Tuesday, May 12, 2015

அறிவுலகத் தீண்டாமையை அகற்றுவோம்


 

இந்தியாவில் சாதிகள்: ஒரு மீள்வாசிப்பு

 

1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற மானுடவியல் ஆய்வரங்கில் ; இந்தியாவில் சாதிகள்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வுரையை அம்பேத்கர் முன்வைத்தார். அதில் தனது ஆய்வு முடிவுகளாக பின்வரும் கருத்துகளைத் தெரிவித்தார்:  

“1)  இந்துக்களுக்குள்ளே பல்வேறுவித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடையே ஆழ்ந்தபண்பாட்டு ஒருமை உள்ளது.  

2) பெரியதாக உள்ள பண்பாட்டுப்பகுதிகளின் சிறுசிறு தொகுதிகளேசாதிகள்.  

3)  தொடக்கத்தில் ஒரு சாதியேஇருந்தது.  

4) பிறரைப் பார்த்துப் "போலச்செய்தல்" மூலமும், ’சாதி விலக்கு’செய்யப்பட்டதன் மூலமும் வர்க்கங்கள்அல்லது வகுப்புகள் சாதிகளாயின.

 

புரட்சியாளர் அம்பேத்கர் பல்வேறு அறிவுத் துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார் என்றாலும் இந்த ஆய்வுரையின் மையக் கருத்தான ‘சாதி ஒழிப்பு’ என்பதே அவரது சிந்தனை செயல் அனைத்தையும் அவரது வாழ்நாள் முழுதும் ஆக்கிரமித்திருந்தது. 

 

அம்பேத்கர் தனது ஆயுட்காலத்தில் இந்தியாவின் முக்கியமானதொரு பிரச்சனையாக சாதிப் பிரச்சனையை உணரச் செய்தார். அவரது இடையறாத போராட்டங்களின் காரணமாகவே காந்தி உட்பட அன்ரைய அரசியல் தலைவர்கள் அனைவரும் சாதிச் சிக்கல் குறித்து கருத்து தெரிவித்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இந்திய வரலாற்றிலேயே தீண்டாதார் ஒரு தரப்பாகவும் இந்துக்கள் இன்னொரு தரப்பாகவும் இருந்து தமக்குள் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டிய சூழல் அம்பேத்கரின் போராட்டத்தால்தான் உருவானது. ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போது பல இடங்களில் அம்பேத்கர் வலியுறுத்தியிருக்கிறார்.

 

புரட்சியாளர் அம்பேத்கரது காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்னரும் எத்தனையோ சிந்தனையாளர்கள் சாதியின் தோற்றம் குறித்தும் அதன் இயக்கம் குறித்தும் எண்ணற்ற ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆனால் அந்த ஆய்வுகள் பெரும்பாலும் அம்பேத்கரைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது அறிவுலகத் தீண்டாமையின் அடையாளம்.

 

சாதியின் தோற்றத்துக்கும் நிறவெறிக்கும்தொடர்பிருக்கிறதா? சாதிக்கும் சுத்தம்அசுத்தம் என்ற கோட்பாட்டுக்கும் உள்ள உறவுஎன்ன? மேலைநாட்டு ஆய்வாளர்கள்சாதியைப்பற்றி எழுதியிருக்கும் கருத்துகளைநாம் வழிமொழிந்துகொண்டிருப்பது சரியா? அவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கரையோஅயோத்திதாசரையோ கவனத்தில்எடுத்துக்கொள்ளாதது ஏன்?  

 

சாதிகுறித்த தற்கால ஆய்வுகளின்மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஃப்ரெஞ்ச் மானுடவியல் சிந்தனையாளர்  லுய் துய்மோனின் புகழ்பெற்ற நூலான Homo hierarchicus ( OUP, Second Edition 1999) ல் இரண்டாம்தர தரவுகளின் அடிப்படையில் அம்பேதகரின் பெயர் போகிறபோக்கில் ஒரு இடத்தில் (பக்கம் 223) உதிர்க்கப்படுகிறது. ஆனால் அவரது நூலோ கட்டுரையோ ஒரு இடத்தில்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அறிவுலகத் தீண்டாமை நாடுகடந்து பரவியிருப்பதற்கு சான்று இது.

 

புரட்சியாளர் அம்பேத்கரின் ‘ இந்தியாவில் சாதிகள் ‘ ஆய்வு முன்வைக்கப்பட்டதன்நூற்றாண்டு இன்று துவங்குகிறது.  அவரதுஆய்வுரை குறித்த மீள்வாசிப்பின்மூலம்’அறிவுலகத்  தீண்டாமையை’ அகற்றுவோம்; சாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்வோம். 

 

பனுவல்புத்தக மையம், திருவான்மியூர், சென்னை

09.05.2015 சனி மாலை 6 மணி

 

கருத்துரை:

ரவிக்குமார்

பேராசிரியர் ராமசாமி

முனைவர் பக்தவத்சல பாரதி

 

ஆர்வமுள்ளோர் வாருங்கள் 

அறிவுலகத் தீண்டாமையை அகற்றக் குரல்கொடுங்கள்

**************

 

மணற்கேணி 

 


No comments:

Post a Comment