Wednesday, August 5, 2015

தமிழ்நாட்டில் பெண்களுக்கு தனி கட்சி உருவாகுமா? - ரவிக்குமார்



பெண்கள் சமத்துவக் கட்சி ( Women's Equality Party ) என்ற பெயரில் பெண்கள் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு புதிய கட்சி இங்கிலாந்தில் துவக்கப்பட்டுள்ளது. 

* அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமமான பிரதிநிதித்துவம் 

* கல்வியில் சம வாய்ப்பு 

* சம ஊதியம்

* ஊடகங்களில் சமத்துவத்தோடு நடத்தப்படுதல் 

* குழந்தை வளர்ப்பில் சம பங்கேற்பு

* பெண்கள் மீதான அனைத்துவித வன்முறைகளுக்கும் முடிவுகட்டுதல் 

என்ற ஆறு நோக்கங்களை முன்வைத்து இந்தக் கட்சியைத் துவக்கியுள்ளனர். க்ரீன் பார்ட்டி எப்படி சுற்றுச்சூழல் என்னும் ஒற்றை இலக்கை முன்வைத்து நடத்தப்படுகிறதோ அதுபோல இந்தக் கட்சியும் பெண்களுக்கு சமத்துவம் என்ற ஒற்றை செயல்திட்டத்தோடு ( single point agenda) செயல்படும் என இக்கட்சியைத் துவக்கியுள்ள சேண்டி டோக்ஸ்விக் ( Sandi Toksvig) கூறியிருக்கிறார். 

கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருசில நாட்களிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உருவாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் லண்டன் மேயர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சேண்டி டோக்ஸ்விக் அறிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் இப்படியொரு கட்சியை ஆரம்பியுங்கள் என ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிவகாமி ஐஏஎஸ் அவர்களிடம் கூறினேன். அப்போது அவர் திருச்சியில் பெண்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் நான் கூறியபோது அதை வேடிக்கையாகச் சொல்கிறேன் என அவர் அலட்சியப்படுத்திவிட்டார். திருச்சி மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் திரண்டனர். அந்த எழுச்சியை அவரால் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதிலிருந்து விலகி இப்போது ஒரு சிறிய அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். 

இடதுசாரி கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள் மட்டுமே பெண்களுக்கான சமத்துவத்தை வென்றெடுக்கப் போதுமானவை அல்ல. அவர்களுக்கென சுயேச்சையான அமைப்புகள் இருந்தால் இன்னும் அழுத்தமாக அவர்களது பிரச்சனைகளை முன்வைக்க முடியும். அப்படியொரு கட்சி உருவானால் பாலின சமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட கட்சிகள் அதை ஆதரிக்கவேண்டும். 

இன்றைய சூழலில் வசந்திதேவி. சிவகாமி, சுதா ராமலிங்கம், ஓவியா, அஜிதா உள்ளிட்ட சமூக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து பெண்களுக்கான கட்சியைத் துவக்கலாம். இடதுசாரிக் கட்சிகளின் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் அதில் இணைந்தால் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

No comments:

Post a Comment