாய் நீராக கரையாக

இணைந்த நிலங்களை எரியூட்டுகிறாய் 
வறண்ட நிலங்களைப் பயிர்செய்கிறாய் 

அவள் ஊற்று
நீ பாறை
ஒன்றாக செங்குத்தாக 

=======

பேத்ரீஸ் லிபெர்( Beatrice Libert) : பால் எலூவரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு தனது பதினாறாவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த பேத்ரீஸ் லிபெர் ஃப்ரெஞ்ச் மொழி போதிக்கும் ஆசிரியையாகவும் நூலகராகவும் பணியாற்றுகிறார். சிறுகதை ஆசிரியர். ஓவியம், புகைப்படம் முதலான கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர், விமர்சகராகவும் அறியப்படுபவர். பெல்ஜியம் நாட்டில் Amay என்ற சிறு நகரத்தில் பிறந்தவர், Liege என்ற நகரில் வாழ்ந்துவருகிறார். இந்தக் கவிதைகள் Belgian Women Poets - An anthology, Peter Lang , 2000. என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. 

No comments:

Post a Comment