Sunday, August 9, 2015

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்
=========
( 09.08.2015 அன்று புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற திரு க.ப.அறவாணன் அவர்களின் வைர விழா நிகழ்வில் ஆற்றிய உரை) 
==========

தமிழ் எதிர்காலம் என்றால் அதில் மொழி, இலக்கியம், அரசியல் என்று பல்வேறு தளங்கள் உள்ளன. திரு அறவாணன் அவர்கள் மானுடவியல், வரலாறு, இலக்கியம், பண்பாடு எனப் பல தளங்களில் செயல்படுகிறவர். அவரது வைர விழாவில் தமிழ் என்றால் அதை மொழி என்பதாக மட்டும் நான் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. 

தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். அந்தப் பேரவலம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர்கள் தமது உரிமைகளுக்காக வாய் திறந்து பேசக்கூடிய நிலையில் இல்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் அந்த இனப்படுகொலை குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. 

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வசதியாக அந்த அறிக்கையை வெளியிடாமல் ஒத்திப்போட்டார்கள். செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை வெளியிடப்படவேண்டும். ஆனால் அப்போதும் வெளியிடுவார்களா எனத் தெரியவில்லை. தற்போது இலங்கையில் தேர்தல் நடக்கப் போகிறது. புலம்பெயர் தமிழர்களின் குரல்களும் மங்கித் தேய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான அழுத்தத்தைத் தமிழ்நாடுதான் கொடுக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் அதுகுறித்த குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால் இப்போது அந்தக் குரல்கள் பலவீனமடைந்துவிட்டன. 

இந்த நிலை மாற்றப்படவேண்டும். செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நாம் வலுவாக இப்போதிலிருந்தே குரல் எழுப்பவேண்டும்.

இலங்கையில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலோடு ஆட்சி மாற்றம் என்ற செயல்திட்சம் முற்றுப்பெற்றுவிடலாம். அத்துடன் ஐநா சபை ஈழத் தமிழர்களை கைகழுவி விடக்கூடும். ஐநா மனித உரிம்சிக் கவுன்சிலின் நோக்கம் ஈழத் தமிழர்கள் உரிமை பெற வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்படவேண்டும், அமெரிக்க மேலாதிக்கம் தொடரவேண்டும் என்பதுதான். 

இலங்கையில் சீன ஆதிக்கம் வலுப்பெறுவது இந்துமாக்கடலிலும் அதன் ஆதிக்கம் வலுவடைய உதவும் என்பதால் அதைத் தடுத்த நிறுத்துவதற்குத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையை ஐநா சபை கையிலெடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளையும் இதேவிதமாகத்தான் அது கையாண்டுவருகிறது. 

இந்துமாக்கடல் இன்று உலக அளவில் ஆதிக்கப்போட்டி நிகழும் களமாக மாறியிருக்கிறது. உலகின் எதிர்கால அரசியல் இந்துமாக்கடலில்தான் தீர்மானிக்கப்படப்போகிறது என போரிதல் வல்லுனர்கள் குய்றுகின்றனர். ஒரு காலத்தில் அந்த ஆதிக்கப்போட்டியில் இந்தியாவும் ஈடுபட்டிருந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா பின்பற்றிவரும் வெளியுறவுக்கொள்கை இந்திய நிலையை பலவீனப்படுத்தி அதன் தற்சார்பு நிலையை, பக்கச்சார்பற்ற நிலையை அழித்துவிட்சது. இப்போது அமெரிக்காவின் ஆதரவு நாடு என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கென்று சுயேச்சையான நிலைப்பாடு இல்லை. அதுதான் ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் வெளிப்படுகிறது. 

இந்துமாக்கடலை மையமாக வைத்து நடக்கும் அதிகார விளையாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பகடையாக உருட்டப்படுக்கிறது. எனவே ஐநா மனித உரிமைக் கவுன்சில் செப்டம்பர் மாதத்தில் இலங்கை குறித்த அறிக்ஜையைத் தாமாகவே வெளியிட்டுவிடும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கான அழுத்தற்றைத் தமிழகம் தான் ஏற்படுத்தவேண்டும். இப்போதிருந்தே அதை நாம் வலியுறுத்தவேண்டும். 

அரசியல் களத்தில் தமிழ் இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்வதற்கு நமக்கிருக்கும் கடமையைகளைப்போலவே பிற களங்களிலும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எதிர்வினையாற்றக்கூடிய விழிப்புணர்வுகொண்ட அறிவாளிகள் நம்மிடையே இருக்கிறார்களா? 

அறிவுத்துறையினரை இரு வகைப்படுத்தலாம்: வெகுமக்களிடம் கலந்துரையாடித் தாக்கத்தை ஏற்படுத்துவோர் ஒரு வகை; சிறு குழுக்களோடு உரையாடி ஆழமான விவாதங்களைத் தூண்டும் சிந்தனையாளர்கள் இன்னொருவகை. தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளில் எதிர்வினையாற்றி வெகுமக்களின் கருத்தை மாற்றியமைக்கும் திறன்கொண்ட பொதுநிலை அறிவாளிகள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? 'பப்ளிக் இண்டெல்லக்சுவல்ஸ்' என அடையாளப்படுத்தப்படும் தகுதிவாய்ந்தவர்கள், அத்தகைய மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்கள் எத்தனைபேர் இங்கு இருக்கிறார்கள்? 

உலக அளவில் தத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பட்டியலைப் பார்த்தால் ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் அதில் இடம்பெற்றிருப்பார்கள். தமிழில் தத்துவ அறிஞர் என எவரேனும் உண்டா? சிந்தனையாளர் என எத்தனைபேரைச் சொல்லமுடியும்? திரைப்படப் பாடலாசிரியர்களைத்தான் இங்கே சிந்தனையாளர்கள் என விருதளித்துப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் வெட்கக்கேடு வேறென்ன வேண்டும்! 

தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை- இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஆனால் அந்த நிறுவனங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி வாய்ந்தோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? இதற்காக நாம் யாரைக் குற்றம் சாட்டுவது? எவரைப் பழிப்பது? ஆட்சியாளர்களை, அரசியலாளர்களை இதற்காகக் குறை சொல்வதால் சிக்கல் தீராது. நாம் எல்லோருமே இதற்குப் பொறுப்பு. 

மத்திய அரசால் செம்மொழித் தகுதி தமிழுக்கு வழங்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரக்கூட தமிழ்நாட்டில் எவரும் இல்லை. மணற்கேணி சார்பில் ஒரு கருத்தரங்கை நடத்த ஒரு சிறப்பிதழை வெளியிட முயற்சித்துப் பார்த்தேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை. 

வரலாற்றில் ஒன்றின் தாக்கத்தை மதிப்பிட பத்து ஆண்டுகள் என்பது கணிசமானது. இந்தப் பத்து ஆண்டுகளில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாதித்தவை எவை என்பதை ஆய்வு செய்வதற்கு இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்தியிருக்கலாம். 2004 ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் இதுவரைக்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு முழுநேர இயக்குனரைக்கூட கண்டறிய முடியவில்லை. அதற்கான தேர்வுக்குழு எத்தனையோ முறை கூடிவிட்டது. இதுவரை ஒருத்தரைக்கூட அது கண்டுபிடிக்கவில்லை. தமிழின் அவலநிலைக்கு இதைவிடச் சான்று வேறென்ன வேண்டும்? செம்மொழிக்காக என்ன செய்யப்பட்டது? செவ்வியல் இலக்கியங்களை மக்களிடம் பிரபலப்படுத்துகிறோம் என்று பேரணிகள் நடத்தப்பட்டன. இப்படியான கேலிக்கூத்து வேறு எந்த மொழியிலாவது நடந்திருக்குமா? 

நமது அண்டை மாநிலமான கர்னாடகத்தில் நாராயண மூர்த்தி என்ற தனிநபர் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நமது நிறுவனங்களின் அவலம் புரியும். இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கிய நாராயணமூர்த்தியின் பெயரால் 'மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா ' என ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமஸ்கிருத அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கின் வழிகாட்டுதலில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து அது செயல்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து செவ்வியல் இலக்கியப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். மூல மொழியிலும் ஆங்கிலத்திலும் அந்தப் பிரதிகள் வெளியிடப்படுகின்றன. உலகமெங்கும் இருக்கும் இந்தியவியல் அறிஞர்கள் எல்லோரும் அதில் ஆலோசகர்களாக உள்ளனர். ஐந்து நூல்கள் வெளியாகிவிட்டன, தெரிகதாவும், ஸூஃபி பாடல்களும், அக்பரின் வரலாறும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் ராமாயணம் உட்பட ஜனவரி மாதத்தில் நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன. இப்படி ஒரு வேலையையாவது தமிழ்நாட்டிலிருக்கும் தமிழ் நிறுவனங்கள் செய்துள்ளனவா? 

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

காலனிய ஆட்சி காலத்து கேடுகளைப்போலவே இப்போது உருவாக்கப்படும் கருத்துத் திரிபுகளால் விளையும் கேடுகளும் ஆபத்தானவை. தமிழ்ச் சமூகம் குறித்தும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்தும் பிழையான கருத்தாக்கங்கள் அயல்நாட்டு அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை மறுத்து ஆங்கிலத்தில் நூல்களை ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் நம்மிடையே இல்லை. இதுவொரு முக்கியமான சிக்கல்.

தமிழ் அறிஞர்கள் உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய இரண்டு ஆய்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மானுடவியல் ஆய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் லூய் துய்மோன் என்ற அறிஞர். அவர் இந்திய சாதி அமைப்பைப் பற்றி எழுதிய Homo Hierarchicus என்ற நூல் அதற்குப் பின்னர் வந்த அத்தனை சமூகவியல் ஆய்வுகளின்மீதும் மிகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. சாதியின் தோற்றம் குறித்து அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளை நமது மானுடவியல் ஆய்வாளர்கள் விவாதிக்கவேண்டும்.

துய்மோன் எழுதிய நூலின் தாக்கத்தால் தமிழ்ச் செவ்வியல் பிரதிகளை ஆய்வுசெய்த ஜார்ஜ் ஹார்ட் எழுதிய ஆய்வுக் கட்டுரை Early evidence of caste in south india என்பதாகும். சங்க காலத்திலேயே தமிழர்கள் சாதியப் படிநிலைகளோடுதான் வாழ்ந்தார்கள், இப்போது செய்வதைப்போலவே தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என அதில் அவர் வாதிடுகிறார். அதற்கு ஆதாரமாக சங்க இலக்கியப் பிரதிகளைக் காட்டுகிறார். இந்த ஆய்வுக் கட்டுரையும் விவாதிக்கப்படவேண்டும். இவற்றை விவாதித்து ஆங்கிலத்தில் நூல்களை , கட்டுரைகளை எழுதவேண்டும்.

தமிழில் ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இத்தகைய நூல்களை நமது பேராசிரியர்கள் அறிமுகம் செய்கிறார்களா? அவர்களே இவற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி அறிமுகம் செய்வார்கள்? தற்போது பல்கலைக்கழக மானியக் குழு புதிதாக ஒரு விதியை அறிமுகம் செய்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்கள் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையாவது ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கவேண்டும், அவற்றை ஆய்வேட்டுடன் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. மாணவர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு இந்த விதி உதவும். ஆனால் இந்த விதியைக்கூட பொருளீட்டும் வழியாக சிலர் மாற்றிவிட்டனர். ஆய்வு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிகைகள் ஐஎஸ்பிஎன் எண்ணோடு முளைத்திருக்கின்றன. அவற்றில் கட்டுரை வெளியிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்படுகிறேன்.

இன்றைக்கு தமிழில் ஆய்வுசெய்யும் ஒரு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிடவேண்டுமென்றால் அதற்கு ஆய்விதழ்கள் இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகமோ, செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ ஆய்விதழ் எதையும் நடத்தவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடும் பத்திரிகையும் காலத்தில் வருவதில்லை. தமிழில் peer reviewed journal எனக் கூறத்தக்க ஆய்விதழ் ஒன்றுகூட நமது நிறுவனங்களால் நடத்தப்படவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

தமிழறிஞர்கள் பலதுறை சார்ந்த அறிவோடுத் திகழ்ந்தார்கள்; பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சோழர் கால வரலாற்றுக்கு இன்றைக்கும்கூட நம்பகமானதொரு வரலாற்று நூலாக இருப்பது சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய நூல்தான். அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர்தான். சதாசிவப் பண்டாரத்தாரின் மரபுத் தொடர்ச்சி எங்கே எப்படி அறுபட்டது என்பதை நாம் சிதிக்கவேண்டும். அதை சரிசெய்யவேண்டும். அதற்கு பலதுறை சார்ந்த அறிவும் பன்மொழிப் புலமையும் நமது தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இருக்கவேண்டும்.

philology என்னும் மொழிநூல் அறிவின் தேவையை பொல்லாக் வலியுறுத்துகிறார். சங்க இலக்கியங்களை மட்டுமின்றி சமகால இலக்கியப் பிரதிகளைப் புரிந்துகொள்வதற்கும் அது அவசியம். ஒரு பிரதியில் படைப்பாளி தெரிவிக்க விரும்பும் பொருள், மரபு வழங்குகிற பொருள், வாசகன் உருவாக்கிக்கொள்ளும் பொருள் ஆகிய மூன்றுக்குமான சமன்பாட்டை மொழிநூல் அறிவு வலியுறுத்துகிறது. மொழியியல் என்பதும் மொழிநூல் அறிவு என்பதும் ஒன்று அல்ல. இதை நமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கற்றுத்தரவேண்டும்.

அகராதியியலில் தேர்ச்சிகொண்டோர் இப்போது அருகிவிட்டனர். நிதி நல்கைகளைப்பெற்று தமிழில் வட்டார வழக்குச் சொல் அகராதிகளை நமது எழுத்தாளர்கள் உருவாக்கியுள்ளனர். கி. ரா, பெருமாள் முருகண் உள்ளிட்ட பலபேர் அதைச் செய்திருக்கின்றனர். அகராதியியலின் இலக்கணப்படிப் பார்த்தால் அவை ஒன்றுகூட அகராதி என்று சொல்வதற்குத் தகுதியானதில்லை என்று அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். முறையான அகராதியியலை தமிழ்த்துறை மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

க்ரியா என்ற தனியார் நிறுவனம் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்ப் பேரகராதியின் புதிய பதிப்பைக் கொண்டுவருவதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பணியைக்கூட இன்று செய்ய முடியவில்லை.

தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டுகிற நாம் எந்தவொரு மொழியையும் பகையாகப் பார்க்கக்கூடாது. வெறுப்போடு அணுகக்கூடாது. தமிழ் மட்டுமே தெரிந்தால் தமிழின் சிறப்பு புரியாது. இங்கே வந்திருக்கும் பேராசிரியர் மா.லெ.தங்கப்பா சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பைவிட தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை வெளிவந்திருக்கும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறன் நமது ஆய்வு மாணவர்களுக்கு இருக்கவேண்டும். தங்கப்பாவின் சிறப்பு அப்போதுதான் தெரியும். அவரது மொழிபெயர்ப்புகளைப்பற்றி பேராசிரியர் மருதநாயகம் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை தவிர வேறு ஒன்றுகூட எழுதப்படவில்லை. நம்மிடம் இருக்கும் அறிஞர்களை அடையாளம் காணக்கூட நம்மால் முடியவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்க வேண்டாம், அரசியலாளர்கள் செய்வார்கள் என நம்பவேண்டாம். அறிவுத் தளத்தில் முன்னெடுக்கவேண்டிய பணிகளை நாமே நம்மால் இயன்ற அளவில் செய்வோம். அரசியல் தளத்தில் குரல் கொடுத்தால் அதற்கு ஆதரவு இருக்கும், பாராட்டு கிடைக்கும். ஆனால் அறிவுத் தளத்தில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு இருக்காது. அரசியல் தளத்தில் பணியாற்ற கூட்டம் தேவை, ஆனால் அறிவுத் தளத்தில் செய்யும் பணிகளைத் தனியேதான் செய்யவேண்டும். அதிகபட்சம் ஒருசில நண்பர்கள் இருந்தால் போதும். நல்வாய்ப்பாக பேராசிரியர் அறவாணன் அவர்களின் அறிவுத்துறை வாரிசுகளாக முனைவர் சிலம்பு செல்வராஜ், முனைவர் அறவேந்தன் முதலான நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். உங்களால் நல்ல தாக்கத்தை தமிழ் ஆய்வுலகில் ஏற்படுத்த முடியும்.

நான் ஒரு தமிழ் அறிஞனல்ல, ஒரு தமிழ் மாணவன். மணற்கேணி என்ற ஆய்விதழை நடத்துவதன் வழியாக என்னாலியன்ற தமிழ்ப்பணியைச் செய்துவருகிறேன். இங்கே குழுமியிருக்கும் தமிழறிஞர்கள் நினைத்தால் நிச்சயம் வியத்தகு சாதனைகளைப் புரியமுடியும். இந்த வைர விழா நிகழ்வு அத்தகைய முன்னெடுப்புக்கான துவக்கமாக அமைந்தால் அதுவே திரு அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்தாக அமையும் எனக் கருதுகிறேன். நன்றி வணக்கம் 

No comments:

Post a Comment