Monday, January 27, 2014

டைம்ஸ் நவ் டிவியில் ராகுலின் நேர்காணல்



நேற்றிரவு டைம்ஸ் நவ் டிவியில் ஒளிபரப்பான ராகுலின் நேர்காணல் எதிர்காலப் பிரதமராகக் கட்டியெழுப்பப்படும் ராகுலின் பிம்பத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அவர் கிளிப்பிள்ளைபோல ஆர்டிஐ, பெண்களுக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு அதிகாரம், லோக்பால்- என சில வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது பரிதாப உணர்வே மேலிட்டது. 


அர்னாப் கோஸ்வாமியின் கேள்விகள் மிகவும் சாதாரணமாக, மேலோட்டமாக இருந்தன. ஆனால் அந்தக் கேள்விகளையும்கூட ஆழமான பொருளை நோக்கி இழுத்துச் சென்றிருக்கமுடியும். ஆனால் அதற்கான ஆற்றலும் அறிவும் ராகுலிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 


நமது அரசியல் கட்டமைப்பிலும்,நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென அவர் விரும்புகிறார் எனத் தெரிகிறது.அதற்கான பரிதவிப்பை மட்டுமே அவரிடம் நாம் பார்க்கமுடிகிறது.


கருத்தியல் தெளிவில்லாமல் இப்படியான பரிதவிப்புமட்டுமே கொண்டவர்கள் காலப்போக்கில் வலதுசாரிகளாக வீழ்ச்சியடைவதைத் தவிர்க்கமுடியாது. அதற்கான அறிகுறிகள் ராகுலிடம் தென்படுகின்றன. 


ராகுலின் நேர்காணலை கேலிசெய்துஒதுக்கிவிட்டுப் போக நான் விரும்பவில்லை. அவர் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் முக்கியமானவை:


1. பாஜக அதிகாரத்தை மையப்படுத்த விரும்புகிறது, ஆனால் அதைப் பரவலாக்குவதே முக்கியம்.

2. இந்த நாட்டை வழிநடத்த ஒரு தலைவரை முன்னிறுத்துவது அதிகாரக் குவிப்புக்கே வழிவகுக்கும்.

3. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படாதவரை நாடு முன்னேற முடியாது. 

4. நமது அரசியல் அமைப்பு மூடுண்டதாக இருக்கிறது.அதில் திறப்புகளை ஏற்படுத்தவேண்டும். 


இதற்கெல்லாம் தீர்வுகளை காங்கிரஸ் கட்சியும் ராகுலும் வழங்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம் இந்தக் கேள்விகளைப் பரிசீலித்துத் தீர்வுகளை முன்மொழியவேண்டும்

No comments:

Post a Comment