Tuesday, October 9, 2012

இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு ?

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 11 ஆம் தேதி அறிவிக்க்கப்படவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதைப் பெறப் போகிறவர் யார் என்ற வினா உங்களுக்கும் எழுந்திருக்கும்.சென்ற ஆண்டு கவிதைக்கு தரப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு  நிச்சயம் அதைப் பெறப் போகிறவர் ஒரு கவிஞர் அல்ல. அனேகமாக அதுவொரு நாவலாசிரியருக்குத் தரப்படலாம். ஏற்கனவே பல பெயர்கள் யூகங்களாக முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் இந்தியாவைச் சேர்ந்தவர்களது பெயர் ஒன்றுகூட இல்லை . இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளை அதிகம் பெற்றவர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தாம். 

                                                      மகாஸ்வேதா தேவி


என்னைக் கேட்டால் , தற்போதுள்ள இந்திய எழுத்தாளர்களில் மகாஸ்வேதா தேவியின் பெயரை நான் நோபல் பரிசுக்குப் பரிந்துரைப்பேன். இந்திய எழுத்தாளர்களில் நான் சந்திக்க விரும்பும் ஒரே எழுத்தாளர் அவர்தான். அவர் எழுதிய சிறுகதைகளான  ஸ்தனதாயினி, விதை, ரவிக்கைக்குப் பின்னால் என்ன இருக்கிறது ஆகியவற்றை நான் நடத்திவந்த / நடத்தி வரும் தலித் மற்றும் மணற்கேணி ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறேன். புதுமைப் பித்தனின் மொழியில்  காணப்படும் வேகத்தை அவரது எழுத்தில் நான் கண்டேன் . தார்மீக கோபம் கலையாக மாறும்போது அது உருவாக்கும் தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பதை மகாஸ்வேதா தேவியின் படைப்புகளில் நாம் உணரலாம். 

                                                              நவால் எல் சாடவி
நோபல் பரிசுக்கும் மேற்குலகின் அரசியலுக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதைக் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பரிசுகள் வெளிப்படுத்தியுள்ளன. அரபு நாடுகளில் ஆட்சியாளர்களை எதிர்த்து நடைபெற்றுவரும் கலகங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு அரபு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படலாம். அப்படிப் பார்த்தால் எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான நவால் எல் சாடவியின் பெயர்தான் அந்த வரிசையில் முதலில் இருக்கும். 

No comments:

Post a Comment