Thursday, July 7, 2011

கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட்




பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் சி தமிழ்(ctamil) மடல் குழுமத்தில் எழுதியிருக்கும் குறிப்பு:


 சில ஆண்டுகளுக்கு முன்னர்  சிவத்தம்பி அவர்கள் சுமார் ஒருமாத காலம் பெர்க்லிக்கு வந்திருந்தபோது அவரோடு கணிசமான நேரத்தைச் செலவிடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரை அறிந்த எவரும் மறக்க முடியாத அளவுக்கு அணுக்கமும் வசீகரமும் நிரம்பிய அசாதாரணமான மனிதர் அவர்.உருவத்தை வைத்து மட்டுமல்ல மற்ற விதங்களிலும் அவரை ஒரு ’பிரம்மாண்டமான ஆளுமை’ என்று குறிப்பிடலாம்.சங்கத் தமிழில் அரசன் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு சொற்களைப் பற்றியும் அவை எவ்வாறு துல்லியமாக வேறுபடுகின்றன என்பதைப் பற்றியும் தான் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை அவர் வாசித்துக் காட்டியது எனக்கு நினைவிலிருக்கிறது. அங்கு நானும் ரிச் ஃப்ரீமெனும் மட்டும்தான் பார்வையாளர்களாக இருந்தோம்.  அசாதாரணமான சிந்தனையாளர் ஒருவரின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என நாங்கள் இருவருமே உணர்ந்தோம். அவர் பெர்க்லியை விட்டுப் போன பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரம்பெற்றுவிட்டது. சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாகவும் இருந்த அவரும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும்  என நான் கவலையுற்றேன். அடுத்து அவரை நான் சந்தித்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதுதான். அன்றைய முதல்வரை அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் சந்திக்கப் போயிருந்தபோதுதான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிவத்தம்பி மாறவே இல்லை. முதல்வருக்கு உவப்பளிக்காத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே போனார்.முதல்வரிடம் பேசியபோது சிவத்தம்பியின் ஆளுமை எப்படி வெளிப்பட்டது  என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.   அவரது மறைவு இலங்கைக்கும் தமிழுக்கும் பேரிழப்பாகும்.

ஜார்ஜ் எல் ஹார்ட்  

( தமிழில் : ரவிக்குமார் )

2 comments:

  1. அன்புள்ள ரவிக்குமார்,

    உங்களின் அருமையான மொழிபெயர்ப்புக்கும் உடனே
    செய்து வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி!!
    சி.ஆர்.செல்வகுமார்

    ReplyDelete
  2. Dear Ravikumar,

    Thanks for the elegant translation of my remarks -- we were quite fortunate to know not only Prof. Sivathamby, but also Prof. Kailasapathy not long before his untimely death. Each was a formidable scholar and presence -- I doubt we will see their like anytime soon.
    George Hart

    ReplyDelete