Tuesday, February 19, 2013

'வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார்




ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கையுடன் கூடிய வலுவான ஒரு தீர்மானத்தை முன்வைக்குமாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான கத்தோலிக்க மதகுருமார் குழு ஒன்று ஐநாவின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

மன்னார் ஆயர் உட்பட மதகுருமார்களும் அருட்சகோதரிகளுமாக 133 பேர் கையெழுத்திட்டு கடிதம் மூலமாக இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட மிகவும் மென்போக்கான பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றுவதற்குரிய அரசியல் ஆர்வமின்மையையே நாங்கள் அரசாங்கத் தரப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

''இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதற்கான ஆணையாளர் ஒருவரை நியமித்தல் போன்ற விடயங்கள் கவனிக்கப்படவில்லை. இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் கையளித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல், தேசிய மொழிப்பயன்பாடு போன்றவை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பரிந்துரைகள் மீறப்பட்டிருப்பதையும் நேரில் நாங்கள் கண்டு வருகின்றோம்'' என்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் தமது கடிதத்தில் கூறியிருக்கின்றார்கள்.

''கடந்த ஆண்டில், அமைதியான வழியில் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் அல்லது அரசுக்கு சவால் விடுத்தவர்கள், ஐ.நாவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள்கூட, சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தினர், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். விசாரிக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட எங்களில் சில மதகுருமார், தாம் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக இந்தக் கடிதத்தில் கையெழுத்திட முன்வரவில்லை'' என்றும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ள நிலையில், தமிழ் மக்களையும் சமூகத்தையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளாக, சமூக, கலாசார, மத, மொழி, நிலஉரிமைகள் - ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், அடக்கப்படுவதை தாம் உணர்ந்திருப்பதாகவும் மதகுருமார் கூறியுள்ளனர்.
சிறப்புப் பிரதிநிதி தேவை

''போருக்கு பின்னர், தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்த அடக்குமுறைகள் எங்கள் மக்களின் அடையாளத்தை எதிர்காலத்தில் அழிந்து விடும் என்று நாம் அஞ்சுகிறோம். எனவே தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு அளிக்கப்பட வேண்டியது ஒரு அவசர தேவை உள்ளது'' என்றும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ள அதேவேளை, ஒட்டுமொத்த நாட்டில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தனம் குறித்தும் தாங்கள் கவலையடைந்திருப்பதாகவும் கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால தாக்குதல்கள், 27 சிங்கள கைதிகள் கொல்லப்பட்டமை, சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்ற மனித எச்சங்கள், மாத்தளை மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், மதகுருமார் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் தாங்கள் கரிசனை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இறுதி யுதத்தத்தின்போது, எல்லா தரப்பினராலும் இழைக்கப்பட்ட அனைத்துலக சட்டமீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை உருவாக்கும் வகையிலும், கடந்தகால, மற்றும் தற்போதைய மனிதஉரிமை மீறல்களுக்கு பரந்தளவிலான பதிலளிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசுக்கு உதவும் வகையில், ஆலோசனை வழங்குவதற்கென சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு அந்தக் கடிதம் கோரியிருக்கின்றது.
நன்றி : பி பி சி தமிழோசை 

No comments:

Post a Comment