Tuesday, January 31, 2012

சம்மதம் - சோனியா கமால்




 சிறிய வேன் ஒன்றை மாற்றி அமைத்து உருவாக்கப்பட்டிருந்த கிளினிக் அது. ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்த அதன் சுவர்கள் இப்போது பழுப்பாக, தண்ணீர் ஒழுகிக் காணப்பட்டன. டாக்டரின் மேசையில் பாண்டோல் விளம்பரக் காலண்டர் ஒன்றும், ஒரு மேசை விளக்கும், ஒரு தொலைபேசியும் மட்டுந்தான் இருந்தன. புதைகுழி ஒன்றிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கைகளைப்போல படுக்கையின் கால்கள் தரையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்தன. படுக்கை விரிப்புகளிலிருந்து மட்கிப்போன நாற்றம் அடித்தது. படுக்கைக்கு மேலே ஒரு கடிகாரம் மாட்டப்பட்டிருந்தது. டிக் டாக் டிக் டாக். நொடியைக் காட்டும் நீளமான கை பாம்பைப்போல வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மலிஹாவும் அவளது தோழியும் ’வெய்ட்டிங் ரூமாக’ பயன்பட்டுவந்த  இடத்தில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். 
ஒருமணி நேரம் தாமதமாகத்தான் அந்த பெண் டாக்டர் வந்தார். அதற்காக எந்தவொரு வருத்தமும் அவரிடம் தெரியவில்லை. ஹென்னா போட்டு ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டிருந்த அவரது தலைமுடி ஒழுங்காக வாரப்படாமலிருந்தது. அவர் தனது கைகளை அவர்களை நோக்கி ஆட்டினார். நீளமான நகங்களைக்கொண்ட கைகள், சிவப்பு நகச்சாயம் உரிந்திருந்தது, தனது  ராச்சியத்தில் ஒரு மகாராணியைப்போல அவர் அமர்ந்திருந்தார், அந்த இருக்கைக்கு முன்னால் வருமாறு அவர்களை அழைத்தார். 
” உனக்குத் திருமணம் ஆயிடுச்சா? “ டாக்டர் கேட்டார். 
ஓ யெஸ் ! தனது விரலில் இறுக்கமாக அணிந்திருந்த திருமண மோதிரத்தை டாக்டரிடம் காட்டியபடி மலிஹா பதில் சொன்னாள். 
“ திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?” 
“இரண்டு வருடங்கள் “
“உன் கணவர் எங்கே ?”
“வேலைக்குப் போயிருக்கிறார்”
“நீ இங்கே வந்திருப்பது அவருக்குத் தெரியுமா?”
” ம் “
“ உன்னோடு வந்திருப்பது உன் நாத்தனாரா?”
“ ம்ஹூம் ,இல்லை”
“ஏன் அவர் வரவில்லை?”
“எனக்கு நாத்தனார் யாரும் இல்லை”
“ அப்படீன்னா உன் மாமியார் எங்கே? உனக்கு மாமியார் இருந்துதானே ஆகணும்?”
“எனக்கு மாமியாரும் இல்லை”
“செத்துப்போய்விட்டார்” மலிஹாவின் தோழி இடைமறித்துச் சொன்னாள், “ அவர் செத்துப்போய்விட்டார்”
“ என்னுடைய ஃபீஸை முதலிலேயே கொடுத்துவிடவேண்டும் தெரியுமில்லையா? டாக்டர் கேட்டார். 
”தெரியும்”
“எவ்வளவு நேரம் ஆகும்?” மலிஹா கேட்டாள்.
“ஐந்தே நிமிடங்கள்தான்”
“ஐந்து நிமிடம்தான் என்றால் சமாளித்துவிடலாம்” மலிஹா தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
வேலை தொடங்கியது. மலிஹாவின் கால்கள் விரிக்கப்பட்டன. அவளது தலைக்கருகில் நின்றபடி அழுக்கடைந்த உபகரணங்களை தாதி எடுத்து டாகடரிடம் தந்துகொண்டிருந்தாள்.மலிஹாவின் தோழி அவலது கைகளைப் பிடித்துக்கொண்டாள்.பின்னாளில் மலிஹாவின் நகங்கள் அழுந்திய இடங்களில் சிவப்புத் தடயங்கள் இருந்ததை மலிஹா பார்த்தாள் என்றபோதிலும் அவளது தோழி அதுபற்றி ஒருநாளும் புகார் சொன்னதில்லை.   
மயக்க மருந்து எதுவும் இல்லை. அந்த இடுக்கி மலிஹாவை இரண்டாகப் பிளந்தது. சக்‌ஷன் உபகரணம் அவளுக்கு உள்ளே இருந்தவற்றையெல்லாம் உறிஞ்சி எடுத்தது. அவள் தனது சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டாள். முட்டியில் பட்ட சிராய்ப்பில் அயோடினை வைத்தது நினைவுக்கு வந்தது. எரிச்சல் தரும் குமட்டலெடுக்க வைக்கும் கரைசலுக்குள் நழுவவிடப்பட்ட உடம்பு முழுக்க சிராய்ப்பாக மாறிவிட்ட ஒரு பிண்டமாகத் தன்னை உணர்ந்தாள். 
மலிஹா அந்த கடிகாரத்தை வெறித்தாள். ஐந்து நிமிடம் ஆகி நெடுநேரம் கடந்திருந்தது. அவள் ஒரு விரல் ந்நிளமே இருந்த அந்த உயிரியைப்பார்த்து  ஒரு நிமிடத்தில் லட்சம் தரம் ’சாரி” சொல்லிக்கொண்டாள் .அவள் கத்துகிறாளா என்று பார்ப்பதுபோல் டாக்டர் அவளைக் கிள்ளிப் பார்த்தார். அவளது கால்களில் அறைந்தார். 
”ஷட் அப்” மலிஹாவின் கால்களுக்கிடையிலிருந்து டாக்டர் சொன்னார், “ஷட் அப்”
அதற்கு முக்கால் மணிநேரம் பிடித்தது.  ஏதாவது இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடுமோ அல்லது ரத்தப் பெருக்கு நிற்காமல் செத்துப்போய்விடுவோமோ என்று பயந்தபடி மலிஹா வீட்டுக்குப் புறப்பட்டாள். எது நடந்தாலும் அதை வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று அஞ்சினாள். இப்படியொரு காரியத்தை எந்தவொரு நல்ல பெண்ணும் செய்யமாட்டாள். எல்லாம் முடிந்தது மலிஹா தனது விரலில் அணிந்திருந்த தனது தோழியின் திருமண மோதிரத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள்.
 பத்து வருடங்கள் ஓடிவிட்டன. மலிஹாவின் சகோதரி .திரும்ணம் ஆனவள். ஏழு குழந்தைகள். அவளுக்குப் பிடித்தமான நம்பர் ஏழுதான். மறுபடியும் கர்ப்பமாகிவிட்டாள். அவளுக்கு ஆப்பரேஷன் செய்வதென முடிவு செய்யப்பட்டது. மலிஹாவும் அவளது அம்மாவும் அவளை ஒரு கிளினிக்குக்கு அழைத்துச் சென்றனர். பளபளப்பான பச்சைநிற வராந்தாவும் வெள்ளை மார்பிளும் பதிக்கப்பட்ட கிளினிக். ஒரு விஐபி அறையில் வசதிக்கேற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதிகொண்ட ஒரு படுக்கையில் அவள் படுக்க வைக்கப்பட்டாள். 
அழகான தலைமுடியை கொண்டையாகப் போட்டிருந்த டாக்டர் வந்தார். 
” குட் மார்னிங்! பேஷ்ண்ட் இப்போ எப்படி இருக்கிறாள்?” டாக்டர் கேட்டார்.
“ஃபைன்” என்றாள் மலிஹாவின் சகோதரி. அவள் விரலில் அணிந்திருந்த வைரம் பதித்த திருமண மோதிரம் சூரிய கிரணங்களோடு போட்டிப் போட்டுக்கொண்டிருந்தது. 
” சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றாள் அம்மா. 
பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அனஸ்தீஸியா கொடுத்திருந்ததில் மலிஹாவின் சகோதரி கொஞ்சம் சோர்வாயிருந்தாள் ஆனால் ஒரு ரோஜாப்பூவைப் போல அவள் மணந்துகொண்டிருந்தாள். 
திருமணம் செய்யாத அம்மாக்களை சமூகம் பாடாய்ப்படுத்துகிறது ஆனால் திருமணம் செய்துகொண்டிருந்தால் அப்பர்ஷனை கருத்தடைக்கான வழிமுறையாகப் பார்க்கிறது. அதற்கு சம்மதிக்கிறது. 
( மணற்கேணி ௧௦ ஆவது இதழின் சிறப்புப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளர் சோனியா கமாலின்  சிறுகதை . தமிழில் :ரவிக்குமார் 

அருந்ததி ராயுடன் ஒருநாள் - தேன்மொழி







அன்பை இன்னொருவிதமாகப் புரிந்துகொள்ளவைத்தது அந்த ஒரு நாள்.  கும்பகோணத்திற்கு அருகே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழபுரம் கிராமமும் நானும் அரசன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகளும் காத்திருந்தோம்.  அந்த சின்ன கிராமத்துக்கு அப்படியொரு பிரபலம் வந்ததில்லை. வருவதற்கு காரணமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய் அங்கு வருகிறார் என்றால் யார்தான் நம்பமுடியும்? அவர் தனது நாவலில் விவரித்திருக்கும் ஆயிமெனம் கிராமத்திலிருந்து நேரடியாக வருவதுபோல மலர்ச்சியோடு இருந்தார். அவரோடு எழுத்தாளர் ரவிக்குமார் வந்திருந்தார்.  மாணவிகளும் (சட்டமன்ற உறுப்பினர்) ரவிக்குமாரிடம் மனு கொடுப்பதற்காக வந்து காத்திருந்த ராணுவத்தினரும் தங்கள் சந்தோஷத்தைக் கைதட்டி வரவேற்றுப் புதுப்பித்துக்கொண்டார்கள்.  சிறிய கூட்டம்தான் என்றாலும் கள்ளமில்லாத அன்பால் நிறைந்திருந்தது அந்த இடம்.  மணற்கேணி பதிப்பகத்தின் முதல் நூலான நெற்குஞ்சம் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா. நூலை அருந்ததிராய் வெளியிட ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.  அந்த நூலின் ஆசிரியரான எனக்குள் ஒரு சிலிர்ப்பு அடர்ந்து அடங்கியதை மறுக்க இயலவில்லை.  என் வாழ்வின் உன்னதத்  தருணங்களில் ஒன்றாகிப்போனது அது.  வெளியில் இருந்தபடி மழையும் தன் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தது.  மழைக்குள் நானும் எனக்குள் மழையும் கரைந்துகொண்டிருந்தோம்.

நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் போர் விளையாட்டை முடித்துத் தாய் செய்த புண்ணியத்தால் உயிர் பிழைத்து இன்று கண்ணுக்கெட்டாத கிராமங்களில் வாழும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரிடம் பகிர்வதற்கு எராளமாய் கண்ணீர் கதைகள் இருந்தன. அதை ரவிக்குமாரோடு அருந்ததியும் கேட்டுக்கொண்டார்.  மலையாளம், ஹிந்தி. ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் உரையாடல்... மழையும் செறுமாய்க் கலந்து கிடந்தது.  திரும்பிப் பார்க்க இயலாத எல்லைக் கோடுகளைக் கடந்து வந்த அருந்ததியுடன் மாணவிகள் கலந்துரையாடினர்.  கிராமத்தை பூக்கச் செய்யும் மாணவிகள் தங்கள் ஈரம் செறிந்த நிறத்தைக் கேள்விகளாக மாற்றிக்கொண்டனர். "மேடம் உங்களுக்கு பிடித்ததை எங்களுக்குச் சொல்லுங்களேன்" ஒரு மாணவி கேட்டாள்.  "எப்போதும் அப்போது பூத்த பூவைப்போல் சந்தோஷமாய் இரு.  அதற்காக படி, அதற்காகப் போராடு,  தானே தன்னை சந்தோஷப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு முக்கியம் வாழ்வில் இல்லை."  பதிலில் மாணவிகளுக்குள் ஒரு பூ மலர்ந்தது.  கிராமத்து கறுப்புக் காப்பியின் வாசனை எங்களிடையே நுழைந்து வந்தது.  மாணவிகள் அளித்த ரோஜா மாலையை முத்தமிட்டார் அருந்ததி.  பூவாய்ப் பிறந்து பூவாய் மடிவதைப்போல் வேறு வரம் உண்டா.  சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்லவா!

எங்களது பயணம் கீழ்வெண்மணி நோக்கித் துவங்கியது.  ரவிக்குமாரும் அருந்ததியும் நிமிடங்களை இலக்கியத்தை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.  இடைஇடையே நானும் பருகிக்கொண்டேன்.  கோவர்த்தனி ரோஜாக்களை அவருக்குப் பரிசளித்தாள்.  அவற்றை தலையில் செருகிக் கொண்டார்.  ஏற்கனவே பூச்சரம் ஒன்று தலையில் சுற்றப்பட்டிருந்தது.  என் மகளை அணைத்தபடி குனிந்து "அம்மு என் தலையைப் பார் பூந்தோட்டம்" என்றார்.   பூக்களின் காடு சிரிப்பில் ஒளிர்ந்தது.  அருந்ததியையும் ஒரு குழந்தையாக்கி இரண்டு குழந்தைகளை என் மனம் சுமந்து பெருமை கொண்டது.  நர்மதை அணைக்கட்டு போராட்டத்தில் பெண்களின் இரட்டிப்பு துன்பத்தை ஆன்மாவில் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொண்டார்.  ஆண் மைய உலகம் ஆண் சுதந்திரம் போன்ற எனது கேள்விகளுக்கு தனது நிகழ்கால வாழ்க்கையை பதிலாக அளித்தார்.  "எனக்கு ரவி மாதிரி மிகச் சிறந்த  நண்பர்கள் உண்டு.  பெண்ணடிமையை அதிகபட்சமாக அமல்படுத்திய பெண்களைக் கொண்ட இச்சமூகமும் பெண் அடிமைக்கு முக்கிய காரணம். பெண்களின் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்ல".  பாலினம் கடந்து பறந்து கொண்டிருக்கும் அருந்ததி, கார் சிறிது  வேகமெடுத்தாலும் பதறினார்.  திருவாரூர், கீவளூர் கடந்து தேவூர் வழியாக கீழ்வெண்மணி நோக்கிப் பயணித்தோம்.  இருமருங்கிலும் வாய்க்கால், வயல், குளம் . மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவுகளை அழித்துக்கொண்டோம்.

 வண்ணமேற்றப்படாத உலகம் காலுக்குள் உயிர்ப்பாய் கிடந்தது.  நான் வயல் நண்டுகளை கரையேறி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தேன்.  அருந்ததி நாற்றங்கால் மேற்பரப்பில் பயிர்கள் மீது பறந்து கொண்டிருந்தது தெரிந்தது.  ரவிக்குமார் கோவர்த்தனியின் கனவுகளுக்கு மீன் குஞ்சுகளைப் பரிசளித்துக்கொண்டிருந்தார்.  அருந்ததியின் கண்களில் ஆய்மெனம் மிதந்துகொண்டேயிருந்ததைப் பார்த்தேன். தான் பார்க்கும் காட்சி ஒவ்வொன்றும் அவருக்கு அந்த கிராமத்தை நினைவுபடுத்தியிருக்கவேண்டும்.  அவ்வப்போது அவரோடு நாங்களும் அங்கே சென்று திரும்பினோம். அங்கே அவரது அம்மாவையும் அவர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடத்திவரும் பள்ளியையும் மனதில் வரைந்துகொண்டோம். எனக்குள் ஒரு கிராமம் உருவானது.  அருந்ததி அதில் சிறகுமுளைத்த பெண்ணாய் எல்லோரிலும் வேறுபட்டு நின்றார்.  நினைத்தவற்றை உடனே வார்த்தைகளாய்க் கொட்டினார்.  பின் எவற்றை அவர் எழுதினார் என வியந்து பார்த்தேன். சிறிய உயிர்களின் படைப்புக் கடவுளை அவர் மொழியில் உருவாக்கியது புரிந்தது.  "God Of Small Things" உருவான விதம், புக்கர் பரிசு, பணம் எல்லாவற்றைக் குறித்தும் பேசினார்.  அவரது மனம் எதனோடும் சேராமல் ஒதுக்கப்பட்டவற்றிற்கான கடவுளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது.
மழையின் சிதைவுஎச்சங்களாய் சாலைகள் இருந்தன.  மூக்கொழுக அழுக்குச் சட்டையில் இறுக்கி வைத்திருந்த பொறி அரிசியை கொடுத்து சிறிய கறுப்பழகி ஒருத்தி கீழ்வெண்மணியில் அருந்ததியை வரவேற்றாள்.  சிகப்புத் துண்டணிந்த ஒரு பெரியவர் வாழை மொட்டை அவிழ்ப்பதுபோல்  வெண்மணியின் கோரத்தை அருந்ததியிடம் உதிர்த்துக்கொண்டிருந்தார். புதிதாய் எழுந்துகொண்டிருந்த நினைவுச் சின்னம் சாட்சியாக நின்றது.  "சீக்குப் பிடித்த சமூகம். மனநிலை சரியில்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் இல்லையா ரவி" முகத்தில் வேதனையும் வெறுப்பும் சுருக்கங்களாக மாறியது.  மேலவளவு, வெண்மணி போன்ற வக்கிரங்களின் மூலங்கள் என்னவாக இருக்கும் என்பதாக அவரது கேள்வி அலைந்தது. கீழ்வெண்மணி டிசம்பர் 25க்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தது.  இருள்சூழ நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். " இருள் கிராமங்களில் மட்டுமே இருக்கிறது. கிராமங்கள் இருளை முழுதாய் தரிசிக்கின்றன நகரங்களல்ல" என்றேன்.  அவர் அதை ஆமோதித்ததை இருட்டிலும் பார்க்க முடிந்தது.  எல்லா நிமிடங்களையும் வார்த்தைகளாலும் சப்தங்களாலும் நிரப்பிக்கொண்டிருந்தோம்.  இரவுப் பூச்சிகள் விடை கொடுத்தன.  வெண்மணியில் இருந்து திரும்பும்போது அருந்ததிக்குள் ஒரு மௌனம் அடைந்துகொண்டது.  வளர்பிறையை ரசித்தபடி திருவாரூரில் தேனீர் பருகினோம்.  கும்பகோணம் நெருங்க நெருங்க மனதைப் பிரிவுக்காய் தயார் படுத்தி வைப்பது மிகவும் வலியானதாய் இருந்தது.  சோழபுரம் நெருங்கும்போது கும்பகோணத்தில் இல்லாத அளவு பனி அடர்ந்திருந்தது.  ஒற்றை பனிக்கூட்டுக்குள் நாங்கள் வசிப்பதுபோல் இருந்தோம்.  சோழபுரம் - துவங்கிய இடத்தை தொட்டிருந்தோம்.  வார்த்தைகள் முன்பே மறந்துபோய் இருந்ததால் மௌனமாக வண்டியை விட்டு இறங்கினோம்.  அருந்ததி உடலால் என்னைத் தழுவினார்.  உணர்வுகள் பரிமாறிக்கொண்டன.  கண்களை அசைத்து விடைகொடுத்து வீட்டிற்குத் திரும்பினேன்.  பூந்தோட்டம் கண்களில் இருந்து மறைந்தது.  வீடெங்கும் இருள்,  கோவர்த்தனி கதறி அழ ஆரம்பித்தாள்.  அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்ட  அந்தக் குரல் என்னுடையது.

24.12.2009

கடந்துவரும் குரல்





விடியற்காலை கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலின் பாங்கொலி  கேட்டு விழித்துக் கொள்வோம். பெரியவர்கள் கையில் கதிர் அரிவாளுடனோ அல்லது தோளில் மாட்டிய கலப்பையுடன் ஏர் மாடுகளையும் கூட்டிக் கொண்டு வயல் வேலைக்குப் போவார்கள். குழந்தைகள் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் துவங்குவோம். பாங்கொலிக்குப் பின் சாத்தான்கள் வீதிகளில் அலையாது என்பதால் , பெண்கள் தைரியமாக வெளியே வருவார்கள். வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடுவார்கள்.  கைகளில் தூக்கி நிறுத்தும் குழந்தைகள் நகரா ஒலிக்கு பொக்கை வாயைக் காட்டிய படி நடனமாடுவார்கள். அந்த அதிகாலை வேளையில் , ஏழை முஸ்லீம் பெண்கள் சிலர் கூடையிலும் வாளியிலும் துணிகளை அள்ளிக் கொண்டு பள்ளிவாசல் குளத்திற்கு குளிக்கச் செல்வார்கள்.
எங்கள் ஊரில் இந்துக்களை விட முஸ்லிம்களே நிலம் அதிகம் வைத்திருந்தார்கள்.ஏழை, தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அவர்களிடம் பண்ணைவேலை செய்தார்கள். ஏழை முஸ்லிம்கள் பணக்கார முஸ்லீம்களை அண்டி வாழ்ந்தார்களே அன்றி , ஒரு போதும் பண்ணை வேலை செய்ததில்லை. எங்கள் வீட்டு முதல் அறுவடை நெல்லில் ஒரு மரக்காலை பள்ளிவாசல் வேண்டுதல் நிறைவேற்ற எடுத்து வைத்து விடுவோம். மூன்று நாள் சீம்பாலை  பள்ளிவாசலில் பகிர்ந்து கொடுப்போம். பொட்டுகடலை சர்க்கரை வாங்கி உடல் நலம் அடைந்ததற்காக ஃபாத்தியா ஓதுவோம். ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றவென, இரவு பள்ளி வாசல்களில் தங்குவோம்.  நாய்கடிச்சார், ரெட்டமண்டையார், கருவேப்பில வீடு, ஆனங்காச்சி வீடு, ---என பல பெயர்களில் தங்கள் முதலாளிகளை ஏழைகள் அடையாளம் கண்டு வைத்திருந்தனர்.
பிரியாணி, புலவு, தாளிச்சா, ஆனம், பிர்னி கஞ்சி, பரோட்டா ,சால்னா, இஞ்சி கொத்து பணியாரம் ,முட்டை பணியாரம், ----இன்னும் என்னென்னவோ பலகாரங்கள் எங்கள் வீடுகளிலும் உணவு வரிசையில் இடம் பிடித்தன. ஃபாரின் புடவை, ஃபாரின் தைலம், ஃபாரின் சட்டை , சாக்லேட், லிப்ஸ்டிக் என வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பிய முஸ்லீம் ஆண்களும் பெண்களும் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் இருப்பதால், ஏக்கத்தில் இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு, சங்க கால தோழி போல எங்கள் வீட்டு பெண்கள் ஆறுதலாக இருந்தார்கள். மிகமிகக்  குறைவான கல்வி அறிவுடன், மிக அதிக எழுத்துப் பிழைகளுடன் , வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு, மிக அந்தரங்கமான கடிதங்களை எங்கள் வீட்டுப் பெண்களோடு சேர்ந்து எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பொங்கலுக்கு இவர்கள் பெருமையுடன் கொண்டு செல்லும் கரும்பையும் ,வாழைப் பழங்களையும், பொங்கல் சாதத்தையும், தீபாவளி பலகாரங்களையும், கார்த்திகை அவலையும் விருப்பமுடன் விகல்பமின்றி வாங்கிக் கொள்வார்கள்.
என் அப்பாவுக்குப் பதினெட்டு வருடங்கள், முஸ்லீம் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. அப்பா மிகவும் கண்டிப்பானவர், எனினும்  அப்பாவே அந்தப் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக் கல்வி அதிகாரி வரை சென்று முஸ்லீம் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். வெளி நாடுகளில் தொழில் புரியும் முஸ்லீம் ஆண்கள் , அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், தங்கள் பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டுமென்பதற்காகவும் அதிக நிதி உதவி அளித்தார்கள். பெரும்பாலான பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தார்கள். கொடிக்கால்பாளையம் பகுதிக்கு அப்பாவைத் தவிர வேறு யாரும் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்குச்  செல்ல மாட்டார்கள். அது மிகவும் சிரமமான காரியம். திருமணமான இளம் பெண்கள் கணவர் வெளிநாடுகளில் இருப்பதால் தங்கள் வீட்டைப் பூட்டி விட்டு, தாய் வீட்டிலேயே இருப்பார்கள். கிட்டதட்ட மூன்று நான்கு தலைமுறை பெண்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். அவர்களில் குறைந்தது இரண்டு தலைமுறையினர் அப்பாவிடம் படித்தவர்களாகவும், இளைய தலைமுறை படித்துக் கொண்டும் இருப்பார்கள். அப்பாவுக்கு மட்டுமே விபரங்கள் புரியும் என்பதோடல்லாமல், மிகத் தெரிந்த, பழகிய ஆசிரியர் என்ற வகையில் அப்பா மட்டுமே அவர்கள் வீட்டிற்குள் சென்று வர முடியும். முஸ்லீம் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்விக் காலம் என்பது மிகக் குறுகியதாக இருந்தது. என்னுடைய பள்ளி, கல்லூரி வரையிலுமே ஒன்றிரண்டு பர்தா அணிந்த மாணவிகளைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான்.
தீவிரவாதம் பற்றிப் பேச்சு வரும் போது, ‘ நம்ம முஸ்லீம் ஜனங்களா இருக்காது, அது ஏதோ வெளிநாட்டுக்காரவுங்க வேலையா இருக்கும் . இவ்வளவு வருஷம் தாயா பிள்ளையா பழகுறோம், ஒரு பிரச்சனையும் கிடையாது, நம்ம ஆம்பிள்ளைங்களாவது குடி, அடி தடின்னு இருப்பாங்க, பாவம், அதுங்க பொறுமையா இருக்குங்க’  என்று எங்கள் ஊரே சேர்ந்து பதில் சொல்லும்.

=====================

  ரயில் ஓசை முதன்முதல் எங்கள் கிராமத்தைத் தொட்ட போது , எல்லோரும் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்கள். அதன் ஓசை தொடர்ந்து இவர்களைத் தேடி வந்து கொண்டே இருந்தது. இவர்களும் ஒளிந்து கொண்டே இருந்தார்கள். தெருவில் நடந்தவர்கள் அப்படியே குப்புறப் படுத்துக் கொள்வதும் ,வயலில் வேலை செய்தவர்கள் குத்திட்டு அமர்ந்து கொள்வார்களாம். புகை வண்டியை தூரத்திலிருந்து பார்த்து விட்டு திரும்பிய ஆண்கள் ஆபத்து ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அதன்பிறகு பயம் ஆர்வமாக மாறிப்போனது. ஆண்களும் பெண்களுமாக புகை வண்டியில் ஏறிப் பார்த்து விட்டு ,கொஞ்ச தூரம் பயணித்து விட்டு வருவது என்ற முடிவுடன் ஒருநாள் கிளம்பினார்கள். அவர்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் ஏறி ,மறு நிறுத்தத்தில் இறங்கி விட வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு ஏறினார்கள் . மிகப்பெரிய சத்தம், மரங்கள் பின்னோக்கி ஓட,  தாங்கள் அப்படியே நகராமல் அமர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்த பெண்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு அமர்ந்தபடி கடவுளை வேண்டிக் கொண்டார்கள். காலணா அரையாணாவை விட பண்டமாற்று முறையையே  அதிகம் தெரிந்திருந்த அவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர் பயணச்சீட்டு கேட்டதற்கு பயந்து , அழுது, திட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் புகை வண்டியில் ஏறப் பயந்து , நடந்தே ஊர் வந்தார்கள். அவர்களில் ஒருவராய் இருந்த என் ஆத்தா , புகை வண்டியை , இறக்கும் வரை அதே பயத்துடனும் அதிசயத்துடனும் பார்த்தற்கு நான் சாட்சி. அதே போன்று அடுத்த தெரு, அடுத்த வீடு, வீடு வரை உறவு, பழக்க வழக்கம் என எல்லாமும் நடந்து முடிந்திருந்தாலும் , புகை வண்டியை பார்ப்பது போலவே , முஸ்லீம்களைப் பார்க்கும் போது பயமும் ஆர்வமும் ஒருங்கே எழுவது எங்கள் ஊர் ஜனங்களிடம் இயல்பாகி விட்டது.
  இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் கிறிஸ்தவர்களை விடவும் , முஸ்லீம்களின் வாழ்க்கை ,உணர்வுகள், பழக்கவழக்கங்கள் , குறித்த புரிதல் இன்மை நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, பர்தாக்களுக்குள் மறைத்து வைக்கப்படும் முஸ்லீம் பெண்கள் குறித்த  புரிதலின்மை அவர்களைக் குறித்து  அறிந்து கொள்வதில்  அதிக ஆர்வத்தை நம்முள் தூண்டுகிறது. வெளி உலகத்துக்கு அறிமுகமானாவர்களாக தன்னாட்சியும் ,திறனும் உடைய முஸ்லீம் பெண்களைக் குறித்த சிந்தனை எழும் போது நமக்குள் தோன்றுவது இரண்டு முகங்கள்: பெனாசிர் புட்டோ, தஸ்லிமா நஸ்ரின். தீவிரவாதத்துக்குப் பலியான  பெனாசிர் புட்டோவும், இன்னும் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தஸ்லிமாவும், முஸ்லிம் பெண்கள் மீது திணிக்கப்படும் அதிதீவிர கட்டுபாடுகளையும், வளர்ச்சிப் பாதையில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அதி பயங்கர போராட்டங்களையும் உலகுக்குச் சொல்லும் நிகழ் கால சாட்சிகள்.

================

முஸ்லீம் பெண்களின் கல்வியறிவு ,உலக அறிவு மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவைக் குறித்து சிந்திக்கும்போது , ஒரு ஆளுமையையோ, காலகட்டத்தையோ , வரலாற்றையோ , புரட்சியையோ முன்னிறுத்தி எந்த முடிவையும்  எட்ட முடியவில்லை.முஸ்லீம்கள் சிறுபான்மையினராகவும், தீவிர கட்டுப்பாடுகள் கொண்டவர்களாகவும் இருக்கும் இந்தியாவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முஸ்லீம் பெண்களை கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் , சட்டங்களும் ,மதக்கட்டுபாடுகளும் தாண்ட முடியாத மதிற் சுவராக வளர்ந்து நிற்கும் சூழலில் , ஆட்சியாளரில் இருந்து குடிமக்கள் வரை முஸ்லிம்களாக இருக்கும் பாகிஸ்தான் போன்றதொரு நாட்டில் , பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவு என்னை துளைத்துக் கொண்டே இருக்கும்.
ரவிக்குமார் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் இயக்குநர் திருமதி. மினிகிருஷ்ணனை அறிமுகப்படுத்திய போது ,அவர் ‘அண்ட் த வேர்ல்ட் சேஞ்ச்டு’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பாகிஸ்தான் பெண்கள் ஆங்கிலத்தில் எழுதிய கதை மற்றும் நாவலின் சில பகுதிகளைக் கொண்டு முனிஸ் ஷாம்ஸியால் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.
அதில் ஸெஹ்பா ஸார்வாரால் எழுதப்பட்ட, குழந்தைகளின் உலகம் குறித்துப் பேசும் ‘பிளாக் விங்ஸ்’ என்ற நாவலின் ஒரு பகுதியை படித்த போது அதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ரவிக்குமார் அதற்கான ஊக்கத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
முஸ்லீம் பெண் என்பதைப்பற்றி நம்முள் பதிக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் தகர்த்து , இலக்கியத்தின் வாயிலாகவும் சமூக சேவையின் மூலமாகவும் பலவிதமான சாத்தியப்பாடுகளை முன்வைத்திருப்பவர்  ஸெஹ்பா ஸர்வார். அவரைத் தொடர்பு கொண்ட போது, என் மனதில் என்னை அறியாமல் படிந்திருந்த  முஸ்லிம் பெண்கள் குறித்த கற்பிதங்கள் அகன்றன.
நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட மாயைகள் விலகித் தெளிவு பெறும் போது, பயம் விலகி விடும் போது ,  இன்னொரு புதிய வாசல் திறந்து கொள்ளும் போது , உருவாகும் புரிதலுடனும் ,அது தரும் பூரிப்புடனும் , ஸெஹ்பா ஸர்வார் , மினி கிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றியுடனும், இந்தப் புத்தகத்தை உங்கள்முன் வைக்கிறேன்.

- தேன்மொழி
16.12.2011

( ' கடந்துவரும் குரல் - பாகிஸ்தானிய பெண் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் படைப்புகள் ' என்ற நூலுக்கு அதன் தொகுப்பாசிரியர் தேன்மொழி எழுதியிருக்கும் முன்னுரை )

நிக்கனோர் பர்ரா


சிலுவையின் முன்னால் நான்  மண்டியிட்டு
அவரது காயங்களைப் பார்த்தபோது
என்ன நடந்தது தெரியுமா?

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கண் சிமிட்டினார்

அவர் ஒருபோதும் சிரித்திருக்கவேமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்
ஆனால் இப்போது ஆமாம் நான் அதை நம்புகிறேன்

வீட்டுப் பாடம் - நிக்கனோர் பர்ரா




ஒரு செய்யுளை எழுது
அது கீழ்க்கண்ட ஈரசைகளைக் கொண்டதாக இருக்கட்டும்:
  நான் உன்னைவிட முன்னே சாக விரும்புகிறேன்
இப்படி அது முடியட்டும்:
  அதற்கு முன் நீ இறப்பது நலம்

கவிதை : நிக்கனோர் பர்ரா




நானும் என் சடலமும்
ஒருவரையொருவர் அற்புதமாகப் புரிந்துவைத்திருக்கிறோம்
என் சடலம் கேட்டது: உனக்குக் கடவுள்மீது நம்பிக்கை உண்டா?
நான் மனப்பூர்வமாகச் சொன்னேன் : இல்லை
என் சடலம் கேட்டது: நீ அரசாங்கத்தை நம்புகிறாயா?
நான் அரிவாளையும் சுத்தியலையும் காட்டினேன்
என் சடலம் கேட்டது: நீ போலீஸை நம்புகிறாயா?
நான் அதன் முகத்தில் ஒரு குத்து விட்டேன்
அது சவப்பெட்டியிலிருந்து எழுந்தது
நாங்கள் கைகளைக் கோர்த்தபடி
பலிபீடத்தை நோக்கிப் போனோம்

Monday, January 30, 2012

நாகதாளி – தேன்மொழி




இன்று வரப்போகும் இரவுக்காய் காத்திருக்கிறேன். அது எனக்கான உறக்கத்தை கொண்டு வரும் என்ற உணர்வு என்னுள் விழுதோடிக் கிடக்கிறது. கண்டிப்பாய் உறங்குவேன். பதினைந்து வருட உறக்கத்தை கூவி அழைக்காமலே, அது என்னை வந்து சேரும். யுத்த களத்தில் எதிர்த்துப் போட்டியிடாமல், அனுசரித்தே வாழப் பழகிக்கொண்டு, உயிரைப் பிடித்து வைத்திருந்து தப்பித்த ஒரு மாவீரன் போல, இன்று நான் அயர்ந்த உறக்கம் கொள்வேன். என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை, என் எதிரிகள் வீழ்ந்துவிட்டார்கள். நான் அவர்களை அவமதிக்கவில்லை, அனுசரித்துக் கொண்டேன். நான் எதிர்க்கவில்லை, விட்டுக்கொடுத்தேன். ஒரு கன்னத்தில் அறைந்த போது மறுகன்னத்தைக் காட்டினேன். மறுகன்னத்தில் அறைந்த போதும் நான் எதிர்க்கவில்லை. ஆதரவான கைகளுக்குள் முகம் புதைத்து அடியின் தடம் பதிந்த கன்னத்தை மறைத்துக் கொண்டேன். என் கன்னத்தின் விரல் பதிவுகளைப் பார்க்க எனக்கும் பிடிக்கவில்லை. உன்னால் ஒரு போதும் புரிந்து கொள்ளப்படாத என் மொழிகள் எப்போதும் ஈட்டியானது. உன்னால் உணரப்படாத என் பெண்மை மென்மையைத் தொலைத்தது எப்போது? என் பிரம்ம வாயில் மூடிக்கொண்டது எப்போது? வறன் உறல் அறியா என் தேகம் ஈரம் அற்றுப் போனது எப்போது? விடைகளற்ற வெளியில் நான் திரிந்து கொண்டிருந்தபோது இவையெல்லாம் உன்னை விழுங்கித் தீர்த்திருந்தது. எல்லாவற்றின் பின்பு இன்று வரப்போகும் இரவுக்காய் உறங்கக் காத்திருப்பவள் நான்.
இரவென்பது பொழுதுகள் கூடடையும் அடர்ந்த காடு. காலம் தன் தேகம் விரித்து கந்தர்வ களி நடனம் நிகழ்த்தும் அபூர்வ தருணம். தயக்கம் குடித்து, வெட்கம் தொலைந்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம். உயிர்கள் அந்த காரமான வெளியில், அடிநாதமாய் அடைந்து கிடக்கும் ஒலியை எழுப்பி கெக்கலிக்கும் நேரம். இரவு கறைகள் அற்றது, திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது. இரவுக்குப் பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து, தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது. இரவு குற்றங்களுக்குத் துணைபுரிவதில்லை. இரவோடு போட்டியிடும் மின்மினியின் வெளிச்சம் கூட ஒரு மாபெரும் குற்றம் நிகழ்வதற்குப்  போதுமானதாக இருக்கிறது. ஒளி ஆபத்துக்களாலும் குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது. இரவு உயிர்களின் தாலாட்டு, தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. இரவுகளின் சலனமும், இயக்கமும், சத்தமின்றியே நிகழ்கிறது. சலனங்களாலும், சப்தங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது. இரவு தன்னைத் திறந்து ஒளியை  ஏற்றுக்கொள்கிறது. ஒளியோடு கலக்கும் மிகச் சிறந்த கலவியின் உச்ச நாயகி இரவு. ஒளி தன்னை மூடி இருளை அளிக்கிறது. மேலும் உணர்வுகளை விருந்து வைக்கிறது. இரவு உணர்வை விழுங்கி மறையென துயிலாதொரு சயனத்தில் இருக்கிறது.
வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக் கொண்டிருந்தது. சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறனொருவன் மரணம் குறித்த செய்திகளைத் தாங்கி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும்  உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது.
ஆறடி உயரத்தில் நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாய். வெள்ளை வேட்டியும்,  முழுக்கை வெள்ளைச் சட்டையும், உன் கருத்த முகத்தை எடுப்பாய் காட்டியது. அந்த உடை உனக்கு மிகப் பொருத்தமான உடையாய் இருந்தது. உன்னருகில் ஒரு நாற்காலியில்  அமர வைக்கப்பட்டிருக்கிறேன். நான் அலங்கோலமாய் இருக்கிறேன். அழுது கொண்டிருக்கிறேன். இரு ஜோடிக் கண்கள் பல என்னை வெறுப்பாய் நோக்குவதை என் உடலும் மனமும் அறியும். என்னை மனிதப் போலி போலவும், என் கண்ணீரை நீலிக் கண்ணீராகவும் அவர்கள் பார்க்கிறார்கள். இருந்தபோதிலும் என் அழுகை நிஜம். நான் நிறைய காரணங்களுக்காக அழுகிறேன். என் கண்ணீர் வலிகளின் கலவையாய் வழிந்து கொண்டிருக்கிறது. அது வற்றும் வரை நான் அழத்தயாராய் இருக்கிறேன். தலை வெடித்துவிடும் போல் வலிக்கிறது. கண்கள் பொருள் பொதிந்த வீக்கம் கொள்கிறது. இவர்கள் அறியாத ஒன்று என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, உன் மரணம் தவிர்த்த மற்ற எல்லாவற்றிற்காகவும் நான் அழுது கொண்டிருந்தேன்.
குழந்தைகள் இரண்டும் உன்னையும் என்னையும் சுற்றிச் சுற்றி வருகிறது. “அப்பா, நீங்க வேணும்பா, விட்டுட்டுப் போகாதீங்கப்பா” கதறிக் கதறி உன்னை அழைக்கிறார்கள். மரணத்திற்கு செவிகள் கிடையாது. கண்கள் கிடையாது. புலன்கள் அற்றது மரணம். ஆனால் நவரசங்களை உயிர்களில் நெய்து கொண்டே தான் இருக்கிறது. பெரியவளுக்கு வயது பதிமூன்று. அழுகையின் ஊடே என்னை உற்று உற்று, விட்டு விட்டு பார்க்கிறாள். அவள் கண்ணீரும் சில சமயங்களில் நிறம் மாறியதுபோல் எனக்குத் தோன்றியது.
என் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் கயிறு ஆடிக் கொண்டிருந்தது. பிரிபிரியாய் தனித்திருக்கும் இழைகளைப் பிணைத்து முறுக்கிய கயிறு குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தை நெஞ்சோடு உரசி உரசி உரக்கப் பேசியபடி இருந்தது. நீயும் நானும் எதிரெதிரே புதிராய் நின்றோம். உன்னைக் குறித்த எந்த முன்குறிப்பும் அற்றவளாக நான் நின்றேன். நீ, நான் பெண்ணென்னும் குறிப்பை புத்திக்கு  அனுப்பி விட்டு காத்திருந்தாய். என் முதல் வார்த்தையின் முதல் எழுத்தைக் கூட நிராகரித்துவிட்டாய். உன் அலட்சியத்தால் அது அழிந்தே போனது. மீண்டும் மீண்டும் என் வார்த்தைகள் வற்றி, வறண்ட மணற்படுக்கையென காய்ந்து போனது. வார்த்தைகள் சூறையாடப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலாய் உன் நூலகத்தில் என்னை அடுக்கி வைத்திருந்தாய். மௌனத்தை குத்திக் கிளறிக் கிழித்த ஒரு யுத்தம் என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. “வீட்டின் கடைக்குட்டி, செல்லம், பாத்துக்கப்பா” என் வீடு மாறி மாறி என்னை உனக்கு அறிமுகப்படுத்தியது. எதையும் நீ புரிந்து கொண்டதற்கான அறிகுறி தென்படவில்லை.
நீ முதன் முதலில் என் கன்னத்தில் அறைந்த நிமிடம், இப்போது கூட அழியாமல் பின் வந்து, என் தலையை பலமுறை சுழற்றிப் போகிறது. நீ அறைந்த நொடியில் ஒரு மயக்கத்தோடு சுவரில் சாய்ந்தேன். சில கெட்ட வார்த்தைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு நீ வெளியேறிவிட்டாய். என் உடல் நடுங்கியது. நீ அடிப்பாயா! அடிக்கும் அளவு முரடனா நீ, என் மீது அவ்வளவு வெறுப்பா, என்னை அடிக்க எப்படி மனம் ஒப்பியது. இனிமேலும் இந்த அடி தொடருமா, சொச்ச காலம் எப்படி கழியும், மனம் கதறி நிமிர்ந்தது. நான் யார் தெரியுமா? வீட்டின் செல்லம், ஊருக்கு மிகச் சிறந்த பெண், பள்ளிக் கூடத்தின் முதல் மாணவி, நிறைய படித்தவள், நிறைய சம்பாதிப்பவள், என் சுயம் நீரில் விழுந்த நிழல்போல் தவித்துக் கொண்டிருந்தது. என்னை அடித்ததை  எல்லோரிடமும் தெரிவிக்க விரும்பினேன். மறுகணமே என்னை அடித்ததை எல்லோரிடமும் மறைக்க விரும்பினேன். கதறிக்கதறியழுத என் சுயம் காயம்பட்டுப் போனது. என்னை அடித்தது போல் உன்னை அறைந்துவிட முடியுமா? அடிக்கச் சொல்லி மனம் ஆகாயத்தில் அமர்ந்துகொண்டது. என் முதல் வார்த்தை தொலைந்தபோதே உன்னை அடிக்கச் சொல்லி ஆணையிடாத என் மூளையை அறுத்தறுத்து பெயரிடப்படாத திசைகளிலும்கூட விசிறியடிக்கிறேன்.
என் முதல் பிரசவத்தின்போது என் வீடு நொடித்துப் போயிருந்தது. நீ கொடுத்த வலி மாறிமாறி என் பிரசவ வலியைத் தோற்கடித்தது. நான் மட்டுமல்ல, என் குடும்பமே பிரசவ வலி பட்டுப்போனது, உன்னால். பிள்ளையிடம் பாசத்தோடு நடந்து கொண்டாய். நான் பொதி சுமக்கும் கழுதையாய்த் திரிந்தது உனக்குத் தெரிந்தே இருந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். மனதோடு கூட உடம்பும் வலித்தது. எவனாவது ஒரு விஞ்ஞானி என்னை எந்திரமாக்கி விடக்கூடாதா என ஏங்கியழுதது உடம்பு. அடி, உதை, ஏச்சு, பேச்சு, எல்லாம் அன்றாட உணவின் உப்பு போல அவசியப்பொருளாகி விட்டது உனக்கு. எத்தனை முறை தொட்டாலும் சுருட்டிக் கொள்ளும் மரவட்டையைப் பார்த்து மனம் பொறாமை கொண்டது. தாய் வீட்டு உறவுகள் சுருங்கி இந்த வீடு, குழந்தைகள், நீ என்பது மட்டுமே என் உலகம் ஆனது, விழித்தபடி உறங்கத் தெரிந்தது நம் மூத்த மகளுக்கு. அவள் நம் உள்ளக்கிடக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்தாள்.
நிறையப் பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து போனார்கள். எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி, யாருக்கோ விதிக்கப்பட்ட கட்டளை, என்னையும் அணைத்துக் கொண்டது. பிற பெண்களை நீ வாழ்க்கை ஏட்டில் பதிவு செய்யும்போது, நான் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கை எங்கோ காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லாமல் போக பதிமூன்று ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. பதிமூன்றாவது சீடனாய் வந்து நின்ற ஆண்டு உன்னை எனக்குக் காட்டிக் கொடுத்தது. உனக்கும் எனக்குமிடையில் ஒன்றுமேயில்லா மாயக்கயிறு உன்னையும் என்னையும் பிணைத்திருப்பது தெரிந்தது. அதிலிருந்து விடுபட இல்லாத முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த முட்டாள் நான்.
இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்தது இல்லை. அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது. தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவுகள் வருவதாய்த் தோன்றியது. வீட்டின் கொல்லைப்புறத்தில் சுயம்புவாய்த் தோன்றி, முட்களுடன் கிளைத்து நிற்கும் கற்றாழையை மிக விரும்பினேன். இருத்தலுக்கான ஆவலும், வாழ்வதற்கான போராட்டமும் அதனிடம் முட்களாய் வளர்ந்திருந்தது. முட்களால் கிளைத்திருக்கும் உடல் வேண்டி, மனம் ஒற்றைக்கால் தவம் புரிந்தது. கொல்லையில் கற்றாழைச் செடியை நட்டபோது நீ என்னை திட்டினாய். பாலை நிலத்தாவரமே தண்ணீரை குடிச்சுக்கோ என்று  அதற்கு தண்ணீர் ஊற்றுவேன். இலையின் மென்மையை திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு கைவசப்பட்டிருந்தது. தளதளவென்றிருக்கும் பச்சை மேனியெங்கும் முட்களை, என்னுடலும் வேண்டியபோது, முட்களுடன் கிளைத்துக் கொள்ள விரும்பினேன். ஒரு முறை கோபத்தில் நீ அதை வெட்டி எறிந்துவிட்டாய். தன்னை பெருக்கி எழுப்பும் ராட்சஸி சுரஸா போல அது மீண்டும் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது. நீ என்னை அந்தச் செடியோடு ஒப்பிட்டுத் திட்டும்போது எனக்குப் பெருமையாய் இருக்கும். நம் குழந்தைகள், செடி குறித்து ஆயிரம் வினாக்களைத் தொடுப்பார்கள். நீர் கொண்ட மேகத்தின் மீது தீராத தாகம் கொண்ட மற்ற எல்லாத் தாவரங்களையும்விட, வறண்ட பாலையில் முரட்டுத் தவம் புரியும் இந்தச் செடியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
உறவுக்காய் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும். உன் சக இணை நான். அடிமையாகவும், எதிரியாகவும், உன் வக்ரங்களையும், குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தை காறி உமிழ்கிறேன். உன் இணைப்பறவை நான். கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்க கனவு கண்டவள். என் மரத்தின் இலைகளை உதிர்த்துவிட்டாய். என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டாய். என் மரத்தின் குருவிகளை கொத்திப் போய்விட்டாய்.
என்னைக் கடக்கும் முகங்களில் எதையோ ஏக்கத்தோடு நோக்குகிறேன். அன்பாய் அழைக்கும் ஒரு குரலுக்கு ஆயுள் முழுவதும் கட்டுப்பட்டுக் கிடக்க விரும்புகிறேன். என் வலி துடைக்கும் வார்த்தைகள் எங்கும் அற்றுவிட்டபோதும், புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன். திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன். இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது. மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்று காத்திருக்கிறது.
இரண்டு கைகள் என் முகம் தாங்கியது. என் வலி தேடி மருந்திட்டது. என் மொழி உள்வாங்கப்பட்டது. நான் நிராகரிக்கப்படவில்லை. அன்பின் கதகதப்பை குளிருக்கு பயந்தவளாய் உணரத் தொடங்கினேன். நீ உன் மாய வெளியில் ஏதேதோ உறவுகளைக் கற்பித்து நொந்து கொண்டாய். உடலை மட்டும் உறவுகளுக்கு பிரதானமாய் உன் குறுகிய புத்தி வட்டமிட்டு வைத்திருந்தது. ஆங்காரமும் ஆணவமும் உன்னுள் படமெடுத்தது. உன்னுள் வலி தொடங்கியது. நிராகரிக்கப்பட்டதாய் உணர்ந்தாய். விஷம் குடித்து உன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாய். உன் சாவின் மூலம் என்னைப் பழிவாங்க விரும்பினாய். உலகுக்கு என்னை நடத்தை கெட்டவள் என்று அறிமுகப்படுத்தியதன் மூலம் உன் சாவின் மீது நீயே வெற்றிக் கொடி நட்டுக் கொண்டாய்.
உன் மரணத்தின் வாசனை என்மீது படர்கிறது. என் அகம் புறம் அனைத்தையும் நிறைக்கிறது. என்னை இறுக்கிப் பிணைத்திருந்த அடிமைச் சங்கிலியை அறுக்கிறது. என் இருண்ட உலகில் ஒளிக்கிரணங்கள் போட்டியிட்டு நுழைகிறது. உன் முன் அமர்ந்திருக்கிறேன், அழுகிறேன். மற்றபடி மரணத்தின் வாசனையை நுகர்ந்து, மெல்ல என் மூச்சோடு கலந்து சுவாசிக்கத் தொடங்குகிறேன். பின்பு வெறி கொண்டவளாய் அதை உள்ளிழுத்து என் உடலை, மனதை, மூச்சை நிறைக்கிறேன். எல்லாவற்றினூடேயும் வெறுத்து  ஒதுக்கும் என்னைச் சுற்றி துளையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் கண்கள் அறியாதபடிக்கு, உறக்கம் கொண்டு வரவிருக்கும் இன்றைய இரவுக்காய், காத்திருக்கத் துவங்குகிறேன்.
( தீராநதி இதழில் வெளியான இந்தக் கதை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான 'நெற்குஞ்சம்' நூலில் இடம்பெற்றுள்ளது. )

‘கூகுளைசேஷன்’’ என்ற அபாயம்







மணற்கேணி ( இதழ் எண் 10 , பிப்ரவரி 2012 ) இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம் 



டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது ஃபேஸ்புக், கூகுள், ஆர்குட்,யு ட்யூப் உள்ளிட்ட இருபத்தொரு சமூக வலைத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவற்றில் ஆட்சேபகரமான விஷயங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக வினய் ராய் என்பவர் செய்த  புகாரை அடுத்தே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்திருக்கிறது.  மத உணர்வுகளைப் புண்படுத்தும் விஷயங்களை இவை பரப்புகின்றன என்று சொல்கிறார்கள் சிலர், பாலியல் உணர்வுகளைத் தூண்டி இளைய தலைமுறையைக் கெடுக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் சிலர். சீனாவில் இருப்பதைப்போல இவற்றைத் தடை செய்யலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.ஆனால் இன்று நாம் கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே அஞ்சுகிற ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம்.

குளோபலைசேஷன் - உலகமயமாதல் -  குறித்த கவலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது ‘கூகுளைசேஷன்’ குறித்த அச்சுறுத்தல். இணையத்தோடு இணைக்கப்பட்ட எவராலும் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக  மாறிவிட்டது, கூகுள். ’உலகளாவிய தகவல்களைச் சேகரித்து அதை எவரும் அணுகவும் பயன்படுத்தவும் ஏதுவாக ஆக்குவது’ என்பதுதான் கூகுளின் லட்சியம் என்று சொல்லப்பட்டது. இன்று நாம் எதைத் தேடவேண்டுமானாலும் செல்வது கூகுளிடம்தான். இன்னும் சில காலத்தில் உலகத்திலிருக்கும் அத்தனை மொழிகளிலும் வெளியிடப்படுகிற அத்தனை நூல்களும் கூகுளில் இருக்கும். இப்போதே அதில் ஏற்றப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நொடியும் அதில் சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ கிளிப்புகள் ஏற்றப்படுகின்றன என்கிறார்கள். கூகுளுக்கு வணிக நிறுவனங்களின் விவரங்கள் தெரியும், சமய நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் , உணவகங்கள் என எல்லா விவரங்களும் அதன்வசம் இருக்கின்றன. இன்னும் சில காலத்தில் உலகின் அத்தனை தெருக்களின் புகைப்படமும் கூகுளிடம் இருக்கும். அதாவது உலகையே கண்காணிக்ககூடிய சக்தியை அது பெற்றுவிடும். பூமியைமட்டுமல்ல பிரபஞ்சத்தையே கண்காணிக்கும் சக்தியாக அது உருவெடுத்தாலும் வியப்பதற்கில்லை.

நம் கையில் ஒரு உயர்ரக மொபைல் போன் இருந்தால், அதில் நாம் கூகுள் லொகேஷன் சர்வீஸை ஆன் செய்திருந்தால் போதும் நாம் எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்பது அதற்குத் தெரிந்துவிடும். நீங்கள் கூகுள் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்துகிறவரா உங்களது மின்னஞ்சல் முழுவதையும் அது படித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை விளம்பர நோக்கத்துக்காகத்தான் செய்கிறோமென அது சொன்னாலும் அதை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை.   நீங்கள் யாரோடு அதிகம் தொடர்புகொள்கிறீர்கள் என்பதையும் அது வரிசைப்படுத்தி வைத்திருக்கிறது. இப்படியே போனால் நாம் சொல்லாமலேயே நமது சமையலறையில் இருப்பதையும் , நாம் உடற்பயிற்சி செய்யும்போது நமது இதயத் துடிப்பு எவ்வளவு என்பதையும், நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் சீதோஷ்ண நிலை என்னவென்பதையும் அது சொல்லிவிடும். 

கூகுளைப் பற்றி ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. அது நமது அந்தரங்கத்தில் தலையிட்டு வேவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்துவிட்டது. நாம் கூகுளைப் பயன்படுத்தும்போது நாம் எதைத் தேடினோம், எதைப் படித்தோம் என்ற விவரங்கள் யாவும் ‘குக்கீஸ்’எனப்படும் பகுதியில் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை கூகுள் மட்டுமல்ல யாஹூ போன்ற பிற நிறுவனங்களும்கூடப் பல மாதங்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே அவை திரட்டுகிற அத்தனை தகவல்களும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் ஆபத்து எப்போதும் இருக்கிறது என்று சிலர் ஏற்கனவே பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். புத்தகங்களை இணையத்தில் ஏற்றுவதன்மூலம் எழுத்தாளர்களின் காப்புரிமையை கூகுள் பறிக்கிறது என்ற பிரச்சனை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அது இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. 

கூகுள் நிறுவனம் துவக்க நிலையிலேயே வெற்றிகரமாக ஒரு காரியத்தைச் செய்தது. தான் சேகரித்த விவரங்களை அது தர வரிசைப்படுத்தியது. ‘பேஜ் ரேங்க்கிங்’ என்று குறிக்கப்படும் அந்த நடவடிக்கையால்தான் நாம் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒருசில பக்கங்கள் முதலில் வருகின்றன. இந்தத் தரவரிசை செயல்பாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற புகார் கூகுள் மீது சொல்லப்படுகிறது. இதனால் முதலில் வரும் சில பக்கங்களை மட்டும்தான் நாம் முக்கியமாகக் கருதுகிறோம், அந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களையே சார்ந்திருக்கிறோம். காலப்போக்கில் பல இணைய தளங்கள் இதனால் பார்ப்போர் எவருமின்றி அழிந்துபோக நேரிடும் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்கும்போது, ’இணையம்’ என்ற  மாயவலையிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாதா என்ற கேள்வி எழலாம். இந்தியக் குடிமக்கள் எல்லோரும் இணைய வசதி பெற்றவர்களாகவா இருக்கிறார்கள் என்றும் சிலர் கேட்கக்கூடும். இன்று இந்தியாவில் இருக்கும் மொபைல் போன்களின் எண்ணிக்கையைப் பற்றி நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டோம். அதுபோலத்தான் இணையமும் நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறது. அது முழுதாக நம்மை விழுங்குவதற்கு முன்னால் அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம். அப்போதுதான் ’கூகுளைசேஷன்’ என்பதன் ஆபத்து நமக்குப் புரியும். 
 
                                                                                                                                               ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 

Tuesday, January 24, 2012

” வாரிசுகளின் புகழ் அஞ்சலி “ - ரவிக்குமார்




பிரபலமான பதிப்பகங்கள் ,அவற்றால் தூக்கிநிறுத்தப்படும் சுய முன்னேற்ற சூத்திரம் கற்ற எழுத்தாளர்கள் ஆகியோரைத்தவிர வேறு எவரும் தமிழ் இலக்கிய உலகில் கண்டுகொள்ளப்படமாட்டார்கள் என்ற துர்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த மூச்சுமுட்டவைக்கும் புகைமண்டிய சூழலில் பொறுப்போடு, கடப்பாட்டோடு சில வெளியீடுகள் எவ்வித பொருளியல் லாபத்தையும் எதிர்பார்க்காமல் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாகக் கருதக்கூடியதுதான் ‘ அந்தகனின் சொல்”.

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில்மயமான கோயமுத்தூரில் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் நிலவிய அரசியல் பொருளாதார சூழலானது பண்பாட்டுத் தளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட தொழிற்சங்கங்களின் சமரசப் போக்குகளால் ஏமாற்றமடைந்தவர்களின் உரையாடல், வீடுகளையும் தெருக்களையும் நிறைத்திருந்த நேரம் அது. அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலர்  மார்க்சியம் கடந்த இடதுசாரிக் கருத்தியலை நோக்கிப் போனார்கள். சிலர் தமிழ் அடையாளத்தினால் ஈர்க்கப்பட்டார்கள். இன்னும் சிலர் இடதுசாரி எதிர்ப்பு மனநிலையோடு தத்துவ விசாரத்துள் ஆழ்ந்தார்கள். அந்தச் சூழலின் விளைவாக சிறு பத்திரிகை , மொழிபெயர்ப்பு, கவிதை எனத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் என அடையாளப்படுத்தக்கூடிய ஒருவர்தான் அஷ்டவக்கிரன் என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்ட அ.ந.ராஜன். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, 2004 ஆம் ஆண்டு பத்ரிநாத் செல்லும் வழியில் சாலை விபத்துக்கு ஆளாகி இறந்துபோன அவர் எழுதியிருப்பவை மிகவும் குறைவு.

இருபது கவிதைகளையும் ஒரு சிறுகதையையும் எழுதியிருக்கும் அவர் இருபத்தெட்டு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவை ஞானரதம், கணையாழி மற்றும் அவரே முன்னின்று நடத்திய பார்வை ஆகிய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

“ அடுத்தவன் சொல்வதைக்
கேட்கும் பொறுமையும்
விருப்பமும்
இல்லாதுபோய்விட்ட” ,  அறைக்குள் டீ மற்றும் பிஸ்கட்டுகளோடு முற்றுப்பெறாத விவாதத்தில் ஈடுபடுகிற நண்பர்களைக் கொண்டிருந்த அஷ்டவக்கிரனின் கவிதைகள் , உலகமயத்தின் காரணமாக உள்ளீடற்றுத் தவித்து நிற்கும் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடியவைதாம்.

” கட்டை விரலளவு
இடமிருந்தால் போதும்
ஊன்றிக்கொள்ள

உட்பொறிவீச்சில் வியாபகம் கொள்வாய்

அதற்கு ஏன்
இடமில்லாமற்
போய்விட்டது
இவ்வளவு பெரிய உலகில் ?”

   என்று கேட்கிறது அவரது கவிதையொன்று. Respond, Variety, Lavatory, Room, Hostel,Professor  முதலான (தமிழில் மொழிபெயர்க்கவே முடியாத ? ) ஆங்கிலச் சொற்களைக் கலந்து அவர் எழுதிய சிறுகதை 1974 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கதை அப்போதைய சிற்றிதழ் எழுத்தாளர்களின்  மனோபாவத்துக்கு  மட்டுமின்றி அன்று நடத்தப்பட்டுவந்த சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாய் இருந்தார்கள் என்பதற்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

” விஷய ஞானத்தைத் தவிர்த்த
வெறுந் தகவல் சேகரிப்பின்
கனம் தாளாமல் தொங்கியது தலை”
என்கிறது அஷ்டவக்கிரனின் கவிதையொன்று.இத்தகைய வரிகளை எழுதுகிற பலருக்கும் பொருந்தக்கூடிய சுயவிமர்சனம் இது.

பால் ஸெலான், ஆக்டோவியா பாஸ் , பாப்லோ நெரூடா என்று அவர் மொழிபெயர்த்திருக்கும் படைப்பாளிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளில் அஷ்டவக்கிரனின் ரசனை மற்றும் கருத்தியல் ஊசலாட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய குடும்பத்தினர் ,அவரோடு பழகிய நண்பர்கள் சிலராவது அவரைப்பற்றிய சில குறிப்புகளை இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கலாம். அது ஒரு படைப்பாளியாக, மனிதராக அவர் எவ்வாறு இயங்கினார் என்பதை வாசகர்களுக்கு இன்னும் துலக்கமாக எடுத்துச் சொல்வதாக இருந்திருக்கும்.

அஷ்டவக்கிரனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியால் மிகவும் நேர்த்தியோடு வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பை முன்மாதிரியாகக்கொண்டு, தமிழ்  இலக்கிய உலகம் கண்டுகொள்ளாத இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளும் வெளிவந்தால் இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் தம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். அது தமிழ் இலக்கியத்துக்கும் உதவக்கூடியதுதான்.

========
நூல் : அந்தகனின் சொல்
ஆசிரியர் : அஷ்டவக்கிரன்
வெளியீடு : பார்வை: பதிவுகள், கோயமுத்தூர்,முதல் பதிப்பு 2011
விலை : குறிப்பிடப்படவில்லை

Thursday, January 19, 2012

தோற்ற தலைமுறை - ரவிக்குமார்

நாங்கள் இருவரும் ஒன்றாய்ப்  படித்தோம் 
என்றாலும் 
அவன் உடைகள் மடிப்பு கலையாதவை 
அவன் கொண்டுவரும் உணவு 
ஊசிப்போகாதது 
அவனுக்கு இருந்தது  
தனி அறை கொண்ட சொந்த வீடு 

அவன் பாடப் புத்தகங்களில்  
வாக்கியங்களை வாசிப்பான் 
நானோ வாக்கியங்களுக்கு இடையில் 
கனவில் பயணிப்பேன் 

அவன் 
படித்துத் தேறி வேலைக்குப் போனான் 
நான் 
இலக்கியம் பேசி எழுத்தாளரானேன்

செல்வத்தைவிடவும் சிறந்தது புகழ்  
என்பதுதானே உலகியல் உண்மை ?
பாராட்டைக் கேட்கும்போதெல்லாம் 
அவனைப் புழுதியில் தள்ளி  
அவன்மீது ஏறி நின்றுதான் 
அதை நான் ரசித்தேன் 

அரசாங்க விருதொன்று எனக்குக் கிடைத்தது 
தகவல் சொல்ல 
தொலைபேசியில் அழைத்தேன் 
அப்போது சொன்னான் : 
" என்னோட மகன் என்னென்னமோ சொல்றான் 
எதைஎதையோ படிக்கிறான் 
பேசிப்பாரேன்"
ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம்
ஃ போனைத் தந்தான் 
' உனக்குப் பிடித்த கவிஞர் யாருப்பா ?"
' பால் செலான் அங்கிள் '
' உனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கும் ?'
' காஃப்கா அங்கிள் '   
'அப்பாகிட்ட போனைத் தரேன்....
" ஏய் ! அவன் இங்கிலீஷ்ல கதையெல்லாம் 
எழுதுறான் ...."
 அவன் பேசிக்கொண்டே இருந்தான் 
நான் 
தொடர்பு எல்லைக்கு வெளியே 
போய்க்கொண்டே இருந்தேன் 

Sunday, January 15, 2012

"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்"


"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஜனவரி, 2012 - 17:12 ஜிஎம்டி
டிராலர் படகுகளில் இந்திய மீனவர்கள்
டிராலர் படகுகளில் இந்திய மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறிவந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கயை விட்டுக்கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித்தறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய, இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது.
இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித்துறை ஆணையர்கL, இந்திய கடற்படை மற்றும் கடல்எல்லைக் காவல்படையினர், அதேபோல் இலங்கை தரப்பிலும் வெளியுறவு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுகளின் பிரதிநிதிகள், யாழ் அரச அதிபர் போன்றோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பாரம்பரிய உரிமை இருப்பதாக பலகாலமாக இந்தியா கோரிவந்த கூற்றை இம்முறை அது விலக்கிக்கொண்டுவிட்டதாக அமைச்சர் சேனரத்ன கூறினார்.
1960களில் இருந்து இது தங்களுக்கு இருந்துவரும் என்று இந்தியத் தரப்பில் வாதிடப்பட்டாலும், சர்வதேச கடல் எல்லை நியமங்கள் 1975 காலப்பகுதியில் வந்த பின்னர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை பாரம்பரிய உரிமையாக கருத முடியாது என்ற இலங்கையின் பதிலைக் கேட்டு, இந்தியப் பிரதிநிதிகள் தங்கள் வாதத்தை கைவிட சம்மதித்தனர் என்று சேனரத்ன தெரிவித்தார்.
கடலின் ஆழம் வரை துழாவி மீன்பிடிக்கும் படகுகளை தமிழ்நாட்டில் இனி புதிதாக தாங்கள் பதியசெய்யப் போவதில்லை என்றும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள இப்படியான படகுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பில்லாத மீன்பிடி முறைக்கு மாற்றப்படும் என்றும் இந்தியத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனவிரத்ன பிபிசியிடம் கூறினார்.
Courtesy: BBC Tamil

Saturday, January 14, 2012

New Future, New Territories




“I do not see the alphabet of my clan” .  This line was written and sung in 1921 by Poykayil Appachan. He was a mere seventeen when he lived through the harassment in Eraviperur, Pathanamthitta and joined the Mar Thoma community. But when he completed the ritual of baptism he was quick to realise that he had entered a different world of discrimination. This self-realisation provoked him to burn the Bible.
Poykayil Appachan is the tip of a territory – the tip of an unknown territory  It is these territories defiled by and lost to the  chaturvarna or the four caste system that are now being recaptured. The anthology of Dalit ( untouchables) writing that is being published in English by Oxford University Press in Madras and presented to the world  displays another side of India.
It is possible that that there is no such anthology in Malayalam. This present anthology is a comprehensive and accurate representation of Dalit compositions. It reports the resistance to   and the rebellion against the politics of isolation.

Touchability and Untouchability

The editor, Prof. Dasan quotes an old folk song:
                                                                        
 “The temple drum needs the skin of cows,  
 The puja flowers need the pariah’s (Untouchable)  basket,                                                             
Oh Brahmin, what is impurity ?”                                                                                                   

 Prof. Dasan also raises the question asked by the village idiot “ It is blood that flows from my wound and yours. This being so why are you questioning my caste ?” This anthology also fulfils the mission of questioning and re-writing the politics of untouchabilty. The editors of this document are Prof. Dasan  who is the Head of the English Department in Kannur University, V.Pratibha, Reader in Kozhikode University, Pradeep Pambirikunnu, Reader in Sankaracharya University, C.S.Chandrika of Swaminathan Research Foundation in Wynaad. This anthology takes us to a whole gamut of poetry, short stories, drama, autobiography and critiques.

On Existence

I openly announce “Kaviyur Murali” as I begin to recite a verse of his.  

"Never say you are busy 
For what I say is for you alone” 

This is a book about the dreams,views and the life of a people. They are notes from those who were evicted from their own land when God seems to have been on vacation.
One can see the relevance of the statement of the reputed Tamil writer Ravi Kumar that Dalit 
writings are  not just  stories of  those targeted. These writings also certainly show that the conclusions from these writings  are an indication of the transformation of society. What is also noteworthy is Prof. Dasan’s observation that the writings display clear views in the  matter of possession rights over land, commodities and democratic institutions.
The anthology contains the writings of Raghavan Atholi,Sunny Kavikkad,  Sivadas Purameri. A.R.Renu Kumar, M. B.Manoj, T.K.C Vaduthala, Paul Chirakkarode, C. Ayyappan, P.K.Prakash, S.Joseph, P.A.Uthaman, A. Shanthakumar, Kallen Pokkudan, Kallara Sukumaran, K.K.Kochu, A.Soman.

Silent Revolution

In a manner of speaking Oxford University Press is conducting a silent revolution. According to Mrs. Mini Krishnan , Editor, Translations, Oxford University Press who has been steering this project it is most probable that the Anthology of Malayalam Dalit Writing will be released in Kannur by the end of this month. The project has taken two years to complete. The Kerala Government helped with rupees two lakhs and several voluntary organisations in Chennai also  assisted. Mini pointed out that the translation into English was done with great care. Saji Mathew, Shirley Joseph, K.Satchidanandan, J.Devaki., T.C.Narayan, E.V.Ramakrishnan, Sushila Thomas are among those who have helped with the translation.

Mini’s next venture is an anthology of Tamil Dalit writings. The work on this is almost complete and  it should be ready by next January. Ravi Kumar  and Dr.Azhakarasan are the editors. Dalit writings in Telugu, Oriya , Bengali and from the North Eastern States are also on Mini’s agenda.

It is impossible to ignore Mini’s role in bringing before the world writers such as Bama. This is a process of re-drawing the literary map of the world and India. As U.R.Ananthamurthi has recorded this is an explosion of a new energy and a new language.

This is a countrywide movement of a new future through new channels. Nobody can now say that  he or she has not seen the literary creations that are reaching new worlds.