Thursday, November 27, 2014

பதான் 'தற்கொலைகள்' - ரவிக்குமார்



பதான் 'தற்கொலைகள்'

- ரவிக்குமார்

எங்களுடையது புனித பூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்
பெண்கள் இங்கு இயற்கையாய் மரிப்பர்
அல்லது தங்களைத் தாங்களே மாய்ப்பர்

வரதட்சணை போதாதென்றால்
இயற்கையாக ஸ்டவ்கள் வெடித்து
இயற்கையாக மரணம் நிகழும்.
இயற்கையாகக் கணவன் அடிக்க
இயற்கை மரணம் நிகழ்வதுமுண்டு.

ஆண்டுதோறும் கோடிப் பெண்கள்
கருவிலேயே தற்கொலை செய்வதை 

இரண்டுமூன்று வயதுக் குழந்தைகள்
ஆண்கள்மீது வீண்பழிபோட
பலவந்தமாக உறவுகொண்டு 
பாதியிலேயே உயிர் துறப்பதை

உயரமான மரத்தில் ஏறித் 
தூக்குபோட்டுத் தொங்குகின்ற 
சிறுமிகளுடைய செல்ல விளையாட்டை

வேறெந்த நாட்டிலும் பார்க்கமுடியாது

எங்களுடையது புனித பூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்
பெண்கள் இங்கு இயற்கையாய் மரிப்பர்
அல்லது தங்களைத் தாங்களே மாய்ப்பர்

தலைநகரில், ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு நேர்ந்ததுகூட
இயற்கை மரணம் என்றே கூறுக.
கயர்லாஞ்சியில் நடந்தது 'தற்கொலை'
என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை 

எங்களுடையது புனிதபூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்



No comments:

Post a Comment