Tuesday, February 17, 2015

புத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா? - ரவிக்குமார்


பகவத் கீதையை எரிப்பேன் என கர்னாடகாவைச் சேர்ந்த கே.எஸ்.பகவன் என்பவர் பேசியது இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் அரவிந்த மாளகத்தியும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். தேசிய நூலாக அறிவிக்கப்படுவதற்கு தகுதியில்லாத நூல் அது என மாளகத்தி விமர்சித்திருக்கிறார். மாளகத்தியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அந்த நூலை மட்டுமல்ல எந்தவொரு நூலையுமே புனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என பல மாதங்களுக்கு முன்பே நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் பகவத் கீதையை எரிப்பேன் என்னும் பகவனின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. 

மனுநீதியே என்றாலும் அதை எரித்துத்தான் நம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கர் மனுநீதியை எரித்த காலமும் சூழலும் வேறு. இன்று அதே வடிவத்தில்தான் நாம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று அவசியமில்லை. 

இந்தியாவில் அவர் காலத்தில் எவரும் படித்திராத அளவுக்கு பலதரப்பட்ட நூல்களையும் படித்தவர் அம்பேத்கர். அவர் எழுதியவற்றைக்கூட ஒழுங்காகப் படிக்காத நாம் புத்தகங்களை எரிப்போம் எனக் கிளம்பினால் அதை எதிர்ப்பு என்று சொல்வதைவிட அறிவின்மீதான வெறுப்பு என்றே சொல்லவேண்டும். மிகவும் மோசமான நூலைக்கூட எரிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. 

இப்போதும்கூட தலித்துகளின் கல்வியறிவு விகிதம் மற்றவர்களைக்காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. தலித்துகளுக்கு நன்மை செய்த நினைப்பவர்கள் புத்தகங்களைப் படியுங்கள் என்று அவர்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்களைக் கொளுத்துங்கள் என்று கூறாதீர்கள்! 

No comments:

Post a Comment