Thursday, November 5, 2015

அன்னை மாரியம்மாள் : புதிய புறநானூற்றுத் தாய் - ரவிக்குமார்



மதிமுகவின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணப்பாளருமான திரு வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் அவர்கள் இன்றுகாலை உயிர்நீத்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். 

ஒரு மாதத்துக்கு முன்னர் கலிங்கப்பட்டியில் திரு வைகோ அவர்களின் உதவியாளர் சந்துரு அவர்களின் இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்தபோது அன்னையாரை சந்தித்து வாழ்த்துபெற்றோம். 

ஈழத்துக்கான போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டக் களங்களிலும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் முன்னணியில் நின்றவர் அன்னை மாரியம்மாள் அவர்கள். திரு வைகோ அவர்களது உணர்வின் ஊற்று, உள்ளுறை ஆற்றல் அன்னை மாரியம்மாள் அவர்கள்தான் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள். ஈன்று புறந் தருதல் மட்டுமின்றி சான்றோனாக்கி, வேல் எடுத்துக் கொடுத்துப் போராளியாக வளர்த்தெடுப்பதும் தாயின் கடமைதான் எனப் புதிய புறநானூற்றுத் தாயாகத் திகழ்ந்தவர். 

அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. அவரை இழந்து வாடும் அண்ணன் திரு வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தனித் தமிழீழம் அடைவதும், தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதும் அன்னை மாரியம்மாள் அவர்களின் நிறைவேறாக் கனவுகள். அவற்றை நிறைவேற்ற உறுதியோடு உழைப்பதே அவருக்கான பொருள்பொதிந்த அஞ்சலியாக இருக்கும்.


No comments:

Post a Comment