Wednesday, July 10, 2013

நீதிமன்றத் தண்டனையே பதவியைப் பறிக்க போதுமானதா?



நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அப்பீல் செய்தாலும் எம்பி, எம் எல் ஏ பதவி இழப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் களத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது  பாராளுமன்ற,  சட்டமன்ற அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதாகவே இருக்கும். 

பழிவாங்கும் அரசியல் கோலோச்சும் இந்த நாட்டில் , நீதி அமைப்பும் அதன் தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் இந்த நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு பதிலாக அதிகாரத்தில் இருப்பவர்கள் தமக்குப் பிடிக்காத எவரொருவரையும் பதவி இழக்கச் செய்வதற்கான குறுக்கு வழியாக மாறிவிடும். உதாரணத்துக்கு விஜயகாந்த் மீது போடப்படும் அவதூறு வழக்கு ஒன்றில்  அவர் தண்டிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் உடனே அவரது பதவி பறிபோய்விடும். அப்பீல் செய்து அவர் நிரபராதி எனத் தீர்ப்பு பெறுவதற்குள் பல தேர்தல்கள் வந்துபோய்விடும். அப்புறம் அவரது அரசியல் வாழ்வு என்ன ஆகும் என எண்ணிப்பாருங்கள். 

நமது நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் கீழ் கோர்ட்டுகளில் விரைந்து வழக்கை முடித்து எவருக்கும் தண்டனை பெற்றுத் தந்துவிடமுடியும். அப்பீல் வாய்ப்பு என்பது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடு அல்ல. அது நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு. இதனைக் கருத்தில்கொண்டுதான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் அதற்கான பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மட்டுமின்றி இந்திய தண்டனை சட்டத்தையும் கேள்விக்குறி ஆக்கி உள்ளது. இதை மகத்தான தீர்ப்பு என ஊடகங்கள் கொண்டாடுவது வியப்பளிக்கிறது. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு ஒன்றை ரத்து செய்திருக்கும் இந்தத் தீர்ப்பு அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கென சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவை அளித்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  

legislature மற்றும் judiciary ஆகிய அமைப்புகள் ஒன்றன் அதிகார வரம்பில் மற்றது குறுக்கிடாமல் இருப்பதே நல்லது. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவது கவலைக்குரியதுதான். அதைத் தடுக்கவேண்டியதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால் அரசியலைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பையும் அதிகாரத்தையும் நீதித்துறையின் கையில் முழுமையாக ஒப்படைப்பது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தாகவே முடியும். அது அதிகாரத்துவம் வலுப்பெறவே வழிவகுக்கும். 

சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீர்ப்பு நன்மையைவிடக் குழப்பத்தையே அதிகரிக்கச் செய்திருக்கிறது. மத்திய அரசுதான் இந்தக் குழப்பத்தைக் களையவேண்டும். 

No comments:

Post a Comment