Monday, August 31, 2015

மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015



ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்னும் விருதளித்து கௌரவித்து வருகிறோம். 

2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 

செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு திருச்சி ஓட்டல் ஃபெமினாவில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார். பேராசிரியர் பா. கல்யாணி வாழ்த்துரை வழங்குகிறார். 

2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் 'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்து பாராட்டப்பட்டனர். 

2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். 

நிகரி விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 



முனைவர் ந.மணிமேகலை: 
===============


சேலம் மாவட்டம்  எடப்பாடிக்கு  அருகில் உள்ள தோப்புக்காடு என்னும் இடத்தில் பிறந்த  முனைவர் ந.மணிமேகலை கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறையை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அவர் 2005 ஆம் ஆண்டு முதல் மகளிரியல் துறையில் தலைவராக செயல்பட்டுவருகிறார்.
பெண் தொழில் முனைவோர்களுக்கான அமைப்பை நிறுவி ஏராளமான பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு வழிவகுத்தவர். மகளிரியல் ஆய்வுகளுக்கான பிராந்திய அமைப்பை நிறுவி மகளிரியல் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறார் 

மகளிர் மேம்பாடு, பாலின சமத்துவம் தொடர்பாகப் பல்வேறு மாநாடுகள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்றுவந்துள்ளார். அடித்தட்டு பெண்களின் மேம்பாட்டுக்காகப் பன்முகத் தன்மையோடுகூடிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். Young Economist Award உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்

வகுப்பறையில் சமத்துவத்தைப் பேணுவதில் அக்கறை காட்டிவரும் பேராசிரியை ந.மணிமேகலை அவர்களின் பணிகளைப் பாராட்டி நிகரி விருது வழங்கப்படுகிறது. 



திரு க. துளசிதாசன்: 
============



 திரு க. துளசிதாசன் ம.கலியபெருமாள் பவுனாம்பாள் இணையருக்கு 11.03.1966 ல் பிறந்தவர். கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப்பெற்றவர்.தற்போது திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.வி மேனிலைப் பள்ளியின் முதல்வராக இருந்து மாணவர்கள் வகுப்பறைகளுக்கு அப்பாலும் கல்வி பயிலவேண்டியதன் தேவையை உணர்த்தி ஆக்கபூர்வமான கல்வியை வழங்கிவருபவர்.

களம் என்ற அமைப்பின் மூலம் இலக்கியப் பணிகளையும் செய்துவருகிறார். படைப்பாளிகளுக்கும் மாணவர்களுக்குமிடையே பாலமாக செயல்படுவதோடு 'நமக்கான புத்தகத்தை நாமே உருவாக்குவோம்' என்ற புதிய கருத்தாக்கத்தை உருவாக்கிச் செயல்படுத்திவருகிறார்.
 
மாணவர்களின் கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர். 'கனவு ஆசிரியர் ' என்ற நூலின் தொகுப்பாசிரியர். கல்வி குறித்த புதிய பார்வையோடு கல்விப் பணியாற்றிவருகிறார். திரு க.துளசிதாசன் அவர்களது பணிகளைப் பாராட்டி நிகரி விருது வழங்கப்படுகிறது. 


இவண்
ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி

No comments:

Post a Comment