Thursday, October 8, 2015

கவிதையில் வாழ்பவன் - ரவிக்குமார்



அவர்கள் அவனைப் பிடித்தபோது
அவனிடம்
ஒரு துப்பாக்கியும் 
ஒரு பையும் தான் இருந்தன
குழந்தைகள் வைத்திருப்பதுபோன்ற 
நாய்க் காது பை
பச்சை நிறத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் அதில் எழுதப்பட்டிருந்தன 
நான்கு கவிகளின்
அறுபத்தொன்பது கவிதைகள்

துப்பாக்கியில் ரவைகள் இல்லை
பையில் ஒரு ரொட்டித் துண்டு இல்லை
குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை 

இத்தனை நாள் எப்படி உயிரோடிருந்தான்
எதனைக்கொண்டு சண்டை போட்டான்

எப்படியெப்படியோ விசாரித்துப் பார்த்தார்கள் 
சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை

அலுத்துப்போன சிப்பாய்கள் 
ஆணையின்படி அவனை சுட்டுக்கொன்றார்கள்

பச்சை நிற நோட்டுப் புத்தகம்
அதிலிருந்த
அறுபத்தொன்பது கவிதைகள்

தாகிக்கும்போது தண்ணீராகும்
பசித்திருக்கும்போது உணவாய் மாறும்
துப்பாக்கியில் போடும் தோட்டாக்களாய் உருவெடுக்கும் 

சுட்டுக் கொன்றார்கள்

ஆனால்,
பச்சை நிற நோட்டுப் புத்தகத்தில் 
படியெடுத்து வைத்த கவிதை வரிகளில்
இன்னமும் அவன் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் 

( அக்டோபர் 9 - சே குவேராவின் 48 ஆவது நினைவு நாள்) 


 



No comments:

Post a Comment