Tuesday, October 23, 2012

வீ.எஸ்.ராஜம் அவர்களுக்கு ரவிக்குமாரின் மறுமொழி

அன்பு ராஜம் அம்மா
நீங்கள் இப்படி  மடல் எழுதுமளவுக்கு உடல் நலத்தோடு இருப்பது கண்டு மகிழ்ச்சி . தமிழகத்தில் மட்டுமல்ல மனிதகுலம் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் ( ஒபாமாவின் அமெரிக்கா உட்பட ) அடிப்படையான தேவைகளுக்கானப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதனால் மற்ற விஷயங்கள் தேவையில்லை என அர்த்தமாகாது. நீங்கள் குறிப்பிடும் சுகாதாரப் பிரச்சனைகளைவிடவும் ஏராளமான உயிரிழப்புகளுக்குக் காரணமாகியிருக்கிறது இந்த சாதி என்ற வைரஸ் .
சாதிக்கேற்ற உணவுகள் இருக்கின்றன, அவற்றை  அந்தச் சாதியினரால் மட்டுமே சிறப்பாகத்  தயாரிக்க முடியும் என்ற வாதம் இன்று பொருந்தாது. செட்டிநாடு உணவகம் என்ற பெயரில் நடத்தப்படும் எந்தக் கடையிலும் ஆச்சிமார்கள் சமைப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் கூட இப்போது Pizza Huts பிரபலம் , சீன உணவான நூடுல்சை நம்ம ஊரில் தெருவோரக்   கடைகளில் கூடப்  பிய்த்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .
தனது சாதியை சொல்லிக்கொண்டால்  என்ன ? என்ற கேள்வி, சாதி அமைப்பின் குரூரத்தை மறந்துவிட்டுக்  கேட்கப்படும் ஒன்றாகத்தான் இருக்கும். இப்படியொரு கேள்வியை அந்த அமைப்பால் நசுக்கப்படும் ஒருவர் ஒருநாளும் கேட்கவே முடியாது.
அன்புடன்

ரவிக்குமார்

No comments:

Post a Comment