Saturday, December 14, 2013

மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மக்களின் தலைவிதியா?



2014 இல் மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற யூகங்கள் இப்போது சிறிய கட்சிகளுக்கும்கூட அதிகாரப் பசியை அதிகப்படுத்தியுள்ளன. அப்படி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் இந்தக் கட்சிகள் எந்தத் துறைகளைக் கேட்கும்? வருமானமும் அதிகாரமும் எங்கே அதிகம் இருக்குமோ அந்தத் துறைகளுக்குத்தான் போட்டியும்  அதிகமிருக்கும் என்பது வெளிப்படை.

இந்தியாவிலிருக்கும் மாநிலக் கட்சி எதற்கும் தனியே பொருளாதாரக் கொள்கையோ, வெளியுறவுக் கொள்கையோ , பாதுகாப்புக் கொள்கையோ இருப்பதாகத் தெரியவில்லை. இருபது வருட கூட்டணி ஆட்சி அனுபவத்துக்குப் பிறகும்கூட இதைப்பற்றி மாநிலக் கட்சிகள் கவலைப்படவில்லை. அவை தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எந்த அளவுக்கு உலக ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். அவர்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்களா என்று பார்க்கப்படுகிறது. தேர்தலில் செலவுசெய்வார்களா என்று பார்க்கப்படுகிறது. அவர்களது சாதி வாக்குகளை வாங்கக்கூடியவர்களா என்று பார்க்கப்படுகிறது. இதெல்லாம் இன்றைய அரசியலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இவற்றைப் பார்க்கும் கட்சித் தலைமைகள் அவர்களது ஆளுமை என்னவென்று பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி ஒரு துறையை சிறப்பாக நிர்வகிக்க முடியும்? கடந்த இருபது ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிலிருந்து சென்று மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்து ஒரு துறையில் முத்திரை பதித்தவர் இவர் என எத்தனைபேரை நாம் குறிப்பிட முடியும்?

தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதென்பது மக்களின் தலைவிதி என்ற மிதப்பில் மாநிலக்கட்சிகளின் தலைமைகள் நடந்துகொண்டால் அதற்கான விலையை அவை கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment