Friday, February 22, 2013

ஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1



 ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் கூடவிருக்கிறது.இலங்கை குறித்த தீர்மானம் மார்ச் 15 ஆம் நாள் விவாதிக்கப்படவுள்ளது. இதனிடையே சேனல் 4 நிறுவனம் தயாரித்திருக்கும் ஆவணப்படம் வெளியாகி இலங்கையில் நடந்த இனப்படுகொலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி 2010 ஜனவரி மாதத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையில் மூன்று பகுதிகளாக நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்.


                இலங்கை தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையிலிருந்து செயல்படும்மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்’( யு.டி.ஹெச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை 2008ஆம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை விரிவாகத் தொகுத்திருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி துவங்கி 18ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்தவர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து வெளியாகி வந்த செய்திகளில் பெரும்பாலானவை யூகங்கள் மற்றும் செவி வழிச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டிருக்க, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று வெளியிடபபட்ட இந்த அமைப்பின் அறிக்கைதான் அந்த கொடூரங்களை முதன்முதலாக விரிவான முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறது.
                இந்த அமைப்பு விடுதலைப்புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் விமர்சிக்கின்ற ஒரு அமைப்பாகும். இதன் உறுப்பினர்கள் பலரும் தலைமறைவாக இருந்தே பணியாற்றி வந்தனர். இருதரப்பையும் விமர்சனம் செய்ததால் அவர்களுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அச்சுறுத்தல் வந்து கொண்டேயிருந்தது. எனினும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தைரியமாக உண்மைகளைச் சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்தி வந்தார்கள்.
                இலங்கை அரசு எவ்வளவு கொடூரமாகத் தமிழர்களைப் படுகொலை செய்தது. அப்படிச் செய்துவிட்டு இன்றுவரை எவ்வாறு இந்தியாவையும், உலக நாடுகளையும் அது ஏமாற்றி வருகிறது என்ற விவரங்களையெல்லாம் விரிவாக இந்த அறிக்கையில் தொகுத்திருக்கிறார்கள். இதில் இடம் பெற்றிருக்கும் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்மை உலுக்குகின்றன. நாம் பல்வேறு செய்திகளின் மூலமாக ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்கள்தான் என்றபோதிலும் இந்த வாக்குமூலங்கள் வழியே நாம் அந்த இனப்படுகொலையைத் தெரிந்து கொள்ளும்போது நம் நெஞ்சு பதைக்கிறது. பல்வேறு நபர்களை விசாரித்து தடையங்களை சேகரித்து மிகவும் ஆதாரபூர்வமாக இந்த அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுத்தப்பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும்போது இலங்கை அரசு ஏமாற்று தந்திரங்களை கையாண்டது. இன்றைக்கும்கூட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு சிங்கள அரசு எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. யுத்தத்தில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கையைக் கொண்டு ஓரளவுக்கு நாம் யூகிக்கலாம். 2009 ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் வரை சுமார் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. ஆனால் அதே காலக்கட்டத்தில் சுமார் 6,500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்களில் சிலர் வெளிப்படுத்தினார்கள். அந்த மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்ததமிழர் புனர்வாழ்வுக் கழகம்என்ற அமைப்பினரோ அந்தக் காலக்கட்டத்தில் தினம் 60லிருந்து 90 பேர் வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தார்கள். எனவே கொல்லப்பட்டது சுமார் 6,500 பேர் வரை இருக்கலாம் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தினரின் மதிப்பீடோ இன்னும் அதிகமாக இருந்தது. புலிகளின் சுகாதாரத் துறை பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 37 ஆயிரம் இருக்கும் எனக் கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஏப்ரல் மாதத்தில் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதாவும், மே மாதத்தில் பதினைந்தாயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த பெண் டாக்டர் தெரிவித்துள்ளார்.
                முள்கம்பி முகாம்களிலிருந்து தங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என விருப்பப்பட்ட ஒருவரையும் அரசாங்கம் அனுப்பவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். முகாம் ஒன்றில் இருந்த மருத்துவர் ஒருவரின் வாக்குமூலம் நம்மைக் கண்ணீர் சிந்த வைக்கிறது. முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை விரிவாக பேசியிருக்கிறது. நன்றாக விசாரணை செய்த பிறகுதான் முகாம்களில் இருப்பவர்களை விடுவிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. விசாரணை என்ற பெயரில் மேலும் மேலும் மனித உரிமை மீறல்கள்தான் நடத்தப்படுகின்றன. எவரை வேண்டுமானாலும் புலிப்படையில் இருந்தவர் எனக்கூறி சித்ரவதை செய்வதற்கு இப்போது நல்ல வாய்ப்பு சிங்கள ராணுவத்தினருக்குக் கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் தவறவிட விரும்பவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமிழர்களை அவர்கள் இழிவுபடுத்தி சித்ரவதைப் படுத்தி, சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். முகாம்களில் இருக்கும் இளைஞர்களை விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து சிங்கள அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்கள் தங்களது தலைமுடியை கிராப் கட்டிங் செய்திருந்தால் அவர்களெல்லாம் புலிகளின் படையில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிங்கள ராணுவ வீரர்கள் எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.
                முகாம்களிலிருக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என அவ்வப்போது வெளியாகும் ஒருசில செய்திகளைத்தவிர அவர்களுடைய உண்மை நிலை எதுவும் வெளிவருவதில்லை. பொழுது சாய்ந்த பிறகு ஒரு வேனில் வருவது, அங்கே இருக்கும் இளம்பெண்களை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களையெல்லாம் அந்த வேன்களில் அழைத்துச் செல்வது, மீண்டும் அதிகாலை நேரத்தில் கொண்டுவந்து விடுவது என சிங்கள ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. அப்படி அழைத்துச் சென்று கூட்டிவரப்படும் பெண்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை ஏற்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் துணிவு இல்லாமல் குற்ற உணர்வால் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
                முகாம்களில் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும்கூட சிங்கள ராணுவத்தின் கொடுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. வவுனியா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் அங்கு சிங்கள ராணுவத்தினர் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் பலரைப் பிடித்துச் செல்வது பற்றியும், அப்படி ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் ஒருவர்கூட முகாம்களுக்குத் திரும்பி வரவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் பற்றி சரியான பதிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஒருவர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார் என்பதையோ, அவர் ராணுவத்தால் எங்கே அழைத்து செல்லப்பட்டார் என்பதையோ நாம் தெரிந்து கொள்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
                இந்திய அரசை இலங்கையிலுள்ள ராஜபக்ஷ அரசு எவ்வாறெல்லாம் ஏமாற்றியிருக்கிறது என்ற விவரங்களையும் இந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள். முகாம்களின் நிலைமையைப் பற்றிய உண்மைகளை சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொல்ல முற்பட்டபோது அவர்களுடைய விசா அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு அல்லாமல் அவர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் இலங்கை அரசு மிரட்டி வந்தது. அதனால், பலர் வாய்மூடிக் கிடக்க வேண்டியதாயிற்று. 2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவின் உதவியோடு அனல்மின் நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த மின் நிலையத்துக்கான இடத்தை சம்பூர் என்ற பகுதியில் தேர்வு செய்திருந்தது. அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களை அங்கிருந்து காலி செய்வதற்காக அப்பகுதியின் மீது இலங்கை அரசு வான்வெளித் தாக்குதலை நடத்தியது. கடுமையான குண்டு வீச்சின் காரணமாக அப்பகுதி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி எஞ்சியிருந்தவர்களெல்லாம் தமது வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு இடம் தேடி ஓட வேண்டிய நிலை உண்டாயிற்று. அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குத் திரும்ப முடியாதபடி இலங்கை அரசு தடை விதித்து விட்டது. இவையெல்லாம் இந்தியாவுக்குத் தெரிந்தே நடந்தவைதான். மார்ச் 2009ல் இந்திய அரசு மருத்துவமனை ஒன்றை யுத்தமுனையில் திறந்தது. அங்கு ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் இலங்கை அரசின் தமிழர் விரோத அணுகுமுறையை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். ஒருமுறை அந்த மருத்துவமனைக்கு பசில் ராஜபக்‌ஷேசில பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்திய மருத்துவர் ஒருவர் அவரைப்  பார்த்து ஒரு தோட்டாவில் சிதைந்த பாகங்களை எடுத்துக்காட்டி ‘‘இதை நான் ஆறு வயது குழந்தை ஒன்றின் இதயத்திற்கு அருகில் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தேன். நீங்கள் பயங்கரவாதிகளைத்தான் சுடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆறு வயது குழந்தை ஒரு பயங்கரவாதியா?’’ என்று ஆவேசமாகக் கேட்டார். பசில் ராஜபக்‌ஷே பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்தியா நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்ததன் மூலம் காயம் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்து காட்டியது. இப்போதும்கூட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உதவி வருகிறது. ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புதைகுழிகள் உலக நாடுகளின் கவனத்துக்கு வந்துவிடக் கூடாது என அஞ்சிய இலங்கை அரசு அதனால்தான் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உலக நாடுகள் பல உதவி செய்ய முன்வந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இப்போது இந்தியாவோடு சேர்ந்து கண்ணி வெடிகளை இலங்கை அரசு அகற்றி வருகிறது. இதை ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் துரோகமாகவே கருதுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதைகுழிகள் வெளியுலகுக்குத் தெரிந்தால் போர் குற்றங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்கள் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தியா தற்போது கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது என தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்தில் நடத்தப்பட்ட போரின் வேகம் சற்று மட்டுப்படுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால், அங்கே நடந்த போரைப் பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்திருக்கும் இந்த அறிக்கை இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கை அரசு எந்த சலுகையையும் காட்டவில்லை. மாறாக இந்திய தேர்தல் முடிவதற்குள் தமிழர்களை அழித்து அங்கே போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில்தான் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள் என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
                கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கைச் சூழல் எவ்வாறு பேரினவாத அரசியலால் மாசுபடுத்தப்பட்டது என்பதை இந்த அறிக்கை விரிவாக எடுத்துரைத்துள்ளது. தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தபோதிலும், இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அங்கு ஒருபோதும் அமைதி ஏற்படாது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள இந்த அறிக்கை இதற்காகத் தமிழர்கள் மீண்டும் தனியே ஆயுதமேந்திப் போராடுவது என்பதை சரியான வழியாக ஏற்கவில்லை. தற்போதைய இலங்கையின் நிலை ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினருக்குமே ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. எனவே இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்குவதில் தமிழர்களைப் போலவே சிங்களர்களுக்கும் பொறுப்புள்ளது. இரண்டு இனங்களையும் சேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட ஜனநாயக சக்திகள் சேர்ந்து செயல்படும்போதுதான் இலங்கையின் விஷச்சூழல் மாறும் என்பதை இந்த அறிக்கை விரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இதில் உள்ள முக்கியமான அம்சம் போர் நடந்தபோது கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்கமூலங்கள்தான். படிக்கும்போது நமது ரத்தத்தை உறைய வைக்கும் அந்த வாக்குமூலங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன என்பதை அவர்களின் வார்த்தைகளிலேயே அடுத்துப் பார்ப்போம்...

No comments:

Post a Comment