Wednesday, August 12, 2015

திரு வ.அய்.சுவைப் போல் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகவேண்டும் - ரவிக்குமார்



செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக தி ரு வ.அய்.சு அவர்கள் இருந்தபோது அதன் எண்பேராயக் குழு உறுப்பினர்களில் ஒருவராக மத்திய அரசால் நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அவர் தலைமையில் நடந்த ஓரிரு கூட்டங்களில் நான் பங்கேற்றேன். 

அவர் ஒரு தமிழறிஞர் என்பதைவிட தொலைநோக்குப் பார்வைகொண்ட சிறந்த நிர்வாகி. அதனால்தான் அவரால் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பலவற்றை உருவாக்க முடிந்தது. அவரைப்போன்ற visionary எனக் கூறத்தக்க தரிசனம் உள்ள ஆளுமைகள் நம்மிடையே இப்போது இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனங்களை இப்போது உள்ளவர்கள் காப்பாற்றவும் நிர்வகிக்கவும் திணறுகிற நிலையைப் பார்க்கிறோம். 

அன்றைய ஆட்சியாளர்களிடம் போராடி அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பெற்றுத் தந்த நிலத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இப்போது ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்கள். இதுவொரு உதாரணம். ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு நிதியோ, கட்டமைப்பு வசதிகளோ தடையாக இல்லை. அவற்றை நிர்வகிக்கும் ஆற்றல்கொண்ட ஆளுமைகளின் பற்றாக்குறைதான் மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது. 

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை மேலும் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பரிந்துரைக்க இப்போது திரு க.ப.அறவாணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வ.அய்.சு வின் மாணவராகிய அவர் சிறப்பான ஆலோசனைகளைத் தருவார் என நம்புகிறேன். 

புதுச்சேரி ஒரு மாநிலம் இல்லையென்றாலும் இதற்கெனத் தனியே கல்பி வாரியத்தைத் துவக்குவதுதான் நல்லது. திரு லட்சுமி நாராயணன் கல்வி அமைச்சராக இருந்தபோது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்துடன் அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கேரளாவில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்கு அது ஒரு சிறிய மாநிலமாக இருப்பதும் ஒரு காரணம். அவர்களைப்போல இங்கிருக்கும் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கணக்கில்கொண்டு புதுச்சேரியிலும் சுயேச்சையான கல்வி வாரியத்தை கல்வித் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதுதான் புதுச்சேரியின் கல்வித் தரம் அடுத்த நிலைக்குச் செல்லும். தமிழ்நாட்டில் கல்விக் கொள்கையை வகுப்பதில் அரசியல் தலையீடு அதிகம். புதுச்சேரியில் அந்த அளவுக்கு இல்லை. தமிழ்நாட்டின் கல்வி வாரியத்தின் அங்கமாக இருப்பது தேவையற்றது. 

இங்கே ஃ ப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தியவியல் நிறுவனம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அங்கே ஈவா வில்டன் அவர்களின் தலைமையில் செவ்வியல் இலக்கியங்களின் செம்பதிப்புகளை உருவாக்கிவருகின்றனர். சில நூல்கள் வெளிவந்துவிட்டன. அந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு நீங்கள் இங்கே PILC ல் வாங்கும் ஊதியத்தில் பாதிகூட கொடுக்கப்படுவதில்லை. அந்தச் சூழலில் அவர்கள் அத்தகைய ஆய்வுப்பணிகளைச் செய்யும்போது நீங்கள் அதைவிட சிறப்பாகச் செய்யமுடியும். PILC ல் அதற்கான ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறீர்கள். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவரும் விதமான செயல் திட்டத்தை அய்யா அறவாணன் அவர்கள் அரசுக்கு அளிப்பார்களெனக் கருதுகிறேன். 

திரு வ.அய்.சு பல்துறை அறிவு கொண்டிருந்தார். அதுபோல இங்கிருப்போர் திகழவேண்டும். சங்க இலக்கியங்களின் செம்பதிப்புகளைக் கொண்டுவரவேண்டுமெனில் அதற்கு சுவடிகளைப் படிக்கவும், கல்வெட்டுகளைப் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இலக்கணத்திலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் புலமை வேண்டும். அத்தகைய பல்துறை அறிவுகொண்டவர்கள் தற்போது அருகிவிட்டனர். அந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் ஆராய்ச்சி மாணவர்களை இங்கே உருவாக்கவேண்டும். பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தை அதன் பணிகளை உலகமெங்கும் அறிவார்கள். அதுபோல உலகப் புகழ்பெறும் விதத்தில் இங்கிருந்து ஆய்வுகள் வெளிவரவேண்டும் என வாழ்த்துகிறேன். திரு வ அய் சு அவர்களது படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப்போல நாம் வரவேண்டும் என இங்கிருக்கும் ஆய்வு மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இந்த நிறுவனத்தைப் புகழ்பெற வைக்கமுடியும். நன்றி வணக்கம் 

( 12.08.20-5 அன்று புதுச்சேரி PILC நிறுவனத்தில் திரு வ.அய்.சு அவர்களின் உருவப் படத் திறப்பு நிகழ்வில் பேசியதன் சுருக்கம்) 



No comments:

Post a Comment