Monday, July 28, 2014

தலித்துகள் சிறுபான்மையினரா?


ஒடுக்கப்பட்ட மக்களை சிறுபான்மையினர் என்று அம்பேத்கர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களுக்கு சில சலுகைகளைப் பெற்றுத் தருவதற்காக அம்பேத்கர் கையாண்ட யுக்தி இது. அதன்மூலம் சில காப்புக்கூறுகளை அவரால் பெற்றுத்தர முடிந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த யுக்தி இன்றைக்கும் பயன் தரக்கூடியதா என்பதை நாம் பரிசீலிக்கவேண்டும். 


தலித்துகளை சிறுபான்மையினர் எனக் கூறும்போது அது அவர்களின் உளவியலில் நிகழ்த்தும் தாக்கம் எத்தகையது என்பது கவனிக்கப்படவேண்டும். தம்மை சிறுபான்மையாக எண்ணும் ஒரு மனிதன் பெரும்பான்மையின் தயவிலேயே வாழவேண்டும் என்று நம்புகிறான். பெரும்பான்மை என்பது எதிர்க்கப்பட முடியாதது எனக் கருதுவது மட்டுமின்றி பெரும்பான்மைக்கே எல்லாவித உரிமைகளும் சொந்தம் என்றும் எண்ணிக்கொள்கிறான். இன்னொரு புறத்தில் பெரும்பான்மை என சான்றளிக்கப்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவன் அதிகாரம் அனைத்தும் தமக்கே சொந்தம் எனக் கருதுவதும், சிறுபான்மையினருக்கென்று தனியே உரிமை எதுவும் கிடையாது தாம் மனமிறங்கி ஏதாவது சலுகை வழங்கினால் அதைப் பெற்றுக்கொள்வதுதவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று  இறுமாப்பு கொள்கிறான். 


கிறித்தவர்களும் இஸ்லாமியரும் சிறுபான்மை மதத்தினர் எனச் சொல்லப்பட்டாலும் உலக அளவில் அவர்கள் பெரும்பான்மையின் பகுதியாகவே தம்மை உணர்கிறார்கள். அதனால் சிறுபான்மை என்ற பலவீன உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதில்லை. தலித்துகளுக்கு இத்தகைய சர்வதேசப் பிணைப்போ பாதுகாப்போ இல்லாததால் எப்போதும் அவர்கள் பெரும்பான்மை குறித்த அச்சத்திலேயே வாழவேண்டியுள்ளது. 


இந்திய அளவில் தீண்டாமை என்ற சமூகக் கொடுமைக்கு ஆளானவர்களை ஒரே பட்டியலின்கீழ் கொண்டுவந்ததன்மூலம் தலித் மக்களுக்கு எண்ணிக்கை அடிப்படையிலான பலத்தை அம்பேத்கர் வழங்கினார். அந்தப் பட்டியலின்கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட மக்கள் ஒரு மாநிலத்துக்குள் வேண்டுமானால் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் இந்திய அளவில் பார்த்தால் எந்தவொரு சாதியைவிடவும் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மைதான். 


இந்திய அளவில் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தாலும் தலித்துகள் தம்மைப் பெரும்பான்மையாகக் கருதிக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு முதன்மையான காரணம் அவர்கள் இன/ மொழி அடையாளத்துக்குள் கட்டுண்டு கிடப்பதுதான். 


கால காலத்துக்கும் தம்மைச் சிறுபான்மையினராக்கி முடக்கிப்போட்டிருக்கும் இன/ மொழி தளைகளிலிருந்து விடுபட்டுத் தம்மைப் பெரும்பான்மையினராகக் கருதுவதன்மூலம் உளவியல்ரீத்தியான உத்வேகத்தை அவர்கள் பெற முடியும். சலுகைகளுக்காகக் கெஞ்சாமல் உரிமைகளுக்காகப் போராடும் சூழல் அப்போதுதான் அவர்களுக்கு வாய்க்கும். 

Friday, July 25, 2014

தாராசுரம்: தமிழ் பௌத்த வரலாற்றுக்கான திறவுகோல் - ரவிக்குமார்


சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் நான் சென்றிருந்தேன்.  கம்பீரமாக எழுந்து நிற்கும் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான பிரகாரத்தைத் தாண்டி அந்தக் கோயிலின் சிறப்பாகக் கருதப்படும் ராஜகம்பீர மண்டபம் இருக்கிறது.  குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் ரதத்தைப்போன்ற அமைப்புடன் அந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  அந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களில் மிகவும் நுட்பமாக அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  கோயில் கருவறையைச் சுற்றியுள்ள புறச்சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய வரலாறுகளை அறிவிக்கும் சிற்பங்கள் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளன.  திருச்சுற்று மாளிகையின் வடபுறத்தில் சிவாச்சாரியர்கள் 108 பேர்களுடைய சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  அவை மட்டுமின்றி நடன வகைகளையும், விளையாட்டுகளையும், போர்க்காட்சிகளையும் சித்தரிக்கின்ற அழகிய சிற்பங்களும் அங்கே காணப்படுகின்றன.  ராஜ கம்பீர மண்டபத்தின் கீழே செதுக்கப்பட்டிருக்கும் குதிரைக்கும் தேர்ச் சக்கரத்துக்கும் இடையில் அந்த மண்டபத்தின் பீடத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது.  வெளியிலிருந்து பார்க்கும்போது அது தெரிவதில்லை.  தேர்ச் சக்கரத்திற்குக் கீழே குனிந்து பார்த்தால்தான் அது பார்வைக்குத் தென்படுகிறது.அதுமட்டுமின்றி கருவறையின் புறச் சுவரில் இடதுபுறமாக இன்னொரு புத்தர் சிலையும் இருக்கிறது.அந்தச் சிலையின் அருகில் கோயில் மொன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது.நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோரது சிலைகள் நிறைந்து சைவ சமயத்தின் மேலாதிக்கம் மிளிரக் காட்சியளிக்கும் அந்தக் கோயிலில் புத்தர் சிலை ஏன் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குப் புதிராக இருந்தது.  

2.

'தாராக வண்டந் தொடுத்தணிந்தார்
தமக்கிடம்  போதத் தமனியத்தாற்
சீராச ராசீச் சரஞ்சமைத்த
தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே'

என்று தக்கயாகப் பரணியில் போற்றப்படுகின்ற இரண்டாம் ராசராசனால் எடுப்பிக்கப்பட்ட கோயில்தான் தாராசுரத்தில் அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் சிவன்  கோயில் ஆகும்.  இந்தக் கோயில் குறித்து தி.வை. சதாசிவ பண்டாரத்தார் தனது பிற்காலச் சோழர் வரலாறு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : 'தான் வசித்து வந்த இராசராசபுரம் என்னும் பெருநகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலாயம் ஒன்று எடுப்பித்து அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து  வழிபாடு புரிந்தனன்.  ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கன் யாகம் அழிக்கப்பட்டப் பிறகு உமா தேவியாருக்கு போர்க்களம் காட்டி அங்கு இறந்தவர்கள் எல்லோர்க்கும் அருள் புரியும் பொருட்டு இராசராசபுரி ஈசர் எழுந்தருளினார் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  கண்டோர் கண்களைப் பிணிக்கும் சிற்பத் திறம் வாய்ந்து முற்காலத்தில் பெருமையுடன் நிலவிய அம்மாடக் கோயில் இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து அழிவுற்ற நிலையில் உளது.'( பக்: 365 & 366)  1974ம் ஆண்டில் சாதாசிவ பண்டாரத்தார் எழுதியபோது அந்தக் கோயில் அவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில்தான் இருந்துள்ளது.  ஆனால், இப்போது அது தனது பழைய பொலிவோடு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. யுனெஸ்கோ அமைப்பால் ‘ உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக ‘ அறிவிக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், சிவபுரம் ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்கள் சூழ இருப்பதுதான் தாராசுரம்.  இந்த ஊரின் உண்மையான பெயர் தெரியவில்லை.  அங்கு இரண்டாம் ராசராசன் கோயிலைக் கட்டியதால் அவனது பெயரால் அவ்வூர் ராஜராஜ ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.  அதை மூன்றாம் ராசராசனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.  பின்னர் பாண்டிய மன்னர்களின் ஆக்கிரமிப்பின்போது ராஜராஜ ஈஸ்வரம் என்ற பெயர் சுருக்கப்பட்டு ராராசுரம் என்று அழைக்கப்பட்டது.  அங்கிருக்கும் சிவபெருமான் ராராசுரமுடையார் என்று அறியப்பட்டார்.  அதன்பின்னர் அந்த ஊரின் பெயர் ராராபுரம் என மாற்றி அழைக்கப்பட்டதென்று வீரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம்.  கி.பி 1408ல் மீண்டும் அந்த ஊருக்கு ராராசுரம் என்ற பெயர் சூட்டப்பட்டது.  ஆனால் அது தாராசுரம் என எப்போதிருந்து அழைக்கப்படுகிறது என்ற வரலாறு எவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. 

இந்தக் கோயிலில் 30 கல்வெட்டுகள் உள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த பி.ஆர். ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகின்றார்( ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ, ணிதிணிளி,றிணீக்ஷீவீs, 1987). இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதென்று வரலாற்றாசிரியர்கள் நினைத்திருந்தனர்.  அவன் காலத்தில் வெட்டப்பட்ட திருபுவனம் கோயில் கல்வெட்டில் அவ்வாறு குறிப்பு உள்ளது.  ஆனால், கோயிலின் கிழக்கு பிரகாரச் சுவரில் இரண்டாம் ராசராசன் கல்வெட்டு உள்ளது.  இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் ராச கம்பீர மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இரண்டாம் ராச ராசன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென்ற குறிப்பே காணப்படுகிறது. 

இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி.1150 இறந்த பிறகு அவன் புதல்வனாகிய இரண்டாம் ராசராசன் சக்கரவர்த்தியாக மூடிசூட்டிக்கொண்டான். அவனது தந்தை ராஜகேசரி என்ற பட்டம் உடையவனாக இருந்தான்.  இவன் பரகேசரி என்ற பட்டப்பெயரோடு சோழ நாட்டை ஆட்சி செலுத்தினான்."இரண்டாம் ராசராசனின் கல்வெட்டுகள் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஜில்லாக்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்குநாடு, கங்க நாடு ஆகியவை இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது திண்ணம்.  ஆகவே இவன் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்-கு உட்பட்டிருந்த நாடுகளெல்லாம் சோழ ராஜ்ஜியத்திலிருந்து விலகாமல் இவன் ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்துவந்தன எனலாம்." என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார் (பக்.360). 

இவனுடைய ஆட்சிக்காலத்தில் மலையமலை பக்கத்தில் காவிரி ஆறு அடைப்புண்டு கிழக்கு நோக்கித் தண்ணீர் வராமல் தடைபட்டதாகவும் அதனை அறிந்த இரண்டாம் ராசராசன் அந்த மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரி ஆற்றிற்கு வழி கண்டு சோழ நாட்டுக்குத் தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்தான் என்றும் தக்கயாகப் பரணியை அடிப்படையாகக் கொண்டு சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்( பக்: 367).  இவனது ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராய் இருந்தது.  அதன்பிறகு அவன் பழையாறை நகரைத் தலைநகராக ஆக்கிக்கொண்டான்.  அதன் பின்னர் அந்த ஊர் ராஜராஜபுரி என்று சிறப்போடு அழைக்கப்பட்டது.  

தாராசுரத்தில் இருக்கும் ஐராவதேஸ்வரர் கோயிலில் துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.  அந்தச் சிலைகள் மேற்கு சாளுக்கிய நாட்டின் தலைநகராக இருந்த கல்யாணபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக  கீழ் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக ஆட்சி செய்த இரண்டாம் ராசராசன் அந்த சிலைகளைக் கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை.  அவை முதலாம் ராஜாதிராஜனின் காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
3.

சோழர்கால கோயில்களின் கட்டடக்கலை குறித்து ஆராய்ந்த சுரேஷ்பிள்ளை தனது நூலில் (ஷிtuபீஹ் ஷீயீ ஜிமீனீஜீறீமீ கிக்ஷீt, 1976) தாராசுரம் கோயில் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறார். அக்கோயிலில் பௌத்த கட்டடக்கலையின் தடயங்கள்காணப்படுவதாக அவர் கூறுகிறார்.              ‘‘திருவலஞ்சுழி கோயிலும் தாராசுரம் கோயிலும் பௌத்தத்தின் இருவேறு பிரிவுகளை‘‘ பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுரேஷ்பிள்ளை குறிப்பிடுகின்றார்.  திருவலஞ்சுழி கோயில் மாகாயானப் பிரிவையும், தாராசுரம் கோயில் ஹீனயானப் பிரிவையும் சேர்ந்தவை என்று அவர் கூறுகிறார்.  பழையாறையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்கள் அந்தப் பகுதியில் இருந்த பௌத்த ஆலயங்களையெல்லாம் மாற்றி சிவாலயங்களாக உருவாக்கினார்கள் என்று கூறும் சுரேஷ்பிள்ளை அவ்வாறு மாற்றப்பட்ட கோயில்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்றிருந்தால் அது இந்துக் கோயில், இல்லாவிட்டால் அது பௌத்தத்தோடு அல்லது சமணத்தோடு தொடர்பு கொண்டதாயிருக்கும் என்று அவர் விவரிக்கிறார். 

பௌத்தத்தை ஆதரித்து வந்த மன்னர்களுக்குப் பிறகு சைவ வைணவத்தை நோக்கி சோழ மன்னர்களின் ஆதரவு திரும்பிவிட்டது.  ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் அரச ஆதரவைப் பெற்றிருந்த பௌத்த கலைமரபால் பேணி வளர்க்கப்பட்ட கைவினைஞர்களிடம் இந்த மாற்றம் எந்த ஒரு பெரிய மாறுதலையும் ஏற்படுத்திவிடவில்லை.   சோழர்காலச் சிற்பிகள் பௌத்த கலை மரபின் கூறுகளைக் கைவிடாமலேயே தொடர்ந்தும் சிற்பங்களை செதுக்கி வந்தனர்.  கோயில்களை உருவாக்கினர். 

‘‘தாராசுரம் கோவிலில் கருவறைக்கு மேலிருக்கும் விமானத்தில் ஸ்தூபி போன்ற வடிவம் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.  பௌத்த ஸ்தூபிகளின் சிறிய வடிவங்களைப்போல அவை அமைக்கப்பட்டிருக்கின்றன’’ என்று குறிப்பிடும் சுரேஷ்பிள்ளை தாராசுரம் கோயிலை நுணுகி ஆராய்ந்தால் அது உண்மையான தமிழ் பௌத்த வரலாற்றைப் புலப்படுத்துவதாக இருக்கும் என்கிறார்.  கருவறையின் புறச்சுவரில் இருக்கும் ஒரு மாடத்தில் சிவன் பார்வதி சிலைகள் உள்ளன.  அச்சிலைகளின் இருபுறமும் மன்னர்கள் அல்லது கந்தர்வர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  அந்த மாடத்தின் மேல்பகுதியில் கபோதமும்,  கூடும், யாளி வரிசையும் பொருத்தமில்லாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன.  கூடு பகுதியில் தர்ம சக்கரம் வரிசையாக செதுக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய சிற்ப அமைப்பு அந்த மாடத்தில் அதற்கு முன்பு புத்தரின் சிலை இருந்திருக்கவேண்டும் என்ற யூகத்துக்கு வழிவகுக்கிறது என்கிறார் சுரேஷ்பிள்ளை.

தாராசுரம் கோயிலின் கட்டட அமைப்பு குறித்தும் சிற்பங்கள் குறித்தும் ஆராய்ந்து அவற்றின் மூலம் வெளிப்படும் பௌத்த கலை மரபின் அடையாளங்களை எடுத்துக் கூறியிருக்கும் சுரேஷ்பிள்ளை ராஜகம்பீர மண்டபத்தின் பீடத்தில் செதுக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை குறித்தோ அல்லது புறச் சுவரில் காணப்படும் புத்தர் சிலை குறித்தோ தமது நூலில் ஓரிடத்திலும் குறிப்பிடாதது வியப்பளிக்கிறது.  அந்தச் சிலைகள் அவரது பார்வைக்கு வராமல் போனது எப்படி என்று தெரியவில்லை.  ஆனால் அந்தச் சிலைகள் நீண்டகாலமாகவே அங்குதான் இருந்து வந்துள்ளன.  தாராசுரம் கோயிலைப்பற்றி பிரஞ்சு மொழியில் இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கும் பிரான்சுவா எர்னோ (ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ - திக்ஷீணீஸீநீஷீவீsமீ லி பிமீக்ஷீஸீணீuறீt, ணிதிணிளி, றிணீக்ஷீவீs 1987 மிமி க்ஷிஷீறீ.) அம்மையார் ராஜகம்பீர மணடபத்தின் பீடத்தில் இருக்கும் புத்தர் சிலை குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  அந்தச் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டு பத்மாசன முறையில் புத்தர் அமர்ந்திருப்பதாகவும் அவரது கரம் ஞானமுத்திரையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

4.

தாராசுரம் கோயிலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1984ஆம் ஆண்டில் அகழ்வாய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது.  கோயிலின் நுழைவாயிலுக்கும் ராஜகம்பீர மண்டபத்திற்கும் இடையில் உள்ள பிரகாரத்தில் அந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  தற்போது ஒளரங்காபாத்தில் பணிபுரியும் திரு. தயாளன் தலைமையில் தொல்லியல் துறையைச் சேர்ந்த குழுவினர் அந்த ஆய்வை மேற்கொண்டதாக அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த முனைவர் ராஜவேலு தெரிவித்தார்-.  தராசுரம் கோவிலில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அந்தக் கோயில் பௌத்த கலைமரபின் கூறுகளைக் கொண்டிருப்பதாக சுரேஷ்பிள்ளை எழுதியிருப்பதைப் பற்றியும் நான் அவரிடம் தெரிவித்தபோது தாங்கள் மேற்கொண்ட அகழ்வாய்வு பற்றி அவர் சொன்னார்.  அந்த அகழ்வாய்வின்போது ஏற்கனவே அங்கு இருந்த கட்டிடம் ஒன்றின் அஸ்திவார அமைப்பைத் தாங்கள் கண்டதாகவும் அது பூம்புகார் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கட்டிட அமைப்பை ஒத்ததாக இருந்ததென்றும் சொன்னார். ஆனால் ஆய்வு முடிந்ததும் அந்தப் பகுதி மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.  நான் திரு. தயாளன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தாராசுரம் அகழ்வாய்வைப் பற்றிக் கேட்டபோது அந்த அகழ்வாய்வில் நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகள் சில கிடைத்ததாகவும் உடைந்த நிலையில் சிற்பங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.  ஆனால், அங்கிருக்கும் புத்தர் சிலைகள் குறித்து அவரால் விளக்கம் எதையும் தரமுடியவில்லை. 

தாராசுரம் கோயிலில் புத்தர் சிலைகள் இருப்பதாலேயே அதை ஒரு பௌத்தக் கோயில் என்று முடிவுகட்டிவிட முடியாது.  கலை வரலாற்றிஞரான சுரேஷ்பிள்ளை அந்தக் கோயிலின் கட்டடக்கலையில் தென்படும் பௌத்த கலை மரபு சார்ந்த கூறுகளை எடுத்துக்காட்டி புகைப்பட ஆதாரங்களோடு 1976ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.( மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ tலீமீ stuபீஹ் ஷீயீ tமீனீஜீறீமீ ணீக்ஷீt, ணிஹீuணீtஷீக்ஷீ ணீஸீபீ விமீக்ஷீவீபீவீணீஸீ, 1976)   அதன் பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும் தாராசுரம் குறித்த நூலில் சுரேஷ்பிள்ளையின் நூலைப் பற்றியோ அவர் தெரிவித்த கருத்துகளைப் பற்றியோ எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.  அதுமட்டுமின்றி அந்தக் கோயில் குறித்து எழுதிய வேறு எவரும்கூட அதைப்பற்றி விவாதிக்கவில்லை.  இந்த மௌனம் தான் நமக்கு வியப்பளிப்பதாக இருக்கிறது.  சுரேஷ்பிள்ளை சொல்லியிருப்பதைப் போல தாராசுரம் கோயில் குறித்த கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆய்வு தமிழ் பௌத்தத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்றே தோன்றுகிறது.அதைச் செய்யப்போகும் கலை வரலாற்றறிஞர் ஒருவருக்காகக் காத்திருக்கிறது அந்தக் கோயில்.


பயன்பட்ட நூல்கள்:

1.சதாசிவ பண்டாரத்தார் தி.வை 1974, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்,சிதம்பரம்

2.Pillai, Suresh B  ,1976 , Introduction to the study of temple art, Equator and Meridian, Thanjavur 

3.Francoise L Hernault, 1987, Darasuram, EFEO, Paris 

Tuesday, July 22, 2014

ஓடுவதற்கான உத்தரவு - லேனா கலாஃப் துஃபாஹா தமிழில்: ரவிக்குமார்



அவர்கள் தொலைபேசியில் அழைக்கிறார்கள்
குண்டுகளைப் போடுவதற்கு முன்பு
தொலைபேசி அடிக்கிறது
எனது பெயரைத் தெரிந்த யாரோ அழைக்கிறார்கள் 
சுத்தமான அரபியில் சொல்கிறார்கள் " டேவிட் பேசுறேன்"
குண்டுகள் விழும் ஒலியும் கண்ணாடிகள் நொறுங்கும் சப்தமும் கலந்த இசைக் கோர்வையின் பின்னணியில் நான் சிந்தித்துப் பார்க்கிறேன் " எனக்கு டேவிட் என்று யாரையாவது தெரியுமா? "
அவர்கள் ஃபோன் செய்து ஓடச் சொல்கிறார்கள் 
இந்தச் செய்தி முடிந்ததும் உங்களுக்கு 58 நொடிகள் உள்ளன
உங்கள் வீடுதான் அடுத்த இலக்கு
போர்க்காலக் கருணையென இதை அவர்கள் நினைத்திருக்கலாம்
ஓடுவதற்கு ஒரு இடமும் இல்லையென்றாலும்கூட

இதற்கு எந்த அர்த்தமுமில்லை
எல்லைகள் மூடப்பட்டுவிட்டன உங்கள் கடவுச்சீட்டு செல்லாமல்போய்விட்டது
கடலால் சூழப்பட்ட இந்த இடத்தில் நீங்கள் ஆயுள் கைதியாக இருக்கிறீர்கள்
பாதைகள் குறுகிப்போய்விட்டன
உலகில் வேறு எந்த இடத்தைவிடவும் மனிதர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் பகுதி இது
' ஓடுங்கள்' அவர்கள் சொல்வது அவ்வளவுதான்

நாங்கள் உங்களைக் கொல்வதற்கு முயற்சிக்கவில்லை
நாங்கள் தேடும் நபர்கள் உங்கள் வீட்டில் இல்லையென்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டுமென்பதுகூட அவசியமில்லை
நீங்களும் உங்கள் குழந்தைகளும்தவிர வேறெவரும் வீட்டில் இல்லை
கால்பந்துப் போட்டியில் நீங்கள் அர்ஜெண்டினாவுக்காக ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறீர்கள்
இந்த வாரத்து ரேஷன் ரொட்டியின் கடைசித் துண்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
மின்சாரம் நின்றுபோனால் கொளுத்துவதற்கு மிச்சமிருக்கும் மெழுகுவர்த்திகளைக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் 
எதுவும் பொருட்டல்ல
உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றன என்பதுகூட ஒரு விஷயமல்ல
நீங்கள் தவறான இடத்தில் வாழ்கிறீர்கள்
இல்லாத இடத்தைத் தேடி
ஓடுவதற்காகக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு
இந்த 58 நொடிகளில்
உங்கள் திருமண ஆல்பத்தைத் தேடியெடுக்கமுடியாது
உங்கள் மகனுக்குப் பிடித்த போர்வையை எடுத்துக்கொள்ள முடியாது
உங்கள் மகளின் அரைகுறையாய் பூர்த்தி செய்யப்பட்ட கல்லூரி விண்ணப்பத்தை எடுத்துக்கொள்ள முடியாது
வீட்டிலுள்ளவர்களைக் கூப்பிடக்கூட முடியாது
எதுவும் பொருட்டல்ல 
நீங்கள் யாரென்பதுகூட பொருட்டல்ல
நீங்கள் மனிதர்தான் என்பதை நிரூபியுங்கள்
நீங்கள் இரண்டு கால்களில்தான் நிற்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள் 
ஓடுங்கள்" 

( பாலஸ்தீனிய அமெரிக்க எழுத்தாளரான லேனா கலாஃப் துஃபாஹா 21.7.2014 அன்று எழுதிய கவிதை இது. ) 


Saturday, July 19, 2014

எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்

இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்நீத்த பாலஸ்தீன மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தக் கவிதையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறேன்

==========


எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்


- நிஸார் கப்பானி 

தமிழில்: ரவிக்குமார் 

=========


துண்டு துண்டாகிச்  சிதைந்து 

அழிந்ததுபோக  

எஞ்சியிருக்கும் எம் தாய்நாட்டைப்பற்றிப் பேசினால் 


தனக்கென ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருக்கும் 

முகமற்ற எம் தேசத்தைப்பற்றிப் பேசினால் 


எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


ஒப்பாரியையும் ஓலத்தையும் தவிர 

தொன்மையான தனது இலக்கியங்களெல்லாம் அழிந்துபோன 

தாய்நாடு  


தன்னிடம் சுதந்திரமோ கருத்தியலோ இல்லாத 

தாய்நாடு 


ஒரு செய்தித்தாளை வாங்குவதையோ வானொலியைக் கேட்பதையோ 

தடை செய்திருக்கும் தாய்நாடு 


பறவைகள் பாடமுடியாத தாய்நாடு

படைப்பாளிகள் பயத்தின் காரணமாக 

கண்ணுக்குப் புலப்படாத மையைக்கொண்டு  எழுதும் தாய்நாடு 


மண்ணிலிருந்து மனிதர்களிடமிருந்து விலகி 

அவர்களது துயரங்களை ஒதுக்கிவிட்டு 

அந்நிய மொழியில் அந்நிய ஆன்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் 

எல்லைகளற்ற , இறக்குமதியான 

எமது கவிதையைப்போல இருக்கும் தாய்நாடு 


எந்தவித கௌரவமும் இல்லாமல்

பேச்சுவார்த்தைக்குப் போன தாய்நாடு 


ஆண்களில்லாத பெண்கள் மட்டுமே வாழும் தாய்நாடு 


எமது வாயில் பேச்சில் விழிகளில் கசப்பு 

தொன்மைக்காலம் தொட்டு 

எம்மிடம் கையளிக்கப்பட்ட பாரம்பரியத்தை 

அழித்துவிட்டதா ?


எமது தேசத்தில் எந்த உடலும் இல்லை 

அவமானப்பட்ட உடல்களும் இல்லை 

வண்ணமயமான எமது வரலாற்றை 

சிலர் சர்க்கஸாக மாற்றும்போது 

எமக்கேயுரிய ரொட்டியை வெண்ணையைக் 

கைவிடும்போது 'கூடாது ' எனச் சொல்ல எவருமில்லை 


ஆட்சியாளரின் அந்தப்புரத்தில் கற்பை இழக்காத 

ஒரேயொரு கவிதைகூட எம்மிடம் இல்லை 


நாங்கள் அவமானத்தோடு வாழப் பழகிவிட்டால் 

மனிதனென்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கும் ? 


எம்மை இருட்டிலிருந்து மீட்க 

எமது பெண்களை நெருப்பின் கொடுமையிலிருந்து காப்பாற்ற 

எவரேனும் ஒரு மாமனிதர் வரமாட்டாரா என

வரலாற்று நூலில் தேடினேன் 


நேற்றைய மனிதர்களைத் தேடினேன் 

எனக்குக் கிடைத்ததென்னவோ எலிகளின் ஆதிக்கத்துக்குப் பயந்த பூனைகள்தான் 


நாங்கள் தேசிய குருட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா 

அல்லது நிறக் குருடா 


எங்கள்மீது பயங்கரவாதக் குற்றத்தைச் சுமத்துகிறீர்கள் 

எமது ஒற்றுமையை 

எமது வரலாற்றை 

எமது பைபிளை குர் ஆனை 

நபிகளின் தேசத்தை 

நாசமாக்கிக்கொண்டிருக்கும் 

இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்குப் பணியமறுப்பதால் 


அதுதான் நாங்கள் செய்த பாவம் அல்லது குற்றம் என்றால் 

பயங்கரவாதம் என்ற அடையாளமும் சரிதான்


மங்கோலிய யூதக் காடையர்களால் 

அழித்தொழிக்கப்படுவதற்கு சம்மதிக்காததால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 

கெய்சுராஸ் மன்னரால் ரத்துசெய்யப்பட்ட 

பாதுகாப்புச் சபையைக் கல்லெறிந்து நொறுக்குவதால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


ஓநாயிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால் 

விலைமாதுவிடம் செல்லாததால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


அமெரிக்கா  எமது பண்பாட்டின்மீது போர் தொடுக்கிறது 

ஏனெனில் அதற்கென ஒரு பண்பாடு இல்லை 

எமது நாகரிகத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது 

ஏனெனில் அதற்கு நாகரிகம் தேவை 

அமெரிக்கா ஒரு மிகப்பெரிய கட்டடம் 

சுவர்தான் இல்லை 


எம்மைப்  பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 

திமிர்பிடித்த பலம்பொருந்திய பணக்கார அமெரிக்கா 

ஹீப்ருவை வியாக்கியானப்படுத்தும் ஒரே குரலாக மாறிவிட்ட 

இந்த நிகழ்காலத்தை நாங்கள் ஏற்க மறுப்பதால்

Wednesday, July 16, 2014

அப்பாவித்தனத்தின் அரசியல்



ஆடி மாதம் என்றாலே அது தள்ளுபடிகளின் காலம் என்று ஆகிவிட்டது.' ஆடிப் பட்டம் தேடி விதை ‘ என்று விவசாயிகளால் முக்கியத்துவத்தோடு குறிப்பிடப்பட்ட மாதம் அது. ஆனால் அந்த மாதத்தில் திருமணம் செய்வதில்லை என்ற காரணத்தால் சுபகாரியங்களைச் சார்ந்திருக்கும் வணிக நிறுவனங்கள் ஆடி மாதத்தில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தன. அந்த நிலையை மாற்ற அவர்கள் கண்டுபிடித்த அருமையான டெக்னிக்தான் ‘ ஆடித் தள்ளுபடி’ . நாம் கொடுக்கும் காசைவிடக் கூடுதலாகக் கொஞ்சம் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்பார்கள்.இப்போதோ துணிக்கடைகளில் ஆடி மாதங்களில் கூட்டம் அலையடிக்கிறது. உண்மையிலேயே தள்ளுபடி கிடைக்கிறதா என்பதையெல்லாம் எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. விளம்பரங்களை அப்படியே நம்பித்தான் நாம் பொருட்களை வாங்குகிறோம். பட்டணத்தில் இருந்தாலும் இந்த வகையில் நாமெல்லாம் பாமரர்கள்தான்.

 

தள்ளுபடி மட்டுமல்ல அதைப்போலவே  இன்னும் பல ‘ மூடநம்பிக்கைகள்’ நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் புத்திசாலிகள் கிராமங்களில் வாழ்பவர்கள் அப்பாவிகள் என்பது அப்படியான நம்பிக்கைகளில் ஒன்று.நான் கல்லூரியில் படிக்கும்போது எனது தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஜோக் சொன்னார். ஒரு கிராமத்து அப்பாவி சென்னைக்குக் கிளம்பினார். உடனே அவருடைய நண்பர் அவரிடம் எச்சரிக்கை செய்தார். “ மெட்ராஸ்ல ஜாக்கிரதையா இருக்கணும். கிராமத்து ஆள் என்று தெரிந்தால் ஏமாற்றிவிடுவார்கள். ஏதாவது வாங்கினால் இரண்டு மடங்கு விலைசொல்லித் தலையில் கட்டிவிடுவார்கள். நீ எதை வாங்கினாலும் என்ன விலை சொல்கிறார்களோ அதில் பாதி விலைக்குக் கேள்” என்று புத்திமதி சொன்னார். கிராமத்து அப்பாவியும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். பாரீஸ் கார்னர் பகுதிக்குப் போனார். பிளாட்பாரத்தில் சட்டைகளை விற்றுக்கொண்டிருந்த வியாபாரி அந்த அப்பாவியை அழைத்து சட்டை வாங்கச் சொன்னார். அவரும் விலை கேட்டார்.‘ நூறு ரூபாய்’ என்றார் வியாபாரி. நம் கிராமத்து அப்பாவி உஷாரானார். அவருக்கு நண்பர் செய்த உபதேசம் நினைவுக்கு வந்தது. ”ஐம்பது ரூபாய்க்கு தருவியா?” என்று கேட்டார். போணியாகாமல் கடுப்பில் இருந்த வியாபாரிக்கோ ஆத்திரம் பிய்த்துக்கொண்டு வந்துவிட்டது. “ ஏன் சும்மாவே எடுத்துட்டு போயேன்” என்றார் எரிச்சலோடு. நம் அப்பாவி அப்போதும் சளைக்கவில்லை. சும்மா எடுத்துக்கொண்டுபோவதா ? இதிலும் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது, நாம் ஏமாந்துவிடக்கூடாது என்று எண்ணியபடி ‘ அப்படீன்னா ரெண்டு சட்டை தருவியா?” என்றார் கூலாக.

 

கிராமத்து ’அப்பாவித்தனத்தை’ எடுத்துச் சொல்லும் இப்படியான கதைகள் உலகம் பூராவும் இருக்கின்றன. ரஷ்யாவும் அதற்கு விதிவிலக்கல்ல.கொடுங்கோன்மைக்குப் பெயர்போன ஜார் மன்னன் ரஷ்யாவை  ஆண்டுகொண்டிருந்த நேரம்.ஒரு கிராமத்து அப்பாவியும் அவனது இளம் மனைவியும் தங்கள் வயலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கமாக வந்த படை வீரன் ஒருவன் அவர்களைப் பார்த்துவிட்டான். அப்பாவியின் இளம் மனைவியை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில் குதிரையிலிருந்து குதித்து அந்த அப்பாவியைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த அப்பாவியின் மனைவியோ வீரனின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். உன் கணவனை உயிரோடு விடவேண்டுமென்றால் நீ எனக்கு இப்போது மனைவியாகவேண்டும் என்றான் வீரன். அவளது கதறலை அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தனது அங்கியைக் கழற்றி அந்த அப்பாவியிடம் கொடுத்து “ இதை அழுக்காகாமல் ஜாக்கிரதையாக வைத்திரு. இதில் புழுதி பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியபடி அந்த வீரன் அப்பாவியின் மனைவியின்மீது பாய்ந்து அவளை பலாத்காரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். கிராமத்து அப்பாவியோ அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. எல்லாம் முடிந்து அங்கியை வாங்கி அணிந்துகொண்டு குதிரையில் ஏறி வீரன் போய்விட்டான். அவன் சென்று மறைந்ததும் அந்த கிராமத்து அப்பாவி துள்ளிக் குதித்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான். தனது கண் முன்னாலேயே மனைவியை ஒருவன் கெடுத்துவிட்டுப் போகிறான். அதைத் தடுக்காதது மட்டுமல்ல சிரித்துக் கும்மாளம் போடுகிறானே என்ன மனிதன் இவன் என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம். அவனை ஓங்கிக் கன்னத்தில் அறைந்து ‘’ மானம் கெட்டவனே ஏன்டா இப்படி சிரிக்கிறே? “ என்று அவள் கத்தினாள். அவன் கூலாகப் பதில் சொன்னான்: “ அந்த ஆள் என்னிடம் அங்கியைக் கொடுத்து அழுக்குப் படாமல் வைத்திருக்கச் சொன்னானில்லையா? அவன் உன்மீது பாய்ந்த நேரத்தில் நான் நன்றாக அந்த அங்கியைப் புழுதியில் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டேன். தனது அங்கி அழுக்கானது தெரியாமல் அதை அணிந்துகொண்டு போகிறான் அந்த முட்டாள் “ என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான் அந்த அப்பாவி.

 

இப்படியான அப்பாவிகள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பங்குச் சந்தைகளில் கடும் சரிவு. பொருளாதார மந்த நிலை என்று நிபுணர்கள் அதைக் குறிப்பிட்டார்கள். உடனே சில விமர்சகர்கள் மகிழ்ச்சியில் கூத்தாட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்! அமெரிக்கா குளோஸ்! என்றார்கள். அப்படித்தான் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோதும் அவர்கள் கொண்டாடினார்கள். பலவந்தம் செய்கிறவனைத் தடுக்கத் திராணியின்றி அவனது அங்கியை அழுக்காக்கிய அப்பாவியைப் போன்றவர்கள்தான் அவர்கள் என்கிறார் ஸ்லாவோஸ் சிசேக் என்ற சிந்தனையாளர் .ரஷ்யக் கதையில் வந்த வீரனோ பலவந்தம் செய்துவிட்டுப் போய்விட்டான். ஆனால் இன்றோ அவன் குடும்பமே நடத்திக்கொண்டிருக்கிறான்.  

 

( 08.07.2011ல் எழுதியது)

தஞ்சைப் பெரிய கோயில்: சில குறிப்புகள்



‘ சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் / இருள்வரி மொழுப்பின் இஞ்சி சூழ்த் தஞ்சை இராசராசேச்சரம்’ என கருவூர்த்வேரால் போற்றப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக்கட்டி ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டன. அதற்காகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. அந்த விழாவின் விளைவுகளில் ஒன்றாகப் பெரியகோயிலின் கருவறைத் திருச்சுற்றுப்பாதைச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ராஜராஜன் காலத்து ஓவியங்களின் தொகுப்புத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளிவந்திருக்கிறது.

  கருங்கற் சுவரின்மேல் சுண்ணாம்புக் காரையைப் பூசி அதன்மீது ஓவியங்களைத் தீட்டச் செய்திருக்கிறான் ராஜராஜன். பின்னர் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர் காலத்தில் அந்த ஓவியங்களின்மீது சுண்ணாம்புக்காரைப் பூசப்பட்டு அதன்மீது புதிதாக ஓவியங்கள் வரையப்பட்டன. அதனால் சோழர்கால ஓவியங்கள் மறைந்துபோயின. காலப்போக்கில் நாயக்கர்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களின் காரைப்பூச்சுப் பெயர்ந்து வந்ததால் சோழர்கால ஓவியம் ஆங்காங்கே புலப்படலாயிற்று. அதன்பிறகு தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக்கொண்டு நாயக்கர்கால ஓவியங்களை அகற்றி சோழர்கால ஓவியங்களை வெளிப்படுத்தினார்கள். இன்னும் கிழக்குப் பகுதியில் இருபக்கச் சுவர்களிலும் , தென்மேற்குப்புறச் சுவரிலும் இருக்கும் நாயக்கர்கால ஓவியங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் ஓவியங்கள் இப்போது இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  
  
எழுதப்பட்ட பிரதி ஒன்றை அழித்து அந்த இடத்தில்  இன்னொன்றை எழுதுகிறமுறையை ‘ பாலிம்செஸ்ட்’ என்பார்கள். அப்படி எழுதப்பட்ட புதிய பிரதி மங்கிப்போய் பழைய பிரதி தென்படும். இங்கு புலப்படுத்தப்பட்டிருக்கும் ‘ பாலிம்செஸ்ட் ஓவியங்கள்’ ராஜராஜன் காலத்துக் கற்பனைகளின் சாட்சியங்களாய் இருகின்றன. இந்த ஓவியங்கள் கருவறையைச் சுற்றி வரையப்பட்டிருப்பதால் அதைப் பலரும் பார்க்க இயலாத நிலை. அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்ப் பல்கலைகழகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் ஒரு பரிசு. இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்களைத் தெளிவாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஓவியர் சந்ருவைக் கொண்டு அந்த ஓவியங்களைக் கோட்டொவியங்களாக வரையச் செய்து அவற்றையும் அருகருகே வெளியிட்டிருக்கிறார்கள். சந்ருவின் கோட்டோவியங்கள் நம் கையில் உருப்பெருக்கிக் கண்ணாடி ஒன்றைக் கொடுத்ததுபோல் உணரச்செய்கின்றன.

இந்த நூலை வெளியிட்டதுபோலவே சோழர் வரலாற்றையும், பெரியகோயில் பற்றிய வரலாற்றையும் ஆராய்ந்திருக்கிற நூல்கள் சிலவற்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழில் வெளியிடவேண்டும். உலகத்தமிழ் மாநாடு குறித்த முரண்பட்ட நிலைப்பாட்டை மேற்கொண்ட காரணத்தால் நொபுரு கரஷிமா இப்போது அரச ஆதரவை இழந்தவராக உள்ளார்.  இதனால் அவர் தமிழக வரலாற்றுக்குச் செய்துள்ள பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. அவரது எழுத்துகள் முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவேண்டும். பர்ட்டன் ஸ்டெய்ன், நொபுரு கரஷிமா, சம்பகலக்ஷ்மி, வித்யா தெஹேஜியா, பா.வெங்கட்ராமன், நாகஸ்வாமி, ஒய்.சுப்பராயலு என மொழிபெயர்க்கப்படவேண்டியவர்களின் பட்டியல் நீள்கிறது. ‘ அதிகாரத்தின் கொடைகள்’ என்ற தலைப்பில் தஞ்சைப் பெரியகோயில் குறித்து முக்கியமானதொரு ஆய்வைச் செய்திருக்கும் ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மனின் நூலும், கோயில் கட்டடக்கலை குறித்த சுரேஷ்பிள்ளையின் நூலும் உடனடியாக மொழிபெயர்க்கப்படவேண்டியவை.

பெரியகோயிலில் சாந்தார அறையின் மேற்தளத்தில் ஆடற்கலை கூறும் நூற்றியெட்டு கரணங்களை சிலைகளாக வடிப்பதற்குத் திட்டமிட்டு எண்பத்தோரு கரணங்கள் சிலைகளாக வடிக்கப்பட்டு மீதமுள்ள சிலைகள் வடிக்கப்படாமல் அவற்றுக்கான கற்கள் 
மட்டும் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறையை நேர்செய்யும் விதமாக தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அரங்கொன்றை அமைத்து நூற்றியெட்டுக் கரணங்களையும் சிலைகளாக வடிப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.      
  
கோயில் கருவறைகளில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர்தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படாத நிலை இன்றும் தொடர்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாகவே தொல்லியல் துறைசார்ந்த பல ஆய்வுகள் ஒருசிலருடைய விருப்புவெறுப்புகளின் வெளிப்பாடுகளாக அமைந்துபோயிருக்கின்றன.தமிழக வரலாறு தொடர்பான தொல்லியல் சான்றுகளை இந்தப் பின்னணியில் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய தருணம் இது. நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் 'அத்தாரிட்டி’களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது. இது தனிமனிதர்கள் அடையும் லாபநஷ்டங்கள் தொடர்பான பிரச்சனையல்ல. வரலாற்றுப் பிரக்ஞை குறித்த சிக்கல். இதை இப்போதே தடுத்து நிறுத்தவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சமயச் சார்பற்ற விதத்தில் தமிழக வரலாற்றை எழுதவேண்டுமென்ற கனவு, பகல் கனவாகவே முடிந்துவிடும்.

01.10.2010

Friday, July 11, 2014

அத்தியூர் விஜயா மறைந்தார் !



விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினப் பெண் விஜயா இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தியை பேராசிரியர் கல்யாணி மூலம் அறிந்து வருந்தினேன். 


1993 ஆம் ஆண்டில் புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த சிலரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட அவர் நீதிக்காக நடத்திய துணிச்சலான சமரசமற்ற போராட்டத்தால்தான் பின்னர் ' பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்' என்ற அமைப்பு உருவானது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த படிப்பறிவற்ற விஜயாவின் வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. 


விஜயாவின் வழக்கை வெளிப்படுத்தியவர் பத்திரிகையாளர் அசதுல்லா ஆவார். அவர்தான் பேராசிரியர் கல்யாணியிடம் அதைச் சொன்னவர். அதன் பின்னர் கல்யாணி அதைக் கையிலெடுத்தார். நானும் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கோ. சுகுமாரன், அபிமன்னன், பாஸ்கரன், மதியழகன், முத்துக்கண்ணு, இலக்கியன், வ.சு.சம்பந்தம் உள்ளிட்ட பலரும் அவருக்கு உறுதுணையாக இருந்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முதன்மைச் செய்தியாளராக இருந்த திரு. மணிவண்ணன் அளித்த ஆதரவும், வழக்கறிஞராக இருந்த திரு கே. சந்துரு, பொ.ரத்தினம் முதலானோர் அளித்த ஆதரவும் முக்கியமானவை. போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு விஜயாவுக்கு இழப்பீடு வழங்கியது. 


இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ( victim) உறுதியாக இருந்தால்தான் நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். எத்தனையோபேர் சமரசத்துக்காக முயற்சித்தும் விஜயா சம்மதிக்கவில்லை. அதுதான் அவரது சிறப்பு. 


விஜயாவின் வழக்கின்மூலம்தான் இருளர் சமூகத்து மக்களின் அவல வாழ்க்கை வெளியே தெரிந்தது. இன்று அவர்கள்மீதான வன்கொடுமைகள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. அந்தப் பிள்ளைகளில் பலர் கல்விபெற்றுள்ளனர். எனினும் அவர்களது அவலநிலை பெரிதாக மாறிவிடவில்லை. 


விஜயாவுக்கு இப்போது முப்பத்தெட்டு வயதுதான். அதற்குள் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் முடங்கிவிடாமல், அதிலிருந்து தனது சமூகத்துக்கான பாதுகாப்பு அரணை ஏற்படுத்தும் ஆற்றலை உருவாக்கிக்கொண்ட விஜயாவை வணங்குகிறேன்! 

Saturday, July 5, 2014

தமிழறிஞர் சிறப்புப் பகுதி: க.வெள்ளைவாரணனார்



 க.வெள்ளைவாரணனார் அவர்களை அவரது நூல்களை அறிந்த தமிழ் அறிஞர்கள், அவரிடம் பயின்ற ஆய்வு மாணவர்கள், தமிழ்த் துறை சார்ந்த பேராசிரியர்களிடமிருந்து வெள்ளைவாரணனார் குறித்த நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள், ஆய்வுகளை வரவேற்கிறோம். 


ஆக்கங்களை ஜூலை 20 க்குள் யூனிகோடு எழுத்துருவில் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். 


ரவிக்குமார், ஆசிரியர், மணற்கேணி

Friday, July 4, 2014

ஒளி நிழல் உலகம்



================


அ.ராமசாமியின் 'ஒளி நிழல் உலகம்' என்றநூலுக்கு 2004 டிசம்பரில் நான் எழுதிய முன்னுரை


================


" பேசும் படங்களில் நமது கண்களில்படும் உருவங்கள்தான் முதன்மையானவை.சப்தம் இரண்டாவது ஸ்தானத்தைத்தான் வகிக்கவேண்டும்........பேசும்படத்திற்கும் பேச்சுப்படத்திற்கும் வித்தியாசமுண்டு.அனேகமாக நமது படங்களில் பல இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவை."எனத் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா ஆண்டில்(1957) நிமாய் கோஷ் எழுதினார்.அதற்குப்பின் அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.ஆனாலும் அது இப்போதும் பொருத்தமாகவே உள்ளது.வி.சேகர் இயக்குகிற படங்கள்,விசுவின் படங்கள், விஜயகாந்த்தின் படங்கள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.சிறு வசனங்களைக் கையாளும் மணிரத்னத்தின் பாணி இங்கே கேலிக்கு ஆளாவது வசனத்தின் ஆட்சி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.இதனால்தானோ என்னவோ தமிழ் சினிமா குறித்த விமர்சனம் பெரும்பாலும் அதன் வசனங்கள்-அதன்வழியே முன்வைக்கப்படும் கருத்து- ஆகியனப் பற்றிய விமர்சனமாகவே அமைந்துவிடுகிறது.

      

 தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட சினிமாவைப் பிற கலைகளோடு ஒப்பிட்டால் அதன் வயது கொஞ்சம்தான். ஆனால் அதன் தாக்கமோ அளவிடற்கரியது.1982 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் தமிழில் 2020 திரைப்படங்கள் வெளிவந்திருந்தன.இவற்றுள் சுமார் ஐம்பது சதவீதப் படங்கள் எழுபதுகளில் மட்டும் வெளிவந்துள்ளன.அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தோடு சேர்த்தே இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


தமிழ்நாட்டு அரசியலுக்கும் சினிமாவுக்குமான உறவு வெளிப்படையானது.தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும்படமான 'காளிதாஸ்'(1931)காங்கிரசின் தேசிய அரசியலைப் பேசியது.தி.மு.க துவக்கப்பட்ட ஆண்டில்தான்(1949) அண்ணாத்துரையின் 'வேலைக்காரி' வெளியானது.எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இணைந்த பிறகு அந்தக் கட்சியின் சினிமா மூலமான அரசியல் பிரச்சாரம் தீவிரமடைந்தது.தி.மு.கவின் கொடி,தேர்தல் சின்னம்,தலைவர்களின் பெயர்கள் யாவும் திரைப்படங்களின் வாயிலாகப் பிரபலப்படுத்தப்பட்டன.வசனங்கள், பாடல்கள்,காட்சிகள் என சினிமாவின் பல்வேறு அம்சங்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.தி.மு.கவின் இந்த யுக்தியை அந்தக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிக் கட்சி துவக்கியபிறகும் எம்.ஜி.ஆர் தொடர்ந்து கையாண்டார்.அவர் முதலமைச்சராகப் பதவியேற்றபிறகு நடித்த'மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்' (1978)என்ற வரலாற்றுக் கதையைக் கொண்ட படமும்கூட சமகால அரசியலைத்தான் பேசியது.அவர் உயிரோடிருந்தவரை (தேர்தல் மூலம்)அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாதுபோனதற்கு சினிமாமூலம் அவர் சேர்த்துவைத்திருந்த செல்வாக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவர்.


 எம்.ஜி.ஆர் முதல்வர் பொறுப்பேற்று கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு இடம்பெயர்ந்த அதே   காலகட்டத்தில்தான் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த 'அன்னக்கிளி'(1976),'பதினாறு வயதினிலே' (1977) முதலிய படங்கள் வெளிவந்தன.கதாநாயகனின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் சினிமாவை மீட்டதோடு மட்டுமின்றி ஒரு புதுவகை யதார்த்தத்தையும் இந்தப்படங்கள் அறிமுகப்படுத்தின."திரைப்பட நடிக நட்சத்திரங்களைப்போல,அத்துறையில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் நாடும்,மக்களும் நன்முறையில் போற்ற வேண்டும்"என்ற மா.பொ.சி யின் விருப்பம் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அப்போதுதான் நிறைவேறியது.இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள்,ஒளிப்பதிவாளர்கள் முதலானோரின் பெயர்கள் முக்கியத்துவத்தோடு பேசப்படுகிற நிலை  இதனால் உருவானது.

        

சினிமாவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த(1967) திராவிட அரசியலின் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பதைவிடவும், பத்தாண்டு கால தி.மு.க ஆட்சி மீதான வெறுப்பின் வடிகாலாக அவரைப் பார்ப்பதே பொருந்தும். ஆனால் அவரது கவர்ச்சிவாத அரசியல் தி.மு.கவின் அரசியலைவிட அபாயகரமானது என்பதை படித்தவர்க்கம் சீக்கிரமாகவே புரிந்துகொண்டுவிட்டது. இந்த காலகட்டத்து மன நிலையை 'பசி'(1980) 'தண்ணீர் தண்ணீர்' (1981)  முதலிய படங்களில் நாம் உணரலாம்.

        

தமிழ் நாட்டு அரசியலின் பின்னணியில் வைத்து தமிழ் சினிமாவை விமர்சிக்கும் போக்கு இச் சமயத்தில்தான் கூர்மையடைந்தது.கா.சிவத்தம்பி எழுதிய 'தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும்' என்ற நூலை இதற்கான சான்றாகக் கொள்ளலாம்.எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டத் தொழில்  நுட்ப வளர்ச்சி அதை 'பேச்சுப் படம்'என்பதிலிருந்து மாற நிர்ப்பந்தித்தது.இந்தப் புதிய சூழலைப் புரிந்துகொண்டு படம் எடுக்க முற்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.ஆனால் அவர்கள் உருவாக்கிய 'காட்சிக் கலாச்சாரத்தை' சரியாகப் புரிந்துகொண்டு வரவேற்கவோ விமர்சிக்கவோ தேவையான விமர்சன மொழியை நமது சினிமா விமர்சகர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.படத்தின் கதையை அல்லது வசனத்தை விமர்சித்துப் பழகிப்போன அவர்கள்,தெளிவான கதையோ, நீள நீளமான வசனங்களோ இல்லாத புதியவகைப் படங்களை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்தனர்.எம்.ஜி.ஆர் படங்களைப்போல தனது கருத்தியலை நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த படங்களை விமர்சிப்பதில் சிக்கல் எதுவும் இல்லை.ஆனால் இந்தப் புதுவகைப் படங்களின் கருத்தியலோ அவற்றின் காட்சியமைப்பில்,படத் தொகுப்பில்,காமிரா கோணத்தில் பொதிந்திருந்தது.   அதைக் கண்டறிந்து விமர்சிப்பது அவ்வளவு

எளிதானதாக இல்லை .எனவே சினிமா 'வணிகமயமாகிவிட்டது' சினிமாவில் 'ஆபாசம் கூடிவிட்டது' என முகம் சுளிப்பதத் தாண்டி நமது விமர்சகர்களால் எதுவும் சொல்லமுடியாமல் போனது. இதற்கு நேரெதிரானக் கருத்துகளைச் சிலர் முன்வைத்ததை இங்குக் குறிப்பிடுதல் அவசியம். சினிமாவின் 'ஆபாசத்தை' அவர்கள் போற்றிக் கொண்டாடினர்.

      

எண்பதுகளில் தமிழில் அரைகுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்பியல், குறியியல், உளப்பகுப்பாய்வு முதலான சிந்தனைகள் வழங்கிய கலைச் சொற்களைக் கொச்சையான, திரிந்த பொருளில் உள்வாங்கிக்கொண்ட சிலர் தமிழ் சினிமாவைப் போற்றித்துதித்து அதற்குப் புதிய வியாக்கியானங்களை வழங்க ஆரம்பித்தனர்.'உள்ளே வெளியே' என்ற படத்தை மிகப்பெரிய புரட்சிப்படமாக சித்திரித்து எழுதப்பட்ட கட்டுரைகள் இதன் உச்சமாகும். பாலியலை வக்கிரமாகக் கையாண்ட நாலாந்தர மலையாளப்படங்களை பிரெஞ்சு சினிமாவின் புதிய அலை இயக்குனர்களின் படங்களோடு ஒப்பிட்டுப் பேசவும் அவர்கள் தயங்கவில்லை. பிரதியின் புனிதத்தை மறுக்கும் முனைப்பில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளும்(சரோஜாதேவியின்)மட்டரகமான 'போர்னோ'கதைகளும் ஒன்றுதான் என வாதிட்டதுபோலவே சினிமாகுறித்த இவர்களது அனுகுமுறையும் இருந்தது. இன்னொருபுறம் இப்படியான 'தடாலடிகள்' இவர்களுக்கு பிழைப்புக்கு வழியேற்படுத்தித் தந்தன. தீவிர இலக்கியம் தெரிந்த நபர்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவைப்பட்டனர். கற்பனையேயில்லாத தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு தமிழின் தீவிர இலக்கியப் பிரதிகளிலிருந்து பல விஷயங்களைத் திருடிக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையைச் செய்ய ஆட்கள் தேவைப்பட்டபோது அதை இவர்கள் கச்சிதமாக நிறைவேற்றினர். சிற்றிதழ் இப்படித்தான் இவர்களால் சினிமாவுக்கானப் பின்வாசல் கதவாக மாற்றப்பட்டது.

 

      

இந்தச் சூழலைத் தமிழ் நாட்டின் மைய நீரோட்ட இடதுசாரிகள் எதிர்கொண்டவிதம் வினோதமானது. 'சோஷலிச யதார்த்தவாதம்'என்பது தமிழ் இலக்கிய உலகில் செலாவணி இழந்தபோது இவர்கள் பின்னோக்கிப் பயணப்பட ஆரம்பித்தனர். சோவியத் யூனியனின் உடைவு,சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த நிகழ்வுகள் முதலியவை இவர்களது கண்களைத் திறக்கவில்லை.எண்பதுகளில் திராவிட அரசியல் மறையத் தொடங்கியபோது அதன் பிற்போக்கான அம்சங்களை இடதுசாரிகள் ஸ்வீகரித்துக்கொண்டனர். தமிழ் சினிமா இயக்குனர்களில், நடிகர், நடிகைகளில் புரட்சியாளர்களைக் கண்டுபிடிப்பது அவர்களது (தோல்விப்) படங்களைப் பாராட்டி அங்கீகாரம் செய்வது என்பதாக இவர்களது கலைச்சேவை மாறியது.தமிழக இடதுசாரி இயக்கம் கோர்க்கிகளையோ, மாயகோவ்ஸ்கிகளையோ லூசுன்களையோ உருவாக்கவில்லை, அது லியோனிகளைத்தான் உருவாக்கியது. இது கவனத்துக்குரிய வரலாற்றுத் துயரமாகும். திராவிட அரசியல் சினிமாவைத் தனது  நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இடதுசாரி அரசியலோ சினிமாக்காரர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

       

 இப்படியானச் சூழலில்,சினிமாவை பார்த்து முகம் சுளிக்காமல் அதை ஒரேயடியாகக் கொண்டாடவும் செய்யாமல் விமர்சித்தவர்களில் முக்கியமானவர் அ.ராமசாமி. நாடகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியதாலும், நவீன நாடகங்களை எழுதி இயக்கியதாலும், நடிப்பு பற்றிய நவீன சிந்தனைகளைப் பயின்றதாலும் கிடைத்த அனுபவங்கள் அவரது பார்வையைச் செழுமைப் படுத்தியுள்ளன.மிகுந்த வேட்கையோடு சினிமாவை அணுகுபவர் அவர்.ஒரு விமர்சகராகவன்றி முதலில் ஒரு ரசிகராக சினிமாவைப் பார்க்கத் தெரிந்தவர்.

      

 ராமசாமியின் விமர்சனங்கள் பெரும்பாலும் திரைப்படத்தின் கருத்தியலை ஆய்வு செய்வதாக இருக்கின்றன. அதைச் செய்வதற்கு அவர் திரைப்படத்தின் கதையை மட்டும் சார்ந்திருப்பதில்லை. பாத்திர வார்ப்புகள், காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ள விதம் போன்றவற்றோடு சினிமாவுக்கு அப்பால் செயல்படும் அரசியலையும் அவர் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ஒரு நடிகரின் அல்லது இயக்குனரின் படத்தை இவர் தனியே எடுத்துக்கொண்டு ஆராய்வதில்லை. அவர்களது பிற படங்களோடு அதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறார். அதன்மூலம் அந்தப்படங்களினூடே ஓடும் கருத்தியலை அவரால் புரிந்துகொள்ளமுடிகிறது.சமூகத்தின் மத்தியில் சினிமாவைப் பொருத்திப் பார்ப்பதால் மற்ற விமர்சகர்களின் கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்களை அவரால் பார்க்க முடிகிறது.இதனால் பலரின் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் அவரது கண்டனத்துக்கு ஆளாகின்றன. இதில் அவருக்குள்ள இலக்கிய ஈடுபாடும் கைகொடுக்கிறது.தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை'யை கி.ராவின் சிறுகதை ஒன்றோடு அவர் இணைத்து வாசிக்கும்போது வேறுவிதமான அர்த்தம் கிடைக்கிறது.

        

சினிமாவைப்பற்றிப் பேசிய இலக்கியவாதிகள் பலர் 'சீரியஸான'ஆட்கள் சினிமாத் துறைக்குள் வந்தால் மட்டுமே அந்தத் துறையைத் திருத்தமுடியும் என்பதாகப் பேசியுள்ளனர். அவர்கள் குறிப்பிடும்'சீரியஸான ஆட்கள்' வேறு யாருமல்ல,அவர்களேதான்.அவர்கள் இருக்கிற இலக்கியத் துறை சீரழிந்து கிடப்பதைப்பற்றி எவ்வித வெட்கமும் அவர்களுக்கு இருப்பதில்லை. இதேவிதமான கருத்துதான் அரசியல்பற்றியும் கூறப்படுகிறது. சினிமாத்துறையை மிகவும் நெருக்கமாக அறிந்திருப்பவர் அசோகமித்திரன்.அவரது இலக்கிய ஆளுமைகுறித்து இருவித கருத்துகள் இருக்க முடியாது. ஆழமான சினிமா விமர்சனங்களை அவர் எழுதியிருக்கமுடியும் ஆனால் அவர் அப்படி எதையும் எழுதவில்லை. 'தமிழ்ப்படங்களின் கதானாயகிகள் எண்ஜாண் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர்' எனப் பெருமூச்சுவிட்டதோடு சரி.அத்தகைய நடனக் காட்சிகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை 'பார்வையாளர்களை வெறும் திளைப்பை விரும்பும் உடல்களாகக் கருதும்'தமிழ் சினிமாவின் வெளிப்பாடாக அந்த நடனங்களை விளக்கும் ராமசாமி அதன்காரணமாகப் பார்வையாளன் எப்படித் தனது உடலையே வெறுக்கும்படியாகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அது மட்டுமின்றி' எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்களில் தவறாது இடம்பெற்ற முதலிரவுக் காட்சிகள் இத்தகைய நடனக் காட்சிகளால் பதிலீடு செய்யப்பட்டதையும் விவரிக்கிறார்.

        

ராமசாமியின் எழுத்துக்களில் சினிமாவைப்பற்றிய கோட்பாடுகளின் நீண்ட மேற்கோள்களை நாம் காண முடிவதில்லை. அப்படியான கோட்பாடுகளை ஆங்காங்கே தெளித்து வைப்பதால் பயனெதுவும் ஏற்படப் போவதில்லை. ஆனால்  சினிமாவைப் பார்ப்பதற்கு பல புதிய அணுகுமுறைகளை அவரது எழுத்துக்களினூடே நாம் காணமுடிகிறது. 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் ஒரு பாலம் இரண்டு பண்பாடுகளைப் பிரிப்பதற்கானக் குறியீடாகச் செயல்படுவதை அவர் எடுத்துக் காட்டும்போது அந்தப்படத்தை வேறுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

        

எண்பதுகளின்பிற்பகுதியிலிருந்து இந்திய அரசியல் களத்தை ஆக்கிரமித்துக்கொண்ட இந்துத்துவத்தின் நுணுக்கமான வெளிப்பாடுகளை தமிழ் சினிமாவில் அடையாளம் கண்டு சொல்வதாக பல கட்டுரைகள் இத் தொகுப்பில் உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வெற்றிபெற்ற சினிமாக்கள் பலவற்றின் உள்ளீடாக இந்தக் கருத்தியலே செயல்பட்டுள்ளது என்பது யதேச்சையாக நடந்ததல்ல. ஆனால் இடதுசாரிகளைப்போல வெறுமனே மதவாதத்தை மட்டும் தனியாகப் பிரித்துவைத்துக்கொண்டு பேசாமல் அத்துடன்சேர்த்து சாதிப் பிரச்சனையையும் ராமசாமி பார்த்துள்ளார். இது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு அம்சமாகும்.

        

 மோசமானப் படங்களை அம்பலப்படுத்துவதில்  நாம் காட்டும் அக்கறை, நல்ல படங்களை அடையாளம் காட்டுவதில் வெளிப்படுவதில்லை. ராமசாமியும் அதில் விதிவிலக்கல்ல என்றே சொல்லவேண்டும்.  நாசரின் 'தேவதை'குறித்துப் பேசும்போது அதற்கான வாய்ப்பு இருந்துள்ளது, ஆனால் சிலக் குறிப்புகளாக மட்டுமே அதை அவர் முடித்துவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது. அதுபோலவே தமிழ் சினிமாவில் நகைச்சுவை பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் ராமசாமி விரிவாகப் பேசியிருக்கலாம்.திரை இசையில் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களும் விரிவானப் பரிசீலனைக்கு உரியவை. அதிலும் குறிப்பாக இளையராஜாவின் பங்களிப்பு விரிவான ஆய்வுக்குரியது. திராவிடக் கட்சிகளின் போராட்டங்களால் விரட்ட முடியாத இந்தியை அவரது இசை விரட்டியடித்தது ஒரு மாபெரும் வரலாற்று சாதனையாகும். (அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்கள் அவரது இசைபற்றித் தெரியாதவர்களால் வேறு நோக்கம் கருதி எழுதப்பட்டது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். சாஸ்திரீய இசையில்,நாட்டுப்புறப் பண்பாட்டில் ஆழ்ந்த அறிவும், இளையராஜா மீது மதிப்பும் கொண்ட கி.ராஜநாராயணன் இதை எழுதத் தகுதியுள்ளவர்.)

         

திரைப்படப் பாடல்களை இலக்கிய அந்தஸ்து தந்து ஆய்வு செய்ய  சிவத்தம்பி முயற்சித்தார்.அந்த முயற்சி பிறரால் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை.இதுவும் தமிழ் சினிமா விமர்சகர்கள் அக்கறை கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும். 'வெகுமக்கள்'சினிமாவை மட்டுமின்றித் தமிழில் மேற்கொள்ளப்பட்ட விவரணப்பட முயற்சிகள்,எடுக்கப்பட்ட குறும்படங்கள் என எல்லாவற்றையும் ராமசாமி கவனத்தில் கொண்டுள்ளார். இது அவரது விரிந்த பார்வையைக் காட்டுகிறது.வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அவை வெளிவந்த காலம்,அவற்றை வெளியிட்ட பத்திரிகைகளின் தன்மை முதலானவற்றின் வரையறைகளைச் சுமந்து கொண்டுள்ளன. தனி நூலாக எழுதும்போது அந்தப் பிரச்சனைகள் எழாது.ராமசாமி அடுத்து அப்படியான முயற்சியில் ஈடுபடவேண்டும்.

        

தமிழ் சினிமாவுக்கும், தமிழ் அரசியலுக்கும், தமிழ் சமூகத்தில் அதிகரித்துவரும் பாசிசக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவைத் திறந்து காட்டுவதன்மூலம் அதை முறியடிக்க முயல்வது இன்றைய அரசியல் போராட்டத்துக்கு மிகவும் அவசியமாகும். அதை ராமசாமியின் கட்டுரைகள் சரியாகவே செய்துள்ளன. அந்தவகையில் தமிழ் சினிமா குறித்த இந்த நூல் தமிழ் அரசியல் களத்திலும் பயன்படக்கூடியது.


சினிமாவைப் புறக்கணிப்பதோ,கண்களை இறுக மூடிக்கொள்வதோ சினிமாபற்றிய விமர்சனமாக இருந்து விடமுடியாது. இந்த 'மோசமான'படங்களைப் புரிந்துகொள்ளாமல் நல்ல சினிமாவை உருவாக்க முடியாது. இந்த நூல் தமிழில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கான தூண்டுதலைத் தருகிறது. சினிமாவின் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கும் இது  பயனளிக்கக்கூடிய கையேடாக இருக்கும். 


Thursday, July 3, 2014

கவிஞர் வைரமுத்துவுக்கு நினைவிருக்குமா?



ஏன் சில நிகழ்வுகள் நமக்கு மறப்பதில்லை? தடயமே இல்லாமல் எங்கோ மறைந்துகிடக்கும் சில நினைவுகள் நொடிப்பொழுதில் எப்படி மேலெழும்பி வருகின்றன? ஒரு வாசனை, ஒரு ஒலிக்கீற்று, ஒரு வண்ணம், ஒரு சாயல் ஏன் ஒரு சீதோஷ்ண நிலையும்கூட எப்படி ஒரு நினைவோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது? குறிப்பிட்டதொரு மனநிலையில் இருக்கும்போது அது குறிபிட்டவொரு பாடல் வரியை உங்கள் காதில் ஒலிக்கச் செய்ததுண்டா? உஷ்ணம் அதிகமில்லாத நண்பகலில் வெதுவெதுப்பான வெயிலில் நடந்துபோகும்போதெல்லாம் எனக்கு என் அம்மா வைக்கும் மீன்குழம்பின் வாசம் அடிப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகும். உங்களுக்கு அப்படி நேர்ந்ததுண்டா? அதுபோலத்தான் வெள்ளை பேண்ட் வெள்ளை முழுக்கை சட்டை அணிந்த ஒடிசலான கறுப்பு நிற இளைஞர் எவரைப் பார்த்தாலும் எனக்கு கவிஞர் வைரமுத்துவை முதன்முதலில் பார்த்த காட்சி மனசில் படமாக ஓட ஆரம்பித்துவிடும்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் பி எல் படித்துக்கொண்டிருந்த நேரம். சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கும் போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டலில்தான் எனக்கு அறை. ஆனால் நான் பெரும்பாலும் எஞ்சினியரிங் ஹாஸ்டலில்தான் தங்குவேன். நண்பர்கள் துரைக்கண்ணு, சதாசிவம் ஆகியோருடன் சேர்ந்து அரசியல் பணி ஆற்றிக்கொண்டிருந்த நேரம் அது. எஞ்சினியரிங் ஹாஸ்டலில் ஹாஸ்டல் டே என்றால் அது மறக்கமுடியாத கொண்டாட்டம். சேவியர் என்றொரு மாணவர்- அவர்தான் ஹாஸ்டலுக்கு செயலாளர் என நினைவு. ஹாஸ்டல் டேவுக்கு வித்தியாசமாக சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களை ( மாணவியரும் சேர்த்துதான்) அழைத்துவந்து நாடகம் போட்டார். அவர்களோடு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரையும் கவிஞர் வைரமுத்துவையும் அழைத்துவந்திருந்தார். அந்திமழை பொழிகிறது பாடலின்மூலம் பலருக்கும் அறிமுகமாயிருந்த கவிஞர் வைரமுத்து நிழல்கள் படத்தின் பாடல்களால் இளைஞர்களைக் கவரத்தொடங்கியிருந்த நேரம் அது. 


ஹாஸ்டல் டே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்பே போதைப் பெருக்கில் மைதானமெங்கும் சகதியாகிப்போயிருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் காது அடைபட்டு, கண்கள் குன்றி காற்றில் நடந்துகொண்டிருந்தார்கள். திரைப்படக் கல்லூரி தாரகைகளைப் பார்த்து குடல் வெளியே வந்துவிடுமோ என அஞ்சும் அளவுக்கு ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போதுபோய் யாராவது கவிஞர் வைரமுத்துவை பேசச்சொல்வார்களா! அந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கே வந்து பேசியிருந்தாலும் மாணவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்களது கூக்குரலைப் பொருட்படுத்தாமல் அவர் ஏதோ நாலுவார்த்தைப் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். பாஸ்கரும் இரண்டொரு வார்த்தைப் பேசியதாய் ஞாபகம். அன்று இரவு சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் ரிலீஸாகியிருந்த பன்னீர் புஷ்பங்கள் படம் பார்க்கப் போனோம். 


தமிழரசு இதழில் வேழவேந்தன் போன்றவர்களின் பாடல்களுக்கிடையில் வைரமுத்து என்ற பெயரில் வெளியான மரபுக் கவிதைகள் சிலவற்றை முன்னர் வாசித்திருந்தேன். ( அவற்றில் இன்று அவரது சில திரைப்பாடல்களில் வெளிப்படும் வசீகரமான வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன்) அந்தக் கவிதைகள் அவற்றை எழுதியவரை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடியவை அல்ல. எனவே அவரிடம் பேச நான் ஆர்வம்காட்டவில்லை. 


அன்று, கார்ல் மார்க்ஸை தீவிரமாக வாசிக்கத் தொடங்கியிருந்த எனது கண்களுக்கு கவிப் பேரரசாய் அவர் ஆட்சிசெய்யப்போகும் மனப்பரப்பு தென்படாததில் வியப்பில்லை. இன்று கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக ஹாஸ்டல் டே நினைவிருக்குமா தெரியவில்லை. 

---------


ஒரு பின்னொட்டு: 


80 களில் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பாரதிராஜா இளையராஜா நிவாஸ் வைரமுத்து கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதெல்லாம் உண்மைதான். பீம்சிங் படங்களிலிருந்து நல்ல அம்சங்களின் தொடர்ச்சியாக 'சீரியஸ் சினிமா' உருவாகியிருக்கக்கூடிய புறச்சூழல் அப்போது தமிழ்நாட்டில் இருந்தது. அந்தச் சூழலைப்பற்றிய பிரக்ஞையின்றி மேற்சொன்ன கூட்டணி தமது கிராமத்து உட்டோப்பியாவைக் கொண்டு அதைக் காலிசெய்துவிட்டதோ என்ற ஐயம் இப்போது   எனக்கு எழுகிறது.  ராமசாமி,ராஜன்குறை முதலான விமர்சகர்கள் இதைப்பற்றி விவாதிக்க முன்வந்தால் நன்றாக இருக்கும். 

இசையெனும் காலயந்திரம்




இசையெனும் காலயந்திரம்

---------------


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரு இளையராஜா அவர்களை அவரது ரெக்கார்டிங் தியேட்டரில் சந்தித்தபோது அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம். அன்று அவரது பிறந்தநாள் என நினைவு. 

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் இளையராஜா புகழ் ஏணியில் தாவித் தாவி மேலேறிக்கொண்டிருந்தார். இப்போது புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தின்கீழ் மறைந்துபோன பாலமான் கரை என அழைக்கப்படும் இடத்தில் வரிசையாக இருந்த கடைகளில் நேரு ஸ்டோர், ஹேப்பி டெய்லர்ஸ், பாண்டு டீக்கடை ஆகிய இடங்கள்தாம் எனக்கு பொழுதுபோக்கும் இடங்கள். பாண்டு டீக்கடையில் ஒரு பிலிப்ஸ் ரெக்கார்டு பிளேயர் உண்டு. அப்போதுதான் இன்ரிக்கோ, எக்கோ இசைத்தட்டுகள் அறிமுகமாயின. பாண்டு என்னைப்போலவே இளையராஜா பைத்தியம். ஒரு ரெக்கார்டு ரிலீஸ் ஆகிறதென்றால் சென்னைக்கு ட்ரெயின் ஏறிவிடுவார். அது தேயும்வரை கேட்பதற்கு என்னைப்போல இன்னும் சில பைத்தியங்கள் இருந்தார்கள். நான் சட்டக் கல்லூரியில் வகுப்பறையில் அமர்ந்திருந்த காலத்தைவிட பாண்டு கடையில் உட்கார்ந்திருந்த நேரம் அதிகம், நான்குடித்தத் தண்ணீரைவிட அங்கு குடித்த டீ அதிகம். இளையராஜாவின் இசை எனது இளம் பிராயத்தின்மீது செலுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல. 


இப்போது அவர் இசை அமைக்கும் பாடல்களில் மனம் லயிக்க மறுக்கிறது. என் மனசுக்கு வயதாகிவிட்டதா அல்லது அவரது இசையில் முதுமை ஏறிவிட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் இப்போதும் அவரது துவக்ககாலப் பாடல்களைக் கேட்கும் கணத்தில் கால யந்திரத்தில் ஏறாமலேயே முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடுகிறேன்.

Wednesday, July 2, 2014

குஜராத்தில் அதிகம்!

மகளிர் அமைப்புகளின் கவனத்துக்கு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டைவிட குஜராத்தில் அதிகம்! 


2013 இல் இந்தியா முழுவதும் பெண்களுக்கு  எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் ( ncrb) வெளியிட்டுள்ளது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு எனத் தெரியவந்துள்ளது. 


ஆந்திரா 32809 கர்னாடகா 12207 கேரளா 11216 மகராஷ்டிரா 24895 தமிழ்நாடு 7475

தலைநகர் டெல்லியில் தமிழ்நாட்டைப்போல சுமார் ஒன்றரை மடங்கு குற்றங்கள் ( 12888)  நடந்துள்ளன. 


இன்றைய பிரதமர் திரு. மோடி 2013 இல் குஜராத் முதல்வராக ஆட்சிசெய்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது அங்கு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளின் எண்ணிக்கை 12283. இது தமிழ்நாட்டைப்போல ஒன்றரை மடங்கு! இப்போது அங்கு ஒரு பெண் முதல்வராகியிருக்கிறார். இனிமேலாவது நிலைமை மாறுமா?