Tuesday, January 7, 2014

இரண்டு ' நாய்க்குட்டிகள்'



இன்று சே குவேராவின் Reminiscences of the Cuban Revolutionary War ( Harper Perennial,2006 ) என்ற நூலைத் திரும்பவும் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அதில் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா எழுதிய சிறிய முன்னுரை ஒன்று இருக்கிறது. அந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ' The Murdered Puppy' என்ற தலைப்பிலான பகுதியைப்பற்றி தனது முன்னுரையில் அலெய்டா குறிப்பிட்டிருப்பார். சட்டென்று எனக்கும் அந்தப் பகுதி நினைவுக்கு வந்தது. உடனே அந்தப் பக்கத்தைத் திருப்பி அதை மீண்டும் வாசித்தேன். 


சேவும் அவரது தலைமையிலான கொரில்லா குழுவினரும் சான்ஷே மாஸ்குரா என்பவனின் படையணியை ரகசியமாகப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். சரிவான மலைப் பகுதி.அந்தப் படையணி வழி நெடுகக் கண்ணில் தென்படும் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்கிக்கொண்டு செல்கிறது. அதை குறிப்பிட்டதொரு இடத்தில் சுற்றிவளைத்துத் தாக்கவேண்டுமென்பது கொரில்லாக்களின் திட்டம். அவர்கள் பிந்தொடர்வது தெரிந்தால் அழிவு நிச்சயம். சிறு சலனமும் பேரிரைச்சலாக மாறிவிடும் வனத்தின் மௌனத்துக்குள் ஊர்ந்து செல்கிறது கொரில்லா குழு. அப்போது நாய்க் குட்டி ஒன்று குரைக்கும் சப்தம் கேட்கிறது. கொரில்லா குழு தங்கியிருந்த மறைவிடத்தில் இருந்த நாய்க்குட்டி. அவர்களோடே வந்திருக்கிறது. அதை திரும்பிப்போக வைக்க அவர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை. தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அது குரைத்துக்கொண்டே ஓடிவந்துகொண்டிருந்தது. யாரோ ஒருவர் அதைக் கையில் தூக்கிக்கொள்கிறார். சற்றே அமைதி. எதிரிப் படையணியின் நகர்வை உன்னிப்பாகக் கவனித்தபடி கொரில்லா வீரர்கள் பாறைப் பிளவு ஒன்றில் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். அப்போது மீண்டும் அந்த நாய்க்குட்டி குரைக்க ஆரம்பிக்கிறது. எப்படியாவது அதை நிறுத்து என சே ஆணையிடுகிறார். ஃபெலிக்ஸ் என்ற கொரில்லா வீரர் அந்த நாய்க்குட்டியை நிரந்தரமாக அமைதிப்படுத்திவிடுகிறார். அன்று இரவு அவர்கள் வழியில் கைவிடப்பட்ட ஒரு குடிசையில் தங்குகிறார்கள். அவர்கள் சாப்பிடும்போது அங்கிருக்கும் நாயொன்று ஓடிவருகிறது. அதன் கண்களில் கொல்லப்பட்ட நாய்க்குட்டியின் பார்வையை உணர்ந்து சே திடுக்கிடுகிறார். 


சில நேரங்களில் கொரில்லா வாழ்வு சுமத்தும் ஈவிரக்கமற்ற தருணங்களை அந்த நூலில் நாம் பார்க்கலாம். ஒரு கொரில்லா வீரனாக எத்தனையோபேரை சே கொன்றிருப்பார். ஆனால் தனது உத்தரவால் பறிபோன ஒரு நாய்க்குட்டியின் உயிர் அவரைக் குற்றவுணர்வில் துடிக்கச் செய்திருக்கிறது. 


இந்த நிகழ்வைப் படித்துக்கொண்டிருந்தபோது குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் பற்றி நரேந்திர மோடி சொன்னது நினைவுக்கு வந்தது. ' நாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும்போது காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி விழுந்து அடிபட்டு செத்துவிட்டால் நாம் வருத்தமடையத்தானே செய்வோம்' என அவர் கேட்டிருந்தார். 


ஒரு காலத்தில் சே குவேராவை ஆதர்சமாகக் கருதி அவரது உருவப்படம் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிந்துகொண்டனர் இளைஞர்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை இப்போது அருகிவிட்டது. இன்றோ மோடியை மாற்றத்தின் குறியீடாகப் பார்க்குமாறு இளைஞர் கூட்டத்துக்கு வெறியூட்டப்படுகிறது! 


சே குவேராவுடன் ஒப்பிடத்தக்கவரல்ல மோடி. ஆனால் இந்த இளைஞர்கள், அவர்களின் மனநிலை- அச்சமாக இருக்கிறது......

No comments:

Post a Comment