Sunday, October 5, 2014

மேக்நாத் சாஹா (1893-1956)



சுன்ரி என்ற தீண்டாத சாதியின் உள்சாதியாக பட்டியல்படுத்தப்பட்ட சாஹா சாதியில் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள் பிறந்தவர் மேக்நாத் சாஹா . தற்போது பங்களாதேஷ் என அழைக்கப்படும் அன்றைய கிழக்கு வங்கத்தில் சியோரடாலி என்ற கிராமத்தில்தான் சாஹா பிறந்தார். அம்பேத்கர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த சாஹாவுக்கும் அம்பேத்கருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  அம்பேத்கரைப் போலவே பல்வேறு சமூக இடர்களை சந்தித்தவர். சிறந்த அறிவாளி. சாஹாவும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அம்பேத்கர் இறந்த அதே ஆண்டில் அவரும் இறந்தார். 

பள்ளிப் பருவம்: 

சாஹாவின் தந்தை சிறிய கடை ஒன்றை நடத்திவந்தார். சாஹா சிறு வயதிலேயே அறிவுத் திறனோடு விளங்கினாலும் நல்ல பள்ளியில் அவரைப் படிக்கவைக்கும் அளவுக்கு சாஹாவின் குடும்பத்துக்கு வசதியில்லை. ஆனால் அவரது அறிவாற்றலைக் கண்டுகொண்ட அவரது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அந்த கிராமத்திலிருந்து ஆறு மைல் தொலைவிலிருந்த சிமுலியா என்ற ஊரிலிருந்த நடுநிலைப் பள்ளியில் சாஹாவை சேர்க்கும்படி அவரது தந்தையிடம் சொன்னார்கள். சிமுலியாவில் டாக்டராக இருந்த அனந்த் குமார் என்பவர் தனது வீட்டில் தங்கி வீட்டுவேலைகளைச் செய்தபடி சாஹா படித்துக்கொள்ளட்டும் என்று சொன்னதால் அங்கு சாஹா சேர்க்கப்பட்டார். 

அவரது வகுப்பில் முதல் மாணவனாய்த் தேர்ச்சிபெற்ற சாஹா தனது 12 ஆவது வயதில் டாக்கா நகரத்திலிருந்த தனியார் பள்ளிக்கு உயர்கல்விக்காகச் சென்றார். அங்கு சிறிதளவு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் சாஹாவின் அண்ணன் மாதம் ஐந்து ரூபாய் அனுப்பி தனது தம்பியைப் படிக்க வைத்தார். அங்கு சிறந்த மாணவனாய் இருந்தபோதிலும் சில மாதங்களுக்குமேல் நீடிக்க முடியவில்லை. கவர்னர் பள்ளியைப் பார்வையிட வந்த நாளில் செருப்பு அணியாமல் பள்ளிக்குப் போனதால் அந்தப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அவரது திறமையை அறிந்த இன்னொரு தனியார் பள்ளி அவரை சேர்த்துக்கொண்டது. 

கல்லூரிப் படிப்பு: 

பள்ளிப் படிப்பை முடித்த சாஹா 1911 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்த பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பிஎஸ்சி படிக்கும்போது ஜெர்மன் மொழியைக் கற்றார். வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்து பட்டப் படிப்பை முடித்தார்.அதன்பின்னர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1916 இல் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ரேங்க்கில் பாஸ் செய்ததால் அங்கேயே கணிதத் துறையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே இயற்பியல் துறைக்கு மாறினார். 

ஆராய்ச்சி: 

ரேடியேஷன் ப்ரஷ்ஷர், குவாண்டம் தியரி ஆகியவை குறித்து அவர் வெளியிட்ட கட்டுரைகள் அவருக்கு 1918 ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றுத் தந்தன. 1920 ஆம் ஆண்டு அவர் ionization theory of gases  குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். Astrophysics இல் அவரது ஆய்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

Astro Physics இல் தேர்ந்த விஞ்ஞானியாக இருந்த சாஹா நட்சத்திர மண்டலம் குறித்து thermal ionization of elements என்ற அடிப்படையில் உருவாக்கிய சாஹா சமன்பாடு ( Saha Equation) என்பது அந்தத் துறையில் அதன்பின் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சூரியக் கிரணத்தின் எடையையும் அழுத்தத்தையும் கண்டறிவதற்கான கருவியையும் சாஹா உருவாக்கினார். சுதந்திர இந்தியாவில் இந்திய நதிகளை ஒழுங்கமைக்கும் திட்டங்களை வகுத்தார். அம்பேத்கருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம். 

தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது: 

1917 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலால் அமைக்கப்பட்ட கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை சாஹா பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது:
" தற்போது இருக்கும் ( ஆங்கிலவழிக்கல்வி) முறை மிகவும் இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.மாணவர் இயற்கையாகக் கற்றுக்கொள்வதை இங்கே மறக்கும்படி செய்யப்படுகிறார். ஒவ்வொரு வார்த்தையையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அந்நிய மொழியில்சிந்திக்கும்படி அவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள போதுமான அவகாசம் கொடுப்பதற்குப் பதிலாக 13 - 14 வயதுகொண்ட ஒரு ஆங்கிலேய பையன் பேசுவதைப்போல சரளமாக ஆங்கிலத்தில் பேசும்படி மாணவர்களை நாம் நிர்ப்பந்திக்கிறோம். அதன் விளைவு- அவர் எல்லாவற்றையும் மனதுக்குள் மொழிபெயர்த்து மனப்பாடம் செய்யவேண்டியதாகிறது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர் பிறகு விடுபடவே முடிவதில்லை"

தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்ல ஜனநாயக வகுப்பு:

கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷனுக்கு விஞ்ஞானி மேக்நாத் சாஹா அளித்த பதிலில் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் பயின்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் எடுத்துரைத்திருக்கிறார்: 

" ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ( இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவினர் - depressed class- என அழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. )போதுமான அளவில் சிறப்புக் கவனம் எடுக்கப்படவேண்டும். தற்போது கல்லூரி விடுதிகள் பிராமணர்கள், கயஸ்தா, வைத்யா, நபசாக் ஆகிய ஒருசில பணக்கார வகுப்பினரின் தனியுரிமையாக இருக்கின்றன என்பது பரவலாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை விடுதிகளில் சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் அங்கு அவர்கள் உரிமையோடு இருக்கமுடிவதில்லை, மற்றவர்களின் தயவில்தான் இருக்கவேண்டிய நிலை. அவர்களோடு ஒரே அறையில் தங்குவதற்கும் ஒரே இடத்தில் சாப்பிடுவதற்கும் யாராவது ஒரு உயர்சாதி மாணவன் மறுப்புத் தெரிவித்தால் அந்த துரதிர்ஷ்டம் கொண்ட ஜனநாயக வகுப்பு மாணவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். அவன் தனது அறையிலேயே உணவருந்தும்படி செய்யப்படுகிறான்.அப்படியான பல சம்பவங்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்" என சாஹா அதில் எழுதியிருக்கிறார். அவரே அந்தக் கொடுமைகளை அனுபவித்தவர்தான் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தனி விடுதிகளைக் கட்டும் முயற்சியையும் சாஹா கடுமையாக எதிர்த்தார்:

" பொதுப் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரி விடுதிகளில் மற்றவர்களைப்போலவே தங்களுக்கும் உரிமை உண்டு எபன ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கருதுகின்றனர். சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தங்களை அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.அவர்களுக்கென்று தனியே விடுதிகளைக் கட்டினால் அது சாத்தியமாகாது. அப்படி தனி விடுதி கட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு விடுதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது இருபத்தைந்து விடுதிகளாவது கட்டவேண்டியிருக்கும். " என்று அவர் கேலியாக சுட்டிக்காட்டினார். சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அது பொருந்துகிறது! 

சுபாஷ் சந்திர போஸுடனான உறவு:

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க பல்வேறு திட்டங்களை வகுக்கவேண்டும் என விரும்பிய சாஹா அப்போது பிரபலமாக விளங்கிய சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் விஞ்ஞானிகள் பலரையும் இணைத்து 1938 ஆம் ஆண்டு The National Planning Committee என்ற அமைப்பை உருவாக்கினார். 1949 இல் அது தானே கலைவதற்குள் சுதந்திர இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கென 27 வால்யூம்கள் கொண்ட ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரித்திருந்தது. ஆனால் நேரு அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை என்பது வேரனையளிக்கும் உண்மை. 

அணுசக்தி ஆய்வுக்கு அடித்தளம் இட்டவர்:

இந்தியாவின் அணுசக்தி ஆய்வுக்கு முதலில் அடிகோலியவரும், அணுசக்தியை அமைதிப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என வாதாடியவரும், நேரு காலத்தில் அணு ஆராய்ச்சி ரகசியமாக்கப்பட்டதையும், அணு சக்திக் கமிஷன் உருவாக்கப்பட்டதையும் எதிர்த்துப் போராடியவருமான மேக்நாத் சாஹாவை  அணுசக்தி குறித்து விவாதிப்போர்கூட நினைவுகூர்வதில்லை  என்பது வேதனையானது. 

செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதனை படைத்திருக்கும் நமது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இன்னும் சாதியைக் கடக்கவில்லை என்பதற்கு இப்போதும் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் மேக்நாத் சாஹாவின் பெயரே சாட்சி ! 





2 comments:

  1. சமூக விடுதலைக்காக போராடிய எத்தனையோ மனிதர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றது. இத்தகைய பதிவுகள் அந்தக் குறையை நீக்கக் கூடியவை. வாழ்த்துகள்.

    அதே போன்று உஸ்மானிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் காஞ்சா இலையா (Dr. Kancha Ilaiah) அவர்களைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள். அவர்கள் தலித் விடுதலைக்காக உழைத்து வரும் மிகப் பெரிய சமூக போராளி!.

    ReplyDelete
  2. உள்ளபடியே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அண்ணா. 2014 லேயே இவரைப்பற்றி நீங்கள் எழுதியது என்பது, உங்களிடம் தேடல் மற்றும் ஆய்வறிவைக் காட்டுகிறது.

    ReplyDelete