Wednesday, November 28, 2012

பண்டிகைகள் : அயோத்திதாசப் பண்டிதர் விளக்கம்


தமிழ்நாடில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள் குறித்து அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருக்கும் விளக்கம்

ஸ்ரீ அம்பிகையம்மன் பண்டிகை

(‘‘ஆடி மாதம் பௌர்ணமி அல்லது ஓர் ஆதிவாரத்தில் கொண்டாடப்படுவது’’)
1. இவ்வம்மன் குடிகளுக்குற்ற மாறியென்னுங் கொடுநோய் விலக்கத் தாமிருந்த வேம்புமர இலை முதலியதால் மாறியை யாற்றி ஆரோக்கியத்தை யளித்தவளாதலின் ‘‘மாறியாற்றாள், ஆரோக்கியநாயகி’’ என்ற சிறப்புப்பெயர் பெற்றதுடன்; ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், மூதுரை முதலிய நூற்களைக் கற்பித்து ஔவையாரென்ற பெயரும் பெற்றார். சிலர் மாரி, மாயியென்றும்; சிலர், எங்கள் சாமியின் மனைவியென்றும், புகழ்ந்து மிகழ்ந்து மிருக்கின்றார்கள்.

ஸ்ரீமுருகன் பண்டிகை
(கார்த்திகை மாதம் கொண்டாடப்படுவது)

2. இவருலகோபகாரமாய் மஞ்சளும் அரக்குஞ் சேர்த்து மயில் போன்ற வடிவில் ஓர்ஆகாய கமனஞ்செய்துதவினார். அக்கமனம் மஞ்ஞை எனப்படும். ஒருசாராரிவரை எங்கள் சாமியின் படைக்குச் சேனாதிபதியெனவும், சாமியின் புத்திரனெனவும் புகழ்ந்து, பிறப்பு முதலியவைகளைப் பிறரிகழ வைத்திருக்கின்றார்கள்.

ஸ்ரீமாபலியன் பண்டிகை 
(‘‘புரட்டாசி மாதம் அமரவாசியில் கொண்டாடப்படுவது’’)

(மாளிய அமரவாசி) இது மாபலி அமரவாசியாகும்
3. இவர் திருவேங்கிடகிரியில் பூர்வவேதாந்திகள் தங்கி அறமளிக்கத் தக்க வியாரங்களை ஸ்தாபித்து; புத்ததர்ம ஒழுக்கப்படி சிரமுண்டிதமும், மஞ்சளாடையுமேற்று சங்கஞ்சார்ந்து தர்மாபிவிர்த்திக் காவலனாய் விளங்கி புத்ததர்ம (வாயில் காப்போன்) வழிகாட்டி யென்ற பெயர் பெற்றார். ஒருசார்பார்நெய்திருடியபெருச்சாளி யிவரென்றும், மற்றொரு சார்பார், எங்கள் சாமியின் வீட்டுவாசலில் காத்திருந்தாரென்றும் (சேவகன்) எங்கள் தேவனே யிவரைக் கொலைச்செய்தாரென்றும், உயர்த்தியுந் தாழ்த்தியு மிருக்கின்றார்கள்.
இத்தேவர்களைப்போலவே, இராகுலர், திருவள்ளுவர் முதலியவர்களுமாகுவரெனினும் அவர்களினாட்கள் முதலியவற்றை விளக்கினால் விரியுமென்றஞ்சி நிறுத்தப்பெற்றது.

குறிப்பு : இங்கெடுத்தோதிய தேவர்களின் மெய்ச்சரித்திரங்களெல்லாம், பொய்ச்சரித்திரங்களில் மாற்றிக் கூட்டப்பெற்றிருப்பது, பௌத்த சங்கங்கட்கன்றி யேனையோர்க்கு மனநோக்காடாகா. அதேனெனில், தேவேந்திரன் பெயரும், வேதமும், குருக்களும், கோவில்களும், அரசர்களும், குடிகளுங்கெட, பலபொய்ச் சரித்திரங்களை யெழுதிவிட்டவாறே, புத்தகுருவுக்குப்பின் விளங்கிய அடியார்களின் சரித்திரங்களையும் பல தூஷணமொழியால் இழிவுபடுத்திவிட்டார்கள். ஆகையால், யதார்த்த வேதாந்திகள் மூலமாய் நடத்தும் சுதேஸதெய்வ (புத்த) சங்கஞ்சார்ந்து மெய்ப்பொருளறிய பௌத்த தூதர்கள் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment