Monday, October 27, 2014

தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?



தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதிலும் இப்போதே அதற்கான அணிசேர்க்கைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. யார் முதல்வர் என்ற கேள்வி ஊடகங்களில் உலாவரத் தொடங்கிவிட்டது. 

தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதென்றும் அதை நிரப்புவதற்கு இந்த நடிகர் வருவாரா அந்த நடிகர் வருவாரா என்றும் ஊடக மாயைகள் உருவாக்கப்படுகின்றன. சினிமாவை வைத்தே பக்கங்களை நிரப்பும் அச்சு ஊடகங்களும், சினிமாவின் நீட்சியாகவே செயல்படும் காட்சி ஊடகங்களும் திரைப்படத் துறையிலிருந்து ரட்சகர்களைக் கண்டுபிடிக்க நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் நாம் அதற்கு இன்னும் எத்தனைகாலம் பலியாகிக்கொண்டிருப்பது? என்ற கேள்வியை யார் கேட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ தலித்துகள் கேட்டுக்கொண்டாகவேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள்தொகை இருபது விழுக்காட்டுக்குமேல் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறுகொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும், மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகைகொண்ட பீஹாரிலும்கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத நிலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது? தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என அறிவிக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என எப்போது தமிழ்நாட்டு தலித்துகள் உறுதிபூணுகிறார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அந்த அரசியல் தற்சார்பு நிலையை உருவாக்குவதே இன்று தலித் இயக்கங்களின் முதன்மையான பணி. 

No comments:

Post a Comment