Wednesday, May 20, 2015

அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெறும் விதத்தில் தேர்வுமுறையை மாற்றவேண்டும் - ரவிக்குமார்



பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவைப் போலவே பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொண்ணூற்றியிரண்டு விழுக்காட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மீதமிருக்கும் அந்த எட்டு விழுக்காடு மாணவர்களும்கூடத் தேர்ச்சியடையவேண்டியவர்கள்தாம். பத்து ஆண்டு பள்ளிக் கல்வியைப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சிபெற்று இறுதித் தேர்வில் தோற்றுவிட்டார்கள் எனச் சொல்வது அந்த மாணவர்களின் தோல்வி என்பதைவிட நமது பள்ளிக்கல்வி முறையின் தோல்வியென்றுதான் கூறவேண்டும். 

பத்தாம் வகுப்பில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் எட்டு விழுக்காடு தோல்வியென்றால் சுமார் எண்பதாயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று பொருள். அவர்களெல்லாம் முட்டாள்களென்றோ திறமையற்றவர்களென்றோ அர்த்தமல்ல. அவர்கள் தோல்வியடைந்ததாய்ச் சொல்வதற்கு நமது தேர்வுமுறைதான் காரணம். 

பள்ளிகளில் இடை நிறுத்தத்தைத் தடுப்பதற்கான காரணங்களை ஆய்வுசெய்பவர்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் முக்கியமான காரணம் நமது தேர்வுமுறைதான். தரம் தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வுமுறை அமைக்கப்பட்டுள்ளது. 

தங்கள் மூளைகளில் ஆசிரியரால் டெபாசிட் செய்யப்படும் விடைகளை அப்படியே பாதுகாத்து வைத்திருந்து தேர்வின்போது அச்சுப்பிசகாமல் திருப்பி ஒப்படைக்கும் இப்போதைய தேர்வுமுறை மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழாக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்விபயிலும் மாணவர்கள் வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக எல்லாவற்றுக்கும் ரெடிமேடான தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சார்பு மனோநிலைதான் நாயக வழிபாட்டுக்கு இட்டுச்செல்கிறது. 

இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வியைப் பெறுகிற முறையில் தேர்வு முறையை மாற்றியமைப்பதோடு பள்ளிக்கல்வி முடிப்பவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

ஒரு நாட்டின் வளங்களிலேயே மிகவும் சிறந்தது மனித வளம் தான். அதைப் புரிந்துகொண்ட நாடுதான் முன்னேறும்.

No comments:

Post a Comment