Saturday, February 23, 2013

நீதிபதி திரு.சந்துரு



Justice Chandru
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி  திரு சந்துரு அவர்கள் மார்ச் மாதத்தில்  பணியிலிருந்து ஓய்வுபெற்ற இருக்கிறார். தனக்கு பிரிவு உபச்சார விழா எதுவும் நடத்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரு சந்துரு அவர்களுக்கு ஒய்வு என ஓன்று இருக்கப்போவதில்லை. நிச்சயம் அவர் மக்கள் நலனுக்கான பணிகளில் தன்னை ஒப்படைத்துக்கொள்வார். அவர் வழங்கிய இரண்டு முக்கியமான தீர்ப்புகள் குறித்து நான் ஜூனியர் விகடனில் 26.09.2008 அன்று எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல அற்புதமான தீர்ப்புகள் பலவற்றை அவர் வழங்கியிருக்கிறார். திரு சந்துரு அவர்கள் உச்சநீதி மன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்று போயிருந்தால் வரலாற்றில் நிலைத்துநிற்கக்கூடிய  தீர்ப்புகள் பலவற்றை வழங்கியிருப்பார்.
திரு சந்துரு அவர்களுக்கு நன்றி பாராட்டி இக்கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன்.  



ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் தூண்களில் முக்கியமானது நீதித்துறை. அரசியல் மீதும், நிர்வாகத்துறையின் மீதும் நம்பிக்கை இழக்கிற மக்களுக்கு கடைசிப் புகலிடமாகவும், ஆறுதலாகவும் விளங்கிக் கொண்டிருப்பது அதுதான். மற்ற துறைகளைப் போல நீதித்துறையும் அவ்வப்போது விமர்சனத்துக்கு ஆளாகிறது என்றபோதிலும், ஒப்பீட்டளவில் அது இப்போதும் நம்பிக்கைக்குரியதாகவே விளங்குகிறது. சில நல்ல நீதிபதிகள் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாய்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதியானவர் ஒரு வழக்கின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்டு சட்டங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து தனது முடிவை அறிவிக்கின்றார். ஒரு வழக்கின் இறுதியில் வழங்கப்படுவது தீர்ப்பா? அல்லது நீதியா? என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு சொல்லப்படுகிற தீர்ப்புகளை நாம் அறிவோம். சட்டங்களை மட்டுமே பார்க்காமல் நியாயங்களையும் நினைவில் கொண்டு வழங்கப்படுகிற ஒரு தீர்ப்பு நீதி என்ற மதிப்பைப் பெறுகிறது. அத்தகைய நீதியை வழங்குகிற நீதிபதிகள் நமது நாட்டில் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.ஏ.தேசாய், சின்னப்பரெட்டி என்று நாம் பெருமையோடு நினைவு கூர்கிற நீதிபதிகள் நமது சட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தி இந்திய ஜனநாயகத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைத்து குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமான தீர்ப்புகளை இப்போது வழங்கிக்கொண்டிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் திரு. சந்துரு அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவர் அண்மையில் வழங்கியுள்ள சில தீர்ப்புகள் நமக்கு அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற திரு. கே.ராமசாமி அவர்களை ஒருமுறை நான் சந்தித்து பேட்டி கண்டேன். அப்போது தனது நீதித்துறை அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். உச்சநீதிமன்றத்தில் அதிக தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அவர்தான் என்று சொல்லப்படுகிறது. அதிகமான தீர்ப்புகளை மட்டுமல்ல முக்கியமானத் தீர்ப்புகளையும் அவர் வழங்கியிருக்கிறார். ‘‘நான் எனது தீர்ப்புகளை ஓப்பன் கோர்ட்டில் அப்படியே டிக்டேட் செய்வேன்’’ என்று அவர் அப்போது குறிப்பிட்டார். அவர் வழங்கிய தீர்ப்புகளைப் படித்தபோது அவை ஒரு ஆய்வுக் கட்டுரையின் தரத்துக்கு இணையாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பல துறைகளைப் பற்றியும் ஞானம் இல்லாமல் அத்தகைய தீர்ப்புகளை வழங்க முடியாது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புகளைப் படிக்கும்போதும் அப்படியான ஒரு பிரமிப்புதான் நமக்கு ஏற்படும். இப்போது நீதிபதி திரு. சந்துரு அவர்கள் வழங்கி வருகின்ற தீர்ப்புகளைப் படிக்கும்போது அவரது பல்துறை அறிவும், அதை அவர் பயன்படுத்துகிற பாங்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி அவர் வழங்கிய தீர்ப்பொன்றில் கலீல் ஜிப்ரானின் அற்புதமான கவிதை ஒன்றை மிகப் பிரமாதமாக அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார் (W.P. (MD) No.1034 of 2008 and M.P.(MD) No.1 of 2008). விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நல்லூர் ஊராட்சி மன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகம் ஒன்றைக் கட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த நூலகத்தைக் கட்டுவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட பொது இடத்தில் அதை கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை வலியுறுத்தி அந்த ஊராட்சி மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார். நூலகம் கட்டப்பட்டால் அது தனது வீட்டிற்குச் செல்லும் பாதைக்கு இடையூறாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்த அவர், நூலகம் கட்டுவதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ஏற்கனவே நாடக அரங்கம் ஒன்று கட்டப்பட்டு இருப்பதாகவும், முன்பு சில சந்தர்ப்பங்களில் அங்கே ஆதிதிராவிட சமூகத்தவருக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையில் மோதல்கள் நடந்திருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் ‘‘கிராம மக்களின் நலனை உத்தேசித்து’’ நூலகத்தை வேறு எங்காவது கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51&ஏ ஒவ்வொரு குடிமகனுக்கும் சில கடமைகளை வரையறுத்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி மனுதாரரின் கோரிக்கை அதற்கு எதிரானதாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆதிதிராவிட மக்கள் தமது பகுதிக்கு வந்து விடாமல் தமது பகுதியை ‘தீட்டுப்படாத’ ‘புனிதமான’ ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என அந்த கிராமத்தில் உள்ள பிற சமூகத்தினர் எண்ணிய காரணத்தினால்தான் அப்படியொரு தீர்மானத்தை ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று கூறிய அவர், அந்தக் கிராம மக்களின் மனநிலை கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது ‘வெள்ளைக்காகிதத்தின் கூற்று’ என்ற தலைப்பிலான கவிதையில் விவரித்துள்ளவற்றுக்கு ஒப்பானதாக இருக்கிறது எனக்குறிப்பிட்டு அந்தக் கவிதை முழுவதையும் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
‘‘நான் தூய்மையானவளாக படைக்கப்பட்டேன். அப்படியேதான் எப்போதும் இருப்பேன். மையினால் கறைபடுவதைவிடவும் எரிந்து சாம்பலாவதையே நான் விரும்புவேன் என்று ஒரு வெள்ளைக்காகிதம் கூறியது. மை குப்பி ஒன்று அதைக்கேட்டது. தனது கறுத்த மனதுக்குள் சிரித்துக்கொண்டது. காகிதத்தின் பக்கம் அது நெருங்கவில்லை. வண்ண வண்ணப் பென்சில்கள் அதைக்கேட்டன. அவையும் அந்தக் காகிதத்தின் பக்கம் செல்லவில்லை. அந்த வெள்ளைக்காகிதம் தூய்மையாக, புனிதமாக கற்போடு காலமெல்லாம் இருந்தது. வெறுமையாக’’ என்பதுதான் அந்தக் கவிதை. நூறு பக்கங்களில் சொல்வதைவிட மிக அழுத்தமாக அந்த ஊர்க்காரர்களின் அறியாமையை இந்தக் கவிதையின் மூலம் நீதிபதி அவர்கள் எடுத்துக்காட்டி விட்டார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அவர் வழங்கியுள்ள தீர்ப்பு இன்னும் முக்கியமானது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008).  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அவர், பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரமான சட்டத்தைத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் பேசியபோது, ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ என்று நான் கோரிக்கை விடுத்தேன். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையேகூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மடங்கள், சமணக் கோயில்கள் உட்பட இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,422 கோயில்கள் உள்ளன. அதில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருகிற கோயில்கள் 160. பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் வருகிற கோயில்கள் 34,415 ஆகும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கிராமக்கோயில்கள் எவ்வளவு உள்ளன என்பது துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறு மையங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நாற்பது பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐம்பத்தைந்து பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், எண்பத்தெட்டு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், இருபத்துநான்கு பேர் இதர வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். அவர்களுள் பெண்கள் எவரும் கிடையாது.

ஆகம விதிகளின்படி பூஜை செய்வது பரம்பரை உரிமையாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேத காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக உரிமை பெற்றிருந்தார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பிறகு பெண்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதனால் பூஜை செய்கிற உரிமையையும் அவர்கள் இழந்தார்கள். இன்று ஆண்களுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் அவர்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றபோதிலும் மதம் சார்ந்த நிறுவனங்களுக்குள் அவர்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை ஆகும்.
நீதிபதி சந்துரு அவர்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கானதுதான் என்றபோதிலும், அதை அனைத்துக் கோயில்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் மனுஸ்மிருதியில் இருந்து விடுபட்டவை என்று அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானதொரு கூற்றாகும். தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு எடுத்துக்கூறுவது பயனுள்ளதாய் இருக்கும்.
இன்றைய சூழலில் பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சொல்லி அரசாங்கங்கள் உருவாக்குகிற சில சட்டங்கள் ஜனநாயகத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய தீர்ப்புகளே அதை விரிவுபடுத்தவும், வலிமையாக்கவும் உதவுகின்றன. நீதிபதி சந்துரு அவர்களே, இப்படியான தீர்ப்புகள் பலவற்றை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும். இந்திய நீதித்துறையில் புகழ் பெற்று விளங்கிய நீதிபதிகளின் வரிசையில் உங்கள் பெயரும் இடம் பெறுவது தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்குப் பெருமை.

2 comments:

  1. நீதிநாயகம் சந்துருவை பற்றி, அவருடைய தீர்ப்புகளை பற்றிய திரு. ரவிகுமாரின் கட்டுரை பயனுள்ளது. நீதிநாயகம் அவர்கள்,

    "அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’

    என்று சொன்னது சாஸ்வத உண்மை. வள்ளலாரை பற்றிய வழக்கு ஒன்றில் அவருடைய தீர்ப்பை வரவேற்று, நான் ஒரு முறை மின் தமிழில் எழுதி இருக்கிறேன்.நீதிநாயகம் சந்துருவை பற்றி, அவருடைய தீர்ப்புகளை பற்றிய திரு. ரவிகுமாரின் கட்டுரை பயனுள்ளது. நீதிநாயகம் அவர்கள்,

    "அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’

    என்று சொன்னது சாஸ்வத உண்மை. வள்ளலாரை பற்றிய வழக்கு ஒன்றில் அவருடைய தீர்ப்பை வரவேற்று, நான் ஒரு முறை மின் தமிழில் எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரை.
    சந்துரு அவர்களுக்கு வாழ்த்துகள்.
    ஒரு கேள்வி: அர்ச்சகர் பள்ளியில் பயிற்றுவிக்கப் படுவது
    எந்த மொழி? அர்ச்சகர் பள்ளியில் பயின்ற அனைத்து சாதி மாணவர்கள் ஒழுக வேண்டிய முறைகள் என்ன?
    இவை பற்றிய செய்திகள் இருப்பின் அறியத்தரவும்.

    ReplyDelete