Saturday, July 30, 2011

தேர்தல் முறையை மாற்றுவோம் - ரவிக்குமார்




இந்தியாவின் ஜனநாயகம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு’ காரணம் நமது தேர்தல் முறை என்று சொல்லப்படுவதுண்டு. 'மக்களின் தீர்ப்பை மகேசனின் தீர்ப்பாக' மதித்து அமைதியாக ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடும் பக்குவத்தைப் பெற்றவர்கள் நமது அரசியல் தலைவர்கள். ஆனால் இந்தத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் இப்போது வலுவாக கேட்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனக்குரல் கொடுப்பவர் நமது தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி. இதற்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையராயிருந்த கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கருத்தை வலியுறுத்தியே வந்தார்.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளைவிடக கூடுதலாக இருப்பதுண்டு.எனவே அந்த தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. எனவே இதை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்திவிடலாம். பல மாநிலங்களில் சுமார் தொண்ணூறு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி குறைந்த அளவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். பலபேர் இருபது சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் சராசரியாக பதினோரு சதவீத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள். மீதம் 89 சதவீதம் மைனாரிட்டி அளவு வாக்குகளால் வென்றவர்கள்தான். பீகாரில் 82 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 60 சதவீதமும், கர்னாடகாவில் அறுபத்தொன்பது சதவீதமுமான எம்எல்ஏக்கள் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றே ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே இதில் தமிழ்நாடு மட்டும் தான் விதிவிலக்கு. இங்கு 1991ஆம் ஆண்டு தேர்தலில் தொண்ணூறு சதவீதம் சட்டம்ன்ற உறுப்பினர்கள் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. சுமார் 67 சதவீத எம்.பி.க்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக உள்ளனர்.
வெற்றி பெறுகிறவர் ஐம்பது சதவீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. இதனால் தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையை இது தகர்த்து விடுகிறது.
இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இதுவே காரணமாகிறது. 'பரவலான மக்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளை சென்னாலே போதும்' என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கு இதுவே வழிகோலுகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்பது ஒரு யோசனை.
பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெற்றி பெறும் நிலை இருப்பதால் மறுதேர்தல் என்பது ஏறக்குறைய மாநிலம் முழுமைக்கும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது சிரமம் என்று சில விமர்சனங்கள் வரலாம். இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றை செலுத்தும்படி கோருவது. எந்தெந்த தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது. எந்திர வாக்குப்பதிவு வந்து விட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.
அடுத்ததாக சொல்லப்படுகிற யோசனைதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் ((Proportionate  representation) ) என்பதாகும். இந்திய சட்ட கமிஷனும் இந்த முறையைத் தான் பரிந்துரை செய்திருக்கிறது. நமது தலைமைத் தேர்தல் ஆணையர் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்த முறையை பட்டியல் முறை ((List System) என்று குறிப்பிடுகின்றனர்.
நபர்களை நிறுத்துவதற்கு பதிலாக அரசியல் கட்சிகளை முன்னிறுத்தித் தேர்தலை நடத்துவது, அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் இடங்களை வழங்குவது என்பதே இந்தத் திட்டம். இதில் தனி நபர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் கூடுதலாக ஒரு அம்சத்தை சட்டக்கமிஷன் கூறியுள்ளது. வாக்காளர்களிடம் இரண்டு வாக்குகளைத் தந்து ஒன்றை அரசியல் கட்சிக்கும், மற்றதை வேட்பாளருக்கும் அளிக்க கோருவது. கட்சிகள் வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் இடங்களை ஒதுக்கி அதன்பிறகு வேட்பாளர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நபர்களைத் தேர்வு செய்வது.
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மெஜாரிட்டி அரசாங்கம் உருவாவதற்கு வாய்ப்பு குறைவு. கூட்டணி அரசாங்கமே சாத்தியமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட்டியல் முறை என்பதும் கூட ஆட்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை ஊக்குவித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் கல்வியறிவற்றவர்கள் நிரம்பியிருக்கும் நமது நாட்டிற்கு இது சரிப்பட்டு வராது என்பதே அவர்களது கருத்து.
நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் இந்த விகிதாச்சார பிரதிநித்துவத்தை செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்து விடும். தற்போது 172 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளன. இவற்றில் பல கட்சிகள் எப்போதாவது ஒருமுறை தான் தேர்தலில் போட்டியிடும். 'பதிவுக்காக சராசரியாக வாரம் மூன்று கட்சிகள் விண்ணப்பிக்கின்றன'' என்று கோபாலஸ்வாமி குறிப்பிடுகிறார். பலபேர் வருமானவரி விலக்கு பெறுவதற்காகத்தான் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலன்றி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.
ஆகவே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடே எளிதானது. ஜனநாயகத்தை பாதுகாப்பது. இது மைனாரிட்டி வாக்கினால் ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கை கட்டுப்படுத்தும்.
இந்த ஆலோசனைகள் சட்ட அறிஞர் சுபாஷ் காஷ்யப்பின் பொறுப்பில் அமைந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக்குழுவின் கீழ் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தக்குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தக்குழு ''ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வரவேண்டும். அதற்கான தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்'' எனப் பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்தக்குழு கூறியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைகளை 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது. ஆனால் அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எந்த காரியத்தையும் அரசியல்வாதிகள் அவ்வளவு சுலபமாக செய்து விட மாட்டார்கள். அவர்களைச் செயல்பட வைக்கும் ஆற்றல் மக்களுக்குத்தான் இருக்கிறது.

ஜுனியர் விகடன் 20.12.2006

Friday, July 29, 2011

சமச்சீர் கல்வி: விவாதத்துக்காக சில குறிப்புகள் - ரவிக்குமார்


( இந்தக் கட்டுரை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுதி சுற்றுக்கு விடப்பட்டது. விழுப்புரம் ,சென்னை கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அன்றைய பள்ளிக் கல்வி அமைச்சரிடம்  என்னால் தெரிவிக்கப்பட்டன  )
இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலாகும். ‘ இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதிலிருந்து பத்து ஆண்டுகளில்(1960க்குள்) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வியை வழங்கவேண்டியது அரசின் கடமை’ என நமது அரசியல் சட்டத்தின் பிரிவு 45இல் கூறப்பட்டுள்ளது.இது வழிகாட்டும் நெறிமுறைகளில்( directive principles) ) கூறப்பட்டிருப்பதால் அரசுக்கு இதை நிறைவேற்ற வேண்டிய சட்ட நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.ஆனால் 1993 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற உன்னிகிருஷ்ணன் எதிர் ஆந்திரப்பிரதேச அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ஒரு குழந்தைக்கு இளமையில் கல்வி மறுக்கப்பட்டால் அதன் வாழ்வே நாசமாகிவிடும்,எனவே அரசியல் சட்டத்தின் பிரிவு 45 என்பதை அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் பிரிவு 21 உடன் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும்.‘எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கல்வியையும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அறிவிக்கவேண்டுமென நாடெங்கும் கோரிக்கைகள் எழுந்தன.வேறுவழியின்றி மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் 21 ஏ என்ற பிரிவைப் புதிதாகச் சேர்த்து ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக் இலவசக் கல்வியை வழங்கிட வகை செய்தது.கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் இதற்கான சட்டங்களை மாநில அரசுகள் இயற்றிக்கொள்ளவேண்டுமென மத்திய அரசு சொல்லிவிட்டது.ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும் செலவை கனக்கில் கொண்டு மத்திய அரசே சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டுமென மாநில அரசுகள் கோரிவந்தன.அதைத் தொடர்ந்து மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மசோதாவை பல மாநில அரசுகள் நிராகரித்துவிட்டன.அதனால் அந்த சட்டத்திருத்தம் எவ்வித பயனுமின்றி அப்படியே கிடக்கிறது.
       சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமப்படுத்தவேண்டுமென்றால் சமூகத்தின் அங்கங்களாக இருக்கிற ஒவ்வொரு துறையிலும் சமநிலையைக் கொண்டுவர வேண்டும். அப்படியானதொரு எண்ணத்தின் அடிப்படையில்தான் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ‘தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த குழு ஒன்றை 08.09.2006 அன்று அமைத்தது. ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட அக்குழுவுக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ச.முத்துக்குமரன் தலைவராக நியமிக்கப்பட்டார்.  டாக்டர் முத்துக்குமரன் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் இப்போது சமர்ப்பித்துவிட்டது. அந்த அறிக்கை அண்மையில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறதா? இல்லையா? என்பது பற்றி முடிவு எதுவும் அறிவிக்கப்படாத  நிலையில் அதுபற்றி பல்வேறு தகவல்கள் நாளேடுகளில் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் தேர்வுகளில் சீர்திருத்தங்களைச் செய்யப்போவதாகவும் அடுத்தடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடும் பொறுப்பு திரு.விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்போது மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரி பள்ளிக் கல்வி முறை, மாநில வாரியக் கல்விமுறை என ஐந்து விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.இப்படி வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தக் கல்வி முறைகளின் காரணமாக மாணவர்களின் கல்வித் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருகின்றன.இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இப்போது சமச்சீர் கல்வி முறை வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
கல்வி என்பது காசிருப்பவர்களின் சொத்தாக மாறுவது சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்துதான் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிய தமிழக அரசு முத்துக்குமரன் குழுவை நியமித்தது.  அந்தக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து கருத்துக்களைத் தெரிவிக்க உட்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள்ளாகவே அது அறிக்கையை தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்க நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே முப்பது லட்சம் என 2006ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஐந்தாயிரம் உயர்நிலைப்பள்ளிகளும் நான்காயிரத்து ஐநூறு மேல்நிலைப்பள்ளிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இதில் சுமார் அறுபது சதவீதம் மாநிலக் கல்வி முறையைப் பின்பற்றும் பள்ளிகள்தான். முப்பத்தைந்து சதவீதம் மெட்ரிக் பள்ளிகள். மற்றவை யாவும் சேர்த்து ஐந்து சதவீதம் அளவுக்கு உள்ளன. இதில் மத்திய அரசு நேரிடையாக நடத்தும் பள்ளிகளும், அதன் அனுமதி பெற்று நடத்தப்படும் பள்ளிகளும் உள்ளன. அவற்றின் நிலைமைகளை விரிவாக ஆராய்ந்துள்ள இந்தக் குழு நூற்று அறுபது பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை, அதுபோல சுமார் இரண்டு பங்கு அளவுகொண்ட பின்னிணைப்புகளோடு சேர்த்து சமர்ப்பித்திருக்கிறது.
பாடத்திட்டமானது ஒரு மாணவனிடத்தில் அவனது ஆயுள் முழுமைக்கும் தேவையான செய்திகளைத் திணிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக குறைந்தபட்ச அளவே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவன் தனக்குத் தேவையானவற்றைத் தானே கற்கும் மனநிலையைப் பெறுவான் என குழு கருத்து தெரிவித்துள்ளது.
தேர்வு என்பது இன்றியமையாதது என ஏற்றுக்கொண்டுள்ள குழு ‘‘பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியில் அளிக்கப்படவேண்டும். சிறுபான்மையோருக்கு அவர்கள் விரும்பினால் இப்போது நடைமுறையில் உள்ள அவர்களது மொழியைப் பயிற்று மொழியாகத் தொடர வாய்ப்பு அளிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஆசிரியர் மாணவர் விகிதம் குறித்த அதன் பரிந்துரையாகும். 1966ஆம் ஆண்டு மைய அரசால் அமைக்கப்பட்ட கோத்தாரி குழு, ‘‘அதிகமான மாணவர்கள் அடங்கிய வகுப்புகள் கற்பிக்கும் தரத்திற்கு அதிகமாகத் தீங்கு விளைவிப்பவை. அங்கே சிறந்த முறையில் கற்பித்தாலும்கூட அது பயனற்றுப் போய்விடும்’’ எனக் கூறியுள்ளதை இந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஒரு ஆசியருக்கு முப்பது மாணவர்கள் வீதம் இருக்க வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி முறை வெற்றிபெற வேண்டுமென்றால் பாட நூல்களின் தரத்தை அதற்கேற்ப உயர்த்த வேண்டும். இதைக் குழுவும் ஆமோதித்துள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள் இருப்பது நல்லது. பாடநூல்கள் தவிர விரிவாக எழுதப்பட்ட வழிகாட்டி நூல்களும், துணை நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், அகராதிகள் முதலிய நூல்களையும் தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் வெளியிடலாம் என்ற ‘அரிய’ ஆலோசனையை குழு முன்வைத்துள்ளது.
மாணவர்களை நூலகத்துக்கு அனுப்புவதற்கென சில நல்ல யோசனைகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளியில் நூலகம் ஒன்று இருக்க வேண்டும். அதில் சென்று படிக்கக்கூடிய விதத்தில் வாரத்துக்கு ஒரு மணி நேரமோ அல்லது ஒரு ‘பீரியடோ’ அதற்காக ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள முத்துக்குமரன் குழு பொது நூலகங்களைக் கல்வி நிறுவனங்களோடு இணைப்பதற்கான ஆலோசனையையும் முன் வைத்துள்ளது. ‘‘மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் சுமார் ஐநூறு மாணவர்களுக்கு மேல் கல்வி கற்கும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஒரு நூலகர் அமர்த்தப்படவேண்டும். மாணவர்களை அவர்கள் அந்தவாரம் படித்த நூல் பற்றி எழுதச் சொன்னால் அந்த மாணவனுக்கு சிந்திக்கும்,  எழுதும் திறன்களும் மேம்படும்’’ என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
‘‘ஒவ்வொரு நாளும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்களும், மாணவர்களும் வழிபாட்டுக் கூட்டத்தில் கூடுவது மிகுந்த நலம் பயக்கும்’’ என குழு அறிவுரை வழங்கியுள்ளது. வழிபாட்டுக் கூட்டம் (Prayer Meeting) என்னும்போது அதில் மதத்தின் வாசனை கலந்து விடக்கூடும். அந்தக் கூட்டத்தில் உணர்வூட்டக்கூடிய கதை, இசை, கருத்துரைகள், செய்திகள் முதலியவற்றை இடம் பெறச்செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளின் நிர்வாகத்தில் தன்னாட்சி இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. ‘பொதுப்பள்ளி முறை’ உருவாவதற்கும் இது உதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ‘‘பள்ளி இறுதித் தேர்வுக்குரிய பாடநூல்களை மட்டும் மாநில அளவில் திட்டமிட்டு தயாரிக்கலாம். மற்ற நிலைகளில் உள்ள பாடநூல்கள் எல்லாவற்றையும் பள்ளி மட்டத்தில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானிப்பது செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது’’ எனக் குழு கருதுகிறது.
மாநில அரசின் ஒவ்வொரு துறையிலும் ஒரு கையேடும் (Manual) தணிக்கை நெறிமுறைகளும் (Audit Code) வெளியிடப்பட்டு அதனடிப்படையில்தான் அந்தத் துறைகளின் நிர்வாகம் நடத்தப்படுகிறது. ஆனால் கல்வித்துறையில் மட்டும் இவை வெளியிடப்படாத நிலை உள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள குழு உடனடியாக அவற்றை வெளியிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளது.
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் இப்போது கிராமக் கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் கல்விக்குழு உருவாக்கப்பட்டு அந்தந்தப் பகுதி பள்ளிகளைத் தொடர்பு கொண்டு கல்வித்தரம் சிறப்பாக அமைய உதவலாம் என முத்துக்குமரன் குழு ஆலோசனை கூறியுள்ளது.
வகுப்பறைகள் போதுமான வெளிச்சத்தோடும், காற்றோட்டத்தோடும் அமைக்கப்பட வேண்டும். ‘‘இனி வரும் காலங்களில் புதியதாகத் தொடங்கவுள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளும், ஏற்கனவே உள்ள பள்ளிகளில் புதியதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறைகளும் ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டர் இடவசதியும், 3.7 மீட்டர் உயரமும்’’ இருக்கும் விதமாக அமைக்கப்படவேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண இயக்கம் இதுபோல ஏதேனும் ஒன்றில் சேர்ந்து கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆலோசனைகள் மட்டுமல்லாது மேலும் சிலவற்றையும் அது கூறியுள்ளது.
முத்துக்குமரன் குழுவின் அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்பட்டபோதிலும் அது இன்னும் அரசால் ஏற்கப்படவில்லை. அதுபற்றி அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க முடியாத ஒரு இக்கட்டான சூழல். ஏனென்றால் தனது ஆலோசனைகளை எப்படி செயல்படுத்துவது என்ற செயல் திட்டத்தை குழு அளிக்கவில்லை.இந்த அறிக்கையும்கூட திருத்தமாகத் தயாரிக்கப்படவில்லை.அவசரத்தில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
      
இந்தக் குழுவின் உறுப்பினராக இடம் பெற்றிருந்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேனிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான கிறிஸ்து தாஸ் பதினேழு பக்கங்களில் அறிக்கை ஒன்றை குழுவிடம் கொடுத்திருக்கிறார். மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தை பொதுவான பாடத்திட்டமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதே அவருடைய வாதம். தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்பதையோ, வகுப்பறைகள் வெளிச்சமும், காற்றோட்டமும் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதையோ கிறிஸ்து தாஸ் ஏற்கவில்லை. முழுக்க முழுக்க மெட்ரிக் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடே அவர் தனது கருத்துக்களை கூறியுள்ளார். அப்படித்தான் மற்ற உட்குழுக்களின் கருத்துக்களும் இருக்கின்றன. சமூக அறிவியல் பாடம் குறித்த உட்குழு தற்போது மாநில வாரியக் கல்வி முறையில் உள்ள பாடங்களை அப்படியே சமச்சீர் கல்வித் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.

       சமச்சீர்கல்வியைத் தருவது குறித்து இந்திய அளவில் முயற்சி மேற்கொண்டுள்ள இன்னொரு மாநிலம் பீகார்.தமிழ்நாட்டில் குழு அமைப்பதற்கு முன்பே பீகாரில் தான் இதற்கான குழு அமைக்கப்பட்டது.2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி அந்தக் குழு அமைக்கப்பட்டது.டெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் திரு.முச்குந்த் துபே தலைமையில் டாக்டர் மதன்மோகன் ஜா மற்றும் பேராசிரியர் அனில் சட்கோபால் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு 306 பக்கங்கள்கொண்ட தனது அறிக்கையை 2007 ஜூன் எட்டாம் தேதி பீகார் மாநில அரசிடம் அளித்தது.நீதிபதி சச்சார் குழு அறிக்கையைப்போல மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் இந்த அறிக்கை விளங்குகிறது.கடந்த பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்காக நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த பேராசிரியர் அனில் சட்கோபாலின் பங்களிப்பே இந்த சிறப்புகளுக்குக் காரணம்.
       பீகாரில் உள்ள பள்ளிகளை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரையுள்ளஆரம்பப் பள்ளிகள், எட்டாம் வகுப்புவரை உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஒன்பதிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை உள்ள சீனியர் செகண்டரி பள்ளிகள் என மூன்று அடுக்குகளில் அமைக்கவேண்டும் என அந்டஹ் குழு கூறியுள்ளது.5முதல் 14 வயதுவரையிலான பிள்ளைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும்,உயர்நிலைக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்குவது எட்டு வருடங்களில் எட்டப்படும் என அது தெரிவித்துள்ளது.ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் சம்பளத்தை அதிகப்படுத்துவதற்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.ஆசிரியர் பணி மாறுதலுக்கு உரியது அல்ல ஆசிரியரே விரும்பிக்கேட்டால் அவரது மொத்தப் பணிக்காலத்தில் இரண்டு முறை அவருக்கு மாறுதல் வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரத்துள்ளது.தனியார் பள்ளிகளிலும் இலவசக் கல்வியே வழங்கப்படவேண்டும்.அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் எனக் கூறியுள்ள அந்தக் குழு தனியார் பள்ளிகளும் அரசு அறிவிக்கும் பாடத்ட்திட்டங்களையே பின்பற்றவேண்டும் எனக் கூறியுள்ளது.பள்ளிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட குழுவைக்கொண்டே நிர்வகிக்கவேண்டும் அவர்களில் 50% பெண்கள் இடம்பெறவேண்டும்.இதற்காகத் தனியே சட்டமியற்றவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
       சமச்சீர்கல்வியை பீகாரில் அமுல்படுத்த ஆகும் செலவைக் கணக்கிட்டு அதை எப்படி ஈடுகட்டலாமெனவும் வழிகாட்டப்பட்டுள்ளது.சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநில அளவில் சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் எனக் கூறியுள்ள அந்தக்குழு அந்த சட்ட மசோதாவையும் தயாரித்து அளித்துள்ளது.இந்த அறிக்கையைப் பார்க்கும்போதுதான் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முத்துக்குமரன் குழு அறிக்கை எந்த அளவுக்குப் போதாமையோடு இருக்கிறது என்பது தெரிகிறது.
       சமச்சீர் கல்வியை கொண்டுவருவது அரசின் கடமை மட்டுமல்ல.அதற்காக நாமும் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கடந்த 04.11.2007 அன்று விழுப்புரத்தில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் கூட்டப்பட்டது.அதில் மக்களின் அடிப்படைக் கல்வி பற்றி அக்கறை உள்ள இருபதுபேர் கலந்து கொண்டனர்.அடுத்தபடியாக சென்னையில் 16.12.2007 அன்று அடுத்த கூட்டம் நடைபெற்றது.அதில் நாற்பதுபேர் கலந்துகொண்டனர்.
      


’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’ : எதிர்வினை 2 - தமிழறிஞர் வி.எஸ் .ராஜம்

அன்பின் ரவிக்குமார்,
திரு ராஜ் கௌதமனின் நூலை நான் படித்ததில்லை. இனிப் படிக்கவும் வாய்ப்பும் நேரமும் கிடைக்காது -- உடல் நலக் குறைவைச் சரிசெய்யவும் ஏற்கனவே மேற்கொண்ட இலக்கண ஆராய்ச்சிக்கும் நேரம் தேவை. ஆனால் இங்கே அவர் கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து அவ்வளவு பொருந்துவதாக இல்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு. இதற்குமேல் அடிக்கடிப் பங்குகொள்ள இயலாத நிலை. அன்புடன் பொறுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைத் தனிமடலில் எழுதுகிறேன்.

ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.

இதுபற்றி என்னுள் எழுந்த கேள்விகள்:
--------------------------------------------
1. "சங்க காலம்" என்பதை ராஜ் கௌதமன் எப்படி வரையறுக்கிறார்? அதாவது அவர் கருத்துப்படி, எந்த நூற்றாண்டிலிருந்து எந்த நூற்றாண்டு வரை "சங்க காலம்"?
2. "சங்க காலம்" பற்றிக் கருத்துக்கள் சொல்ல எந்த வகை ஆவணங்களை இவர் பயன்படுத்துகிறார்? கல்வெட்டுகளா? இலக்கியமா? எந்தக் கல்வெட்டுகள்? எந்த இலக்கியங்கள்?
3. "சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்" என்பதற்கு இவர் காட்டும் சான்று என்ன?
4. " 'பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது." -- இந்தக் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் எங்கே பார்க்கலாம்?
5. "வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்" -- இதற்குச் சங்க இலக்கியங்களில் என்ன சான்று இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமான விடைகள் கிடைத்தால் நன்றியுடன் மகிழ்வேன்.
எனக்குத் தெரிந்த அளவில்...
---------------------------------
6. "சேரி" என்ற நல்ல தமிழ்ச்சொல்லின் பொருள் பிற்காலத்தில் பிறழ்ந்து உணரப்பட்டிருக்கிறது -- 'சேரி  என்பது தாழ்த்தப்பட்டவர் வாழும் இடம்' என்று. 

7. முதன் முதலாக, தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் "பார்ப்பனச் சேரி" என்ற வழக்கு காணப்படுகிறது. (சங்க இலக்கியத்தில் இல்லை.)
இளம்பூரணர் உரை: "சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது."
இளம்பூரணர் சங்க காலத்தவர் இல்லை.
அன்புடன்,
ராஜம்

'வேஷப் பிராமணரும்' 'தமிழ்ப் பிராமணரும்' - எதிர்வினை 1 நாக.இளங்கோவன்

எனக்குப் பட்டதை இங்கு எழுதுகிறேன்:

20 ஆம் நூற்றாண்டுக்கு முன் பின் என்று இரண்டு கோணங்களில் காணலாம்.

1) வடசொல் மீது மோகமும் அதுவே உயர்வு என்று எண்ணி அப்படித் தங்களை அழைத்துக் கொண்டிருக்கலாம்
என்று கருத வாய்ப்புள்ளது. மணிப்பிரவாள காலங்களில் இது தொடங்கி இருக்கக் கூடும். வடக்கே உள்ள பார்ப்பனர்கள் பிராமனர் என்று அழைத்துக் கொள்வதை ஒட்டி தாங்களும் அப்படி அழைக்கப் படுவதையே விரும்புகிறார்கள் என்று கருதலாம். அதோடு இந்தியப் பொது அடையாளமாக இதனைக் கருதுகிறார்களோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது.

ஐயரும் ஐயங்காரும் எப்படிப் பிராமணர் என்ற பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்களோ,
அப்படியே பள்ளர் பறையர் என்ற தலித்துகளும் பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்கள் என்று கருதஇடம் இருக்கிறது.

பார்ப்பனர் மற்றும் தலித்து வகுப்பினர் இப்படி நினைக்கிறார்களே பிறர் அப்படி நினைக்கவில்லையே ஏன் என்று
யாரும் கேட்கலாம். அவர்களுக்கு வேறெங்கேயும் யாருடனும் ஒட்டு இல்லை. அப்படி இருந்திருந்தால் கவுண்டன் எப்பவோ சிறீகவுண்டன் ஆகியிருப்பான். முதலி எப்பவோ முதலிசிறீ ஆகியிருப்பான். வடமொழி மோகம் என்பது மேட்டுக்குடியின் அடையாளம். அதற்குப் பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. வையாபுரிப்பிள்ளைக்குத் தோதாக ஒரு சாதி வடக்கே இருந்திருந்தால் தன் சாதிப்பெயரை பிள்ளைவாள் எப்பொழுதோ மாற்றிக் கொண்டிருப்பார்.

2) திராவிட இயக்கங்களின் எழுச்சி பார்ப்பன சாதியை வைவதிலேயே தொடங்கியது. அப்படிச் செய்ததில்
இரண்டு நோக்கங்களை அது கொண்டிருந்ததது என்று கருத இடம் இருக்கிறது. ஒன்று, பார்ப்பனர்கள் செய்த மேலாதிக்கத்தையும், அவர்கள் ஒழுகிய/ஒழுகுகின்ற வைதீகத்தின் வருணம், தீண்டாமை உள்ளிட்ட குமுகச் சமனுக்கு ஒவ்வாத சங்கதிகளையும் மறுப்பதற்காக அவர்களின் சாதியைச் சொல்லி வைததாகவே காணக்கிடைக்கிறது.

மற்றொன்று, பார்ப்பனர்களுடன் ஆன பங்காளித்துவ போரில், பார்ப்பனரல்லாதவர்களை ஒன்று சேர்ப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகமே "பார்ப்பனன் என்று சாதியைச் சொல்லி வைதது" என்று வலுவாகச் சொல்லமுடிகிறது. ஏனென்றால், வைதீக வருணத்தையும், மேட்டுக்குடித் தனத்தையும் காட்டியவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதித்தமிழர்கள் என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த மேட்டுக்குடியானவர்களும் வைதீக வருண, தீண்டாமையின் பங்காளிகள்தான். பார்ப்பனர் மட்டும் இந்தக் கொடுமையைச் செய்யவில்லை. சொல்லப்போனால் பார்ப்பனரை விட பல மடங்கு அதிகமாகச் செய்தவர்கள் இந்த மேட்டுக் குடியானவர்கள்தான். அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்வேன்: பார்ப்பன சாதியை இகழ்ந்து ஏடுகளிலும் நேரடியாகவும் எங்கும் பேசமுடிகிறது (இதற்குத் தமிழ்ப்பற்று என்று வேறு பெயர் வைத்து விட்டது கேவலமான ஒன்று). ஆனால், பார்ப்பனரல்லாத எந்தச் சாதியினரையும் சாதியைச் சொல்லி இகழ்ந்து பேசிவிடமுடியாது. அப்படிச் செய்தால் தமிழ்நாடு பற்றி எரியும். எரிந்திருக்கிறது. அதைக் கண்டித்துக் கொண்டே அதுவும் பார்ப்பானின் சூழ்ச்சி என்று திராவிட இயக்கங்கள் பொய் பேசின; சாதித்தமிழர்களை அவர்களின் அழுக்கு வெளியே தெரியாமல் அரணாக இருந்தன. 

ஆக, பெருந்தீங்கு செய்த பல குடியானச் சாதிகள் தாம் செய்த அடாவடிகளை அட்டூழியங்களை மறைக்க அத்தனை அடாவடிகளையும் பார்ப்பனச் சாதியின் மேல் மட்டும் பழி போட்டுக் கூட்டுக் கொள்ளையடித்திருக்கின்றன தமிழ்நாட்டில் என்று வலுவாக நம்ப இடம் இருக்கிறது. 
திராவிட மோசடி என்பது இதுதான். 

இதனால் பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். பள்ளர் பறையர் என்று இளக்காரமாக மேட்டுக்குடியினர் பேசியதால் ஏற்பட்ட அவத்தைப் போக்கவே தலித்து என்று அழைத்துக் கொள்கின்றனர் என்று
சிலர் சொல்வதுண்டு. அது போலவே பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப் படுகின்றது என்று சொல்ல
இடமுண்டு.

திராவிடக் கட்சிகள் நேர்மையானதாக இருந்திருந்தால் பார்ப்பனரல்லாதார் செய்யும் அடாவடிகளையும்
கண்டித்திருக்கும். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக ஒன்றுபட வேண்டும் ஒன்றுபடவேண்டும்
என்று சொல்லியே அனைவரையும் பிரித்து வைத்திருக்கிறது கடந்த 50 ஆண்டுகளில். ஞாயமாக,
திராவிட இயக்கங்கள் நேர்மையாக இருந்திருந்தால் தலித்து இயக்கங்களோ அல்லது வன்னியர், முக்குலத்தோர்,
நாடார், கொங்கர் அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டியிருக்காது. அதேபோல இந்தியாவை ஆளுகின்ற காங்கிரசு இயக்கம் நேர்மையானதா என்றால் அது 100 திராவிடங்களுக்குச் சமம் :)

அன்புடன்
நாக.இளங்கோவன்

’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’


ராஜ் கௌதமன் எழுதி விடியல் பதிப்பக வெளியீடாக( 2008) வந்திருக்கும் ‘ தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்’ என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ‘ அறம் அதிகாரம் ‘ என்ற தலைப்பில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நூலைத் திருத்தி விரிவாக்கி எழுதியிருக்கிறார் ராஜ் கௌதமன். அவரது எழுத்துக்களில் விரவிக்கிடக்கும் எள்ளலும் பகடியும் இந்த நூலைப் படிக்கும்போதும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. ”முந்தைய பதிப்பில் ‘ பார்ப்பனர்’ என்ற தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதை வசைச் சொல்லாக ஒரு பகுதியினர் தவறாகப் புரிந்துகொண்டதால் , ‘பிராமணர்’ என்ற வடசொல்லே இந்நூலில் கையாளப்படுகிறது.படிக்க வைப்பதுதான் நோக்கம் “ என்று ‘என்னுரை’ பகுதியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இத்தகைய அனுபவம் எனக்கும் உண்டு.’பார்ப்பனர்’ என்று குறிப்பிட்டு எழுதுகிறவர்களின் எழுத்துக்களைத் தான் படிப்பதே இல்லையென்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் குறிப்பிட்டார். ஏன் என்று கேட்டபோது அதுவொரு வசைச் சொல்லாகவே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்றார். எப்படி என்பதை அவரால் விளக்க முடியவில்லை. அப்படி யாரோ ராஜ் கௌதமன் அவர்களிடத்திலும் புகார் செய்திருக்கிறார்கள் போலும்.

’பிராமணர் என்ற வட சொல்’ என ராஜ் கௌதமன் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பற்றி அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். “ தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகார்த்தலும் சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று சமண நிலை கடந்து பிரமமணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள்.இவர்களையே எதார்த்த பிராமணரென்று கூறப்படும்..... அங்ஙனமின்றி பெண்டுபிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணியமற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக் குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயெ ஓருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித் திரிவது வேஷ பிராமணமேயாகும் “ என்று அவர் கூறுகிறார்.  (அயோத்திதாசர் சிந்தனைகள்- தொகுதி 1, பக்கம் 535- 536).

ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.சமண -பௌத்த துறவியர் வடநாட்டாராயினும் தமிழகத்தில் அவர்களது போதனையால் சமண- பௌத்த மதங்களில் சேர்ந்து துறவிகளாகத் தமிழினத்தார் ஆகியதுபோல பிராமணியத்தின் போதனைகளால் தமிழர் பிராமணராக ஆகியிருக்க முடியாது. தமிழ் பிராமணர் எனப்படுவோ பிராமணராக மாறிய தமிழர் அல்லர் “ என்கிறார் கௌதமன். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையால் தீர்மானிக்கப்படுவதால் அவர் அப்படிக் கூறுகிறார். பிராமணர் ஆவதற்குத்தான் பிறப்பு அடிப்படை. தமிழராக ஆவதற்கு அப்படியல்லவே. எனவே தமிழ்ப் பிராமணர் என்போர் தமிழராய் மாறிய பிராமணர் எனக் கொள்ளலாமா ? அல்லது பிராமணரையும் ,பறையரையும் விலக்கித்தான் இப்போதும் தமிழர் என்பதை வரையறுக்கிறோமா ?
தமிழ்ப் பேரகராதியில் தமிழர் என்பதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் இதோ:
தமிழர் tamiḻar
n. < E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.

ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என ஐ.நா அவையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் கோரிக்கையை ஏற்று பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரித்துத் தருவதென விடுதலைச் சிறுத்தைகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாகக் கடந்த 26.07.2011 அன்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. காமராசர் சிலை அருகில் பிலால் உணவகம் எதிரில் நடைபெற்ற அந்த இயக்கத்தில் நானும் தலைவரோடு கலந்துகொண்டேன். இரண்டுமணி நேரத்தில் சுமார் ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து கையொப்பமிட்டனர். பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.



Wednesday, July 27, 2011

தாராபுரம் : வியக்கச் செய்யும் விளையாட்டு

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் பல இல்லாதொழிந்துவிட்டதுபோலவே தமிழர்களின் விளையாட்டுகள் பலவும் இப்போது இல்லாமல் மறைந்துபோய்விட்டன.இத்துடன் உள்ள தாராபுரம் கோயில் சிற்பத்தில் காணப்படும் விளையாட்டைப் பாருங்கள். காண்போரை வியக்கச் செய்யும் இந்த விளையாட்டு எப்போது மறைந்தது? இதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதா?

Sunday, July 24, 2011

திருவாரூரில் இருக்கும் ஓவியங்கள்




திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாசிரிய மண்டபத்தின் கூரையின் உள்புறத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் கால ஓட்டத்தில் சிதைந்துகொண்டிருந்த நேரத்தில் அவற்றைப் பாதுகாக்க டேவிட் ஷுல்மன் அவர்கள் எடுத்த முன்முயற்சி நன்றிக்குரியது.76 வயதான புகைப்படக் கலைஞர் வி.கே.ராஜாமணி அவர்களின் அற்புதமான புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் நூலை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொண்டுவந்திருக்கும் ப்ரகிருதி ஃபவுண்டேஷன் நிறுவனத்தையும் நாம் பாராட்டவேண்டும். இப்படியொரு நூல் வெளிவந்திருப்பதை முதலில் எனக்கு திரு க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்தான் கவனப்படுத்தினார். அவர் மூலமாக உடனடியாக ஒரு பிரதியை வாங்கினேன். அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் திருவாரூர்க்காரர் என்பதால் அவருக்கு அந்த நூலின் ஒரு படியைத் தரலாமெனத் தோன்றியது. அவருக்கென ஒரு பிரதியை வாங்கிச் சென்று தந்தபோது ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த ஓவியங்களைப் பார்த்தார். அவற்றைப் பற்றி விவரிக்கவும் செய்தார். அந்த நூலைத் தமிழில் கொண்டுவரலாமென நான் சொன்ன யோசனையையும் வரவேற்றார். இப்போது அரசு சார்பில் அந்த முயற்சியை மேற்கொள்ளமுடியாது. ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பவர்களே அதைத் தமிழிலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.டேவிட் ஷுல்மன் அவர்கள் சொன்னால் க்ரியா பதிப்பகமேகூட அதை வெளியிடலாம்.
இங்கே அந்த ஓவியங்களில் சில:


தாராசுரம் :வாளேந்திப் போரிடும் பெண்கள்?

தாராசுரத்தில் பெண்கள் போல் தோற்றமளிக்கும் சிலர்  வாளேந்திப் போரிடும் காட்சியைச் சித்திரிக்கும் சிற்பம் ஒன்றைப் பார்த்தேன்.பெண்கள் போரில் ஈடுபட்டதாக சங்கப் பாடல்களில் குறிப்பேதும் இருக்கிறதா என்று தேடினேன். உ.வே.சா பதிப்பித்த புறநானூறு (1935) கைவசமிருந்தது. அதில் அப்படியான செய்தி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு பேராசிரியர் மாதையன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுக் கேட்டேன். சங்க இலக்கியத்தில் அத்தகைய செய்தி எதையும் தாம் பார்த்ததாக நினைவில்லை ஆனால் பிற்காலத்தில் ஆட்சி அதிகாரத்துக்குப் பெண்கள் வந்திருக்கிறார்கள்.அப்போது அவ்வாறு நடந்திருக்கலாம் என்றார். தாராசுரம் கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதால் பின்னாளில் பெண்கள் போரில் ஈடுபடுகிற நிலை வந்ததா என்று தெரியவில்லை. இந்தச் சிற்பத்தை உன்னிப்பாகப் பார்த்தால் இதில் இடம்பெற்றிருப்பது பெண் உருவங்கள்தானா என்ற ஐயமும் எனக்கு ஏற்பட்டது. இதுகுறித்து கலை வல்லுனர்களும் வரலாற்றறிஞர்களும்தான் விளக்கமளிக்கவேண்டும்.

Saturday, July 23, 2011

தாராசுரம் ஓவியங்களைத் தொகுக்க வேண்டும்

பௌத்தம் தமிழ்நாட்டில் தழைத்திருந்த வரலாறு வரலாற்றாசிரியர்களால் மட்டுமின்றி கலை வரலாற்று அறிஞர்களாலும்கூட மறைக்கப்பட்டிருக்கிறது.அது குறித்த ஆய்வுகளைச் செய்யாமல் தமிழகத்தின் மெய்யான வரலாற்றை எழுத முடியாது. அதைப் பற்றித் தமிழ்நாட்டு அறிவுலகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிகழ்வின்போது அக்கோயிலில் இருக்கும் ஓவியங்கள் யாவும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டு அழகிய முறையில் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயிலில் இருக்கும் முசுகொண்டசுவாமி ஓவியங்களை இஸ்ரேலைச் சேர்ந்த அறிஞர் டேவிட் ஷுல்மான் அவர்கள் அற்புதமாகத் தொகுத்து அழகிய நூலாக வெளியிட்டிருக்கிறார். அதைப்போல தாராசுரம் கோயிலில் இருக்கும் இந்த ஓவியங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் சிறப்பாக இருக்கும். அரசாங்கத்திடம் மனு போட்டுக்கொண்டிருக்காமல் நாமே ஏன் அந்த முயற்சியை மேற்கொள்ளக்கூடாது?     

தாராசுரம் சிற்பங்கள்: மகப்பேறு பார்க்கும் காட்சி

தாராசுரம் கோயில் அழகிய சிற்பங்களின் உறைவிடமாக இருக்கிறது. விதம் விதமான சிற்பங்கள் மிகவும் கலை நயத்தோடு செதுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டிய வகைகள் மற்றும் முத்திரைகளைக் காட்டும் சிற்பங்கள் மட்டுமல்லாது   அபோர்வமான சில நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சிற்பங்களும் அங்கே உள்ளன. கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு சில பெண்கள் மகப்பேறு பார்க்கும் காட்சி அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியை இந்தப் படத்தில் பாருங்கள். 

தாராசுரம் ஓவியங்கள்

தாராசுரம் கோயிலில் மேலும் பல ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றுள் நான் படம் பிடித்தவை ஒரு சில மட்டுமே. இங்கே இன்னும் சில ஓவியங்களை வெளியிடுகிறேன். இவைகுறித்தும் விவரம் தெரிந்தோர் எழுதவேண்டும்.



Friday, July 22, 2011

தாராசுரம் ஓவியங்கள் சொல்லும் கதை எவருக்காவது தெரியுமா?



கும்பகோணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம். இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட அழகிய கோயில்தான் இந்த ஊரின் சிறப்பு. கட்டிடக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்க அந்தக் கோயிலுக்கு சிலநாட்களுக்கு முன்னால் போயிருந்தேன். அந்தக் கோயிலின் கருவறைக்குமேல் உள்ள கோபுரத்தின் வெளிப்புறம் முழுவதும் அருமையான வண்ணங்களைக்கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. கோயிலின் நுழைவாசலின் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் இருக்கும் மண்டபத்தில் அண்மைக்காலத்தில் அங்கு புனரமைப்புப் பணிகள் செய்தபோது கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர்.அந்த மண்டபத்தின் சுவரிலும் ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் தெளிவாகத் தெரிந்த இரு ஓவியங்களை எனது அலைபேசியின் காமிராவால் படம் பிடித்தேன். இந்த ஓவியங்கள் சொல்லும் கதை எவருக்காவது தெரியுமா? 






Tuesday, July 19, 2011

எண்வயத் தொழில்நுட்பமும் தமிழ்ப் பதிப்புத் துறையும் -" க்ரியா" எஸ். ராமகிருஷ்ணன்



      பதிப்புலகின் ஒரு பகுதியாக இருக்கும் செய்தித்தாள்களும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் புதிய தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதில் எப்போதும் முதலில் நிற்கின்றன. எனவே, தற்போதைய இந்த விவாதத்தின் நோக்கம் அவற்றை உள்ளடக்காது.
      தமிழ்ப் பதிப்புத் துறை செயல்படும் தளத்துக்கும் அதற்கு இருக்கும் அளவற்ற சாத்தியத்துக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகப் பெரியது; தமிழில் சராசரியாக ஒவ்வொரு புத்தகத்திலும் 1100 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1 கோடியே அறுபது லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுமட்டுமல்லாமல் செய்தித்தாள், சஞ்சிகைகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதற்காக 1970இலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் வாசகர் ஆய்வுகளின் முடிவுகள் இந்தியாவிலேயே அதிகமாகச் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்ற அச்சிடப்பட்ட பிரதிகளைப் படிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சொல்கின்றன. இவை இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு புத்தகத்திலும் 1100 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன என்பது மிகமிகச் சொற்பமாகும். இந்த முரண்பாடு நமது தற்போதைய விவாதத்துக்கு அப்பாற்பட்டது.
      வெவ்வெறு வகைத் தொழில்நுட்பங்களைத் தாண்டித் தமிழ்ப் பதிப்புத் துறை, தான் வந்த பாதையைப் பற்றி உணராமலேயே, 1990களின் மத்தியில் எண்வயத் தொழில்நுட்பம் என்ற தளத்தில் வந்து இறங்கியது. யாரும் எதிர்பார்த்திராத அதிவேக மாற்றங்களை இந்தத் தொழில்நுட்பம் கொண்டுவந்தது. பல பத்தாண்டுகளாகப் பதிப்புத் துறைக்கு முதுகெலும்பாக விளங்கிய தொழில்நுட்பத்தை எண்வயத் தொழில்நுட்பம் தான் அறிமுகமான சில வருடங்களுக்குள்ளேயே தூக்கி எறிந்தது. ஒரு பிரதியின் அச்சாக்கத்திற்கு மேற்கொள்ளப்படும் சிரமமான, சிக்கலான வழிமுறைகளிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் அது பதிப்பாளர்களை விடுவித்தது. புத்தகங்களை விரும்பியபடி வடிவமைப்பது எளிதாயிற்று.

ஆனால் அது தமிழ்ப் பதிப்புத் துறையின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறதா?
      எண்வயத் தொழில்நுட்பம் புதுச் சுதந்திரத்தை அளித்தது; மிகவும் உதவிகரமான சாதனங்களை உருவாக்கும் பரவசமூட்டும் சாத்தியக்கூறுகள் கருத்தளவில் சாத்தியமாயின. மொழியையும் தகவல்களையும் பதிப்பாளர்களும், ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும், வடிவமைப்பாளர்களும் அணுகும்  முறையில் புதிய வழிகளைக் கண்டறிய இந்தச் சாதனங்கள் உதவின. குறிப்பாக, அகராதிகள், சொற்களஞ்சியங்கள், புதிய இலக்கண நூல்கள் (தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டுக்கான இலக்கண நூலுக்கு ஒரு அவசரத் தேவை இருக்கிறது), சொற்களை நிலைப்படுத்தும் கையேடுகள், கல்விக்கு உதவும் வகையில் வெவ்வேறு துறை சார்ந்த வெவ்வேறு நிலைகளில் அமைந்த சொல்லகராதிகள், படங்கள் நிறைந்த கலைக்களஞ்சியங்கள் போன்ற மொழிக் கருவிகளை உருவாக்குவதிலும், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் போன்றோருடைய தேவைகளுக்கேற்ற விதத்தில் புத்தகங்களை வெளியிடுவதிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எண்வயத் தொழில்நுட்பம் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது. எடுத்துக்காட்டாக, பார்வையற்றோருக்கான பிரெய்ல் புத்தகங்களை உருவாக்குதில் ஏற்கனவே எண்வயத் தொழில்நுட்பம் உதவிவருகிறது; முதியோர்கள் எளிதில் படிப்பதற்கேற்ற விதத்திலான தடித்த, பெரிய எழுத்துகளையும் பல்மொழிப் பதிப்புகளையும் வண்ணப் படங்களையும் எளிதில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்க முடியும்.   
      க்ரியா பதிப்பகம் எண்வயத் தொழில்நுட்பம் வழங்கிய புதிய சாத்தியங்களுள் சிலவற்றைத் தனது அகராதிப் பணிகளுக்கென்று வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறது. புனைகதை, இதழியல், அறிவியல் கட்டுரைகள், குழந்தை இலக்கியம் முதலிய பலவகையான பிரிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட 85 லட்சம் சொற்களைக் கொண்ட தரவுத் தொகுப்பை, தற்காலத் தமிழுக்கான ஒரு பெரிய சொல்வங்கியை, இந்த அகராதிப் பணிகள் வெற்றிகரமாக உருவாக்கியிருக்கின்றன. இந்தச் சொல்வங்கி தற்காலத் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும். மொழிக் கருவிகளை உருவாக்குவோருக்கும் இந்தச் சொல்வங்கி பெருமளவில் உதவும். தேடல் முறையின் மூலம் தகுந்த தரவுகளைப் பெறுதல், சொற்களின் விளக்கங்களுக்கு மெருகூட்டுதல், துல்லியம் மற்றும் மொழி பற்றிய கேள்விகளுக்குப் பயன்பாடு சார்ந்த தரவுகள் ஆகியவற்றைப் பெற எண்வயத் தொழில்நுட்பம் முக்கியமான முறையில் உதவ முடியும் என்பதை இந்த அகராதிப் பணிகள் துலக்கமாகக் காட்டியிருக்கின்றன.
      ஆனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருசில முயற்சிகளில் ஒன்று மட்டுமே அது. பொதுவாகப் பார்க்கும்போது தமிழ்ப் பதிப்புத் துறை இன்னும் எண்வயத் தொழில்நுட்பத்துக்குத் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது.

அடிப்படைச் சாதனங்களுக்கான தேவை.
      ஒரு பிரதியை உருவாக்கி அதைப் புத்தகமாக ஆக்குவதற்குத் தேவைப்படும் அடிப்படையான, எளிமையான எண்வயச் சாதனங்களைப் பற்றிச் சற்றுப் பார்க்கலாம். கணிப்பொறி சார்ந்த எழுத்துக்கோப்பு முறை வந்ததிலிருந்து ஒரு பிரதியைத் தயார்செய்வது என்பது பல மடங்கு எளிதாகியிருக்கிறது. பிரதிகளை உருவாக்குவதற்கு இப்போது நாம் எடுத்துக்கொள்ளும் நேரம் முன்பெல்லாம் நினைத்தே பார்த்திருந்திருக்க முடியாதது. ஆனால் தமிழ் மொழியின் இயல்புக்குப் பொருந்தும் விதத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை; சொல்திருத்தி (spellchecker) ஒன்று இல்லாததும் சொற்பிரிப்பு முறை ஒன்று இல்லாததும் இதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இந்த இரண்டு வசதிகளும் பண்பாட்டு அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் மிகவும் முக்கியமானவை. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழி. அதாவது, ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதனுடன் நீங்கள் பல பின்னொட்டுகளைச் சேர்க்கலாம். ஒவ்வொரு பின்னொட்டைச் சேர்க்கும்போதும் சொல்லின் வடிவம் மாறுகிறது. ஒரு பெயர்ச்சொல் பன்மை விகுதியையும் வேற்றுமை உருபையும் மேலும் சில பின்னொட்டுகளையும் ஒரே சமயத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடும். ஒவ்வொரு நிலையிலும் சொல்லின் வடிவம் மாறுகிறது. ஒரு வினைச்சொல் இருநூறுக்கும் மேற்பட்ட விதங்களில் திரிபடைகிறது. அது மட்டுமல்லாமல் கூடுதலாக ஓரிரு துணைவினைகளும் அவற்றின் பின்னொட்டுகளுடன் வந்து சேர்ந்துகொள்கின்றன. சொல்திருத்தியை உருவாக்குவதில் தமிழின் இந்த இயல்பு பெரும் சவால்களை முன்வைக்கிறது. ஒரு சொல்திருத்தியை உருவாக்குவதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இன்றையத் தமிழின் அமைப்பை அதில் பெறப்படும் சொல்லிணைவுகளின் அடிப்படையில் முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஒன்றும் முடியவே முடியாத காரியம் அல்ல. ஆனால் இது தேர்ந்த மொழியியலாளர்களுக்கும் மென்பொருள் வல்லுநர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த, திட்டமிட்ட செயல்பாட்டைக் கோருகிறது. தமிழ் உரைநடையின் (பிரதிகளின்) இயல்பு கடந்த அறுபது ஆண்டுகளில் குறிப்பிடத் தகுந்த அளவு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது; தற்காலத் தமிழின் உரைநடை முன்பு இல்லாத அளவுக்குப் பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தமிழின் உரைநடை ஏறத்தாழ இருநூறாண்டுகளில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்துவருகிறது. எனவே, தமிழ் உரைநடைக்கான தரஅளவுகோல்களும் மிகமிக மெதுவாகவே உருவாகிவருகின்றன. இந்த நிலையை எதிர்கொள்வதற்கான வழிமுறையை எண்வயத் தொழில்நுட்பம் நமக்குத் தருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொல்திருத்திகள் சில வந்தாலும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வெவ்வேறு சூழ்நிலைகளில் திறமையாகச் செயல்படும் விதத்திலும் அவை ஒன்றுகூட இல்லை. இந்தச் சாதனம் இல்லாததால் எழுத்தாளரும் சரி, பிரதிமேம்படுத்துநரும் சரி, எண்வயத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  
      சொற்பிரிப்பு வசதி இல்லாதது இன்னும் அதிக அளவிலான நடைமுறைச் சிக்கல்களை உண்டாக்குகிறது, புத்தகத் தயாரிப்புக்கு ஆகும் செலவையும் அதிகரிக்கிறது. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழி என்பதால் சொற்கள் அடிக்கடி நீளமானவையாக அமைந்துவிடுகின்றன. ஒரு வரியின் முடிவில் கிடைக்கும் இடத்தைவிட ஒரு சொல் நீளமானதாக இருந்தால் அந்தச் சொல் முழுவதும் அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறது. நிரப்பப்படாமல் இருக்கும் அந்த இடத்தை முதல் வரியில் உள்ள சொற்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றன. இதனால் தேவையற்ற, இயல்பற்ற இடைவெளிகள் ஒரு வரியில் தோன்றிவிடுகின்றன. ஒரு சொல்லில் பிரிக்கப்படக்கூடிய இடங்கள் எவைஎவை என்பதைக் குறிக்கும் வசதிகள் ஏதும் கணிப்பொறியை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய எழுத்துக்கோப்பு முறையில் இல்லை. எண்வயத் தொழில்நுட்பத்துக்கு முன்பு இந்தச் சொல்பிரிப்பு முறை அச்சுக்கோப்பவருடைய தொழிலறிவின் ஒரு அம்சமாக இருந்தது. ஆனால் இன்று கணினியைப் பயன்படுத்தி அச்சுக்கோப்பவர்கள் எண்ணிக்கையில் பெருகிவிட்டாலும் அவர்களுடைய தமிழறிவு மிக மோசமாக இருப்பது கண்கூடு. ஒரு பக்கத்தில் நிறைய இடைவெளிகள் ஏற்படும்போது, பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதைவிட முக்கியமானது, கொள்ளக்கூடிய அளவைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான சொற்களையே அந்தப் பக்கம் கொண்டிருக்கும். ஆராய்ந்து பார்த்தால், இதனால் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம்வரை பக்கங்கள் தேவையில்லாமல் அதிகரிப்பது நமக்குத் தெரியும். அதாவது 100 பக்கங்களே வரும் ஒரு பிரதி 120 பக்கங்களாக நீளும். இது புத்தகத் தயாரிப்புக்கு ஆகும் செலவை அதிகரித்துவிடுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு ஆண்டுக்கு அச்சிடப்படும் மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிட்டுப் பார்த்தால் அனாவசியமாக எந்த அளவுக்குக் காகிதம், அச்சுக்கூலி போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன என்பது மிகத் தெளிவாகப் புலனாகும்.   

தமிழ் குறித்த பார்வை
      மேற்குறிப்பிட்ட வசதிகள் ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதற்குச் சிக்கலான காரணங்கள் நிறைய உள்ளன. இவற்றில் மிக முக்கியமானதும் ஆனால் பிரித்துப்பார்க்க முடியாததுமான ஒரு காரணம், தமிழைக் குறித்துத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கும் பிரக்ஞைதான். அன்றாட வாழ்க்கைக்கும் பொழுதுபோக்குக்கும் தமிழைப் பயன்படுத்துவதிலும் தமிழைத் தங்கள் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கொள்வதிலும் மட்டுமே தமிழின் மதிப்பு தமிழர்களிடையே உணரப்படுகிறது. தமிழ் தமிழர்களுக்குத் தொடர்ந்து நிகழும் கற்றலுக்கான சாதனம் அல்ல; தங்களின் சுயமேம்பாட்டுக்கு அவசியமான ஒன்றல்ல. பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளாதார ரீதியில் தமிழ் அவர்களுக்கு மதிப்பற்றது. நம் கல்வி ஆங்கிலத்தையே சார்ந்து இருக்கிறது. தற்கால வாழ்க்கைக்குத் தேவையான பல்துறை அறிவுக்குத் தமிழ் பயன்படாது என்று சராசரித் தமிழர்கள் கருதுகிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு இதை மறுக்கலாம். ஆனால் இதுதான் உண்மை நிலை.
      தமிழர்களின் அரசியல், கல்வி, சமூகம் போன்ற தளங்களில் சமீபத்திய ஒரு சில தசாப்தங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளின் கூட்டுவிளைவுதான் இந்த நிலை. தமிழின் தற்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்தகாலத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக அளவிலான முக்கியத்துவமும் தமிழ்த் தேசியவாத சக்திகளின் செயல்பாடுகளும் தற்கால வாழ்க்கையில் தமிழ் ஒரு வெளிப்பாட்டுக் கருவியாக இருப்பதன் சாத்தியங்களைப் பாதிக்கின்றன. தங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் தமிழ் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று படிப்பறிவு பெற்ற தமிழர்கள் கருதுகிறார்கள். தகவல் தொடர்புக்கும் நவீன வாழ்க்கைக்கும் தமிழ் ஏற்ற சாதனம் அல்ல என்று எல்லாருடைய உள்மனதிலும் ஒரு நிராகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இருந்த நிலையைப் பலவீனப்படுத்தவே ஆங்கிலத்தின் ஊடுருவல் உதவியிருக்கிறது.    
      நவீன வாழ்க்கையில் தமிழுக்கு உரிய பாத்திரத்தைக் கொடுப்பதற்குத் தயங்கும் ஒரு சமூகம் தங்கள் மொழி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி உணராமலே இருக்கும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு தமிழ்ப் பாடப் புத்தகங்களின் தரம். அவற்றின் மோசமான தரத்தை எதிர்த்துப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. பிரதிமேம்படுத்துதல், சொற்களை ஒருபடித்தாக்குதல், இன்னும் சற்று நுட்பமான அளவில், எழுத்துருக்களின் வகைகளைக் கூட்டுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை பாடப்புத்தகங்களின் உருவாக்கத்தில் எண்வயத் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தியிருந்திருக்க முடியும்.
      மொழி சார்ந்த பிரச்சினைகளை உணராதவர்களாகவே தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். புத்தகத்தைப் பதிப்பிப்பது என்பது புத்தகத்தை அச்சடிப்பதே என்று பரவலாக இருக்கும் (தவறான) கருத்தை உறுதிப்படுத்துவதுபோலவே பதிப்பாளர்களும் செயல்படுகிறார்கள். ஒரு பிரதியைப் புத்தகமாக மாற்றிவிடுவதிலேயே பதிப்பாளர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். நம் தலையீடு தேவையில்லாமல் குறைந்தபட்சமாகச் செயல்படும் அச்சுத் தொழில்நுட்பம் வேகத்தையும் பளபளப்பையும் உறுதி செய்வதால் ஒப்பீட்டளவில் கடந்தகாலத்தைவிட நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. எழுத்துரு போன்ற மிகவும் அடிப்படையான விஷயங்களைப் பற்றிக்கூட யாரும் கவலைப்படுவதில்லை. தமிழ் எழுத்துரு வடிவமைப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதும் இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்பதும்தான் உண்மை. ஒரு பிரதியை உருவாக்குவதற்கான அழகான எழுத்துருக்கள் தமிழில் மிகவும் குறைவு (பிரபலப் பத்திரிகைகள் தங்களுக்கென்றெ பிரத்தியேகமாக வடிவமைத்துக்கொண்ட எழுத்துருக்களின் மூலம் இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளித்துவிட்டிருக்கின்றன). நாவல் அல்லது சிறுகதைகளைப் பதிப்பிக்கும்போது எழுத்துரு பெரிய பிரச்சினையாகப் படுவதில்லை. ஆனால் பல பிரிவுகளையும், வெவ்வேறு  விதங்களில் அமைக்கப்பட்ட தகவல்களையும் ஒரே புத்தகத்தில், சில சந்தர்ப்பங்களில் ஒரே பக்கத்தில், அமைக்க நேரிடும்போது (எ-டு. அகராதி) தமிழ் எழுத்துருக்களின் வறுமை நன்கு புலப்படும். அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், பரவலாகப் பயன்படுத்தப்படுவதும், எண்வய முறையில் வடிவமைக்கப்பட்டதுமான எழுத்துருக்களில் சில, தமிழ் எழுத்து முறையின் இயல்புக்கே எதிராக இருக்கின்றன என்பதுதான். மிகப் பிரபலமான தமிழ் நாளேடு பயன்படுத்தும் எண்வய எழுத்துருவில் லூ, நூ, னூ, ணூ ஆகிய எழுத்துகள் முறையே லுா, நுா, னுா, ணுா என்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றித் தமிழ் ஆர்வலர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல் வேறு சில எண்வய எழுத்துருக்களில் ஒ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு வகை எழுத்துருவில் சூ என்ற எழுத்தில், அது முடியும் இடத்தில் தேவையில்லாத சுழி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றோரிடையே பொதுவாக இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லை. Display fonts என்று அழைக்கப்படும் எழுத்துரு வகையில் எவ்வளவு தமிழில் இருக்கின்றன என்று பார்க்கும்போது மிக ஏமாற்றமாக இருக்கிறது. எழுத்துருக்களைப் பரிசீலித்து, மதிப்பிட்டு, விமர்சனம் செய்வதற்கான அமைப்பு ஏதும் இந்தத் துறைக்குள்ளேயே இல்லாததால்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது. தமிழ் வளர்ச்சி என்பது தமிழுக்குத் தேவையான எழுத்துருக்களை உருவாக்குவதையும் உள்ளடக்கியது என்பது தமிழ் வல்லுநர்களின்  பிரக்ஞையில் அறவே இல்லை.

பதிப்புத்துறையும் மொழியறிவும்
      பதிப்புத் துறை என்பது ஏதோ ஒரு வெற்றிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கவில்லை. பிரதி-சார்ந்த செயல்பாடுகளுக்கான வழிமுறைகள் மொழி வல்லுநர்களிடமிருந்துதான் வருகின்றன. தற்போது கணிப்பொறி அறிவு என்பது மொழி ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுநர்களுக்கும் தேவையானது அல்ல என்றே தமிழ்ச் சமூகத்தில் கருதப்படுகிறது. ஓரிரு பல்கலைக்கழகங்களில் மொழியையும் கணிப்பொறித் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சில திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் விதிவிலக்காகத்தான் கருத வேண்டும். அவையும் பெயரளவில்தான் செயல்படுகின்றன. ஆனால் பதிப்புத் துறைக்குப் பயன்படும் விதத்திலான பலன்களை அவை ஏதும் இதுவரை உருவாக்கவில்லை. பதிப்புத் துறைக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையே தொழில்நுட்பம் குறித்த பரிவர்த்தனை கிட்டத்தட்ட இல்லை எனலாம். அப்படி இருந்திருக்குமானால், தமிழ்ப் பதிப்புலகம் தனக்குத் தேவையான சாதனங்களான துறைச் சொல் அகராதிகள், தரவுத் தொகுப்பு (சொல்வங்கி), நடைக் கையேடுகள், நவீன இலக்கண நூல்கள், வகைவகையான எழுத்துருக்கள் archives என்று அழைக்கப்படும் காப்பக வசதிகள் போன்றவற்றைப் பெற்றிருந்திருக்கும். அப்படிப் பரிவர்த்தனை இருக்கும் பட்சத்திலும் மொழி வல்லுநர்கள் கணிப்பொறி வல்லுநர்களின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதோடு திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.
      பதிப்புத் துறையின் அடிமட்ட அளவில் பார்க்கும்போது எண்வயத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகமே. மிகச் சில எழுத்தாளர்களே கணிப்பொறியைப் பயன்படுத்துகிறார்கள். எழுத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால் கணிப்பொறிச் சாதனங்களுக்கும் மென்பொருள்களுக்கும் செலவுசெய்யக்கூடிய வசதி பெற்ற எழுத்தாளர்கள் மிகச் சிலரே. பிரதிகளைச் செம்மைப்படுத்துதல் என்ற தங்களுடைய பாத்திரத்தைப் பதிப்பாளர்கள் இன்னும் உணரவே இல்லை. ஓரிரு பதிப்பாளர்கள் சிறிய அளவில் முயற்சிகளைச் செய்துவருகிறார்கள். ஆனால் பிரதியைச் செம்மைப்படுத்துதல் என்னும் ஒரு செயல்பாடு தமிழ்ப் பதிப்புலகின் அடிப்படைக் கூறாக இன்னும் உருவாகவில்லை. பிரதிகளை இறுதிசெய்வதற்குக் கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்காகக் குறிப்பிடத் தகுந்த அளவு செலவுசெய்தாக வேண்டும். ஒருபுறம் பார்த்தால் பிரதிமேம்படுத்துநருக்கு உதவும்படியான வசதிகள் ஏதும் இல்லை; இன்னொரு புறமோ சாதனங்களுக்காகவும் நேரத்துக்காகவும் ஆகும் செலவு பதிப்பாளர்களுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது. தமிழ் எழுத்துருக்களைக் கணினிக் குறியீட்டாக்கத்துக்கு மாற்றுவதற்கான இயங்குமுறைகள் சீரற்றும், ஏராளமாகவும் இருப்பதுடன் (எழுத்துரு மாற்ற மென்பொருள் வசதிகள் இருப்பினும் அவை எல்லாச் சூழல்களிலும் திறம்படச் செயல்படுவதில்லை) உள்ளீடு செய்யப்பட்ட பிரதிகளை ஒரு வகையான அமைப்பிலிருந்து வேறு வகையான அமைப்புக்குக் கொண்டு செல்வதில்  பிரச்சினைகள் இருப்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் இறுதி விளைவு என்னவென்றால், பதிப்பிக்கப்பட்ட புத்தகம் ஒரு எழுத்தாளரின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டுவருவதாக இல்லை; தரமானதாகவும் அழகுணர்ச்சி பொருந்தியதாகவும் இல்லை; இழப்பு எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும்தான், பதிப்பாளர்களுக்கல்ல.
      ஒரு பிரதியை மேம்படுத்துவதில் ஒரு எழுத்தாளருக்கும் பிரதிமேம்படுத்துநருக்கும் எண்வயத் தொழில்நுட்பம் மிகப் பெரிய உதவிகளைச் செய்ய முடியும். தற்காலத் தமிழை எழுதுவது குறித்த பிரக்ஞை யாரிடமும் இல்லை. எடுத்துக்காட்டாக, கூட்டுப்பெயர்ச்சொற்களையும் கூட்டுவினைச்சொற்களையும் எப்படி எழுதுவது? துணைவினைகளை எப்படி எழுத வேண்டும்? பின்னொட்டுகளை எப்படி எழுதுவது? செயல்முறைகளில் ஒழுங்கையும் எழுத்து நடையில் சீரான தன்மையையும் அடைவதில் எண்வயத் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளது. இந்தப் பலன்களெல்லாம் எழுத்தாளர்களுக்கு மறுக்கப்பட்டுக் கடைசியில் ஒட்டுமொத்தச் சமூகம்தான் இழப்பைச் சந்திக்கிறது.  என்பது தெளிவாகும். மொழியைக் கற்றுக்கொள்ளுதல் என்பது முறைசார் கல்வியோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது நாம் பெறுவது பிரதியின் அர்த்தத்தை மட்டுமல்ல, அந்த அர்த்தம் எந்த மொழி வழியாக நமக்குக் கிடைக்கிறதோ அந்த மொழியின் அமைப்பு, இயல்புகள் ஆகியவற்றையும்தான். இன்னும் ஒருமுறை சொல்வதென்றால், எண்வயத் தொழில்நுட்பத்தால் பயன்பெறப் பதிப்பாளர்கள் அதற்காகச் செலவுசெய்ய வேண்டும்; அதற்காக அவர்கள் செலவுசெய்ய வேண்டுமென்றால் அதிக அளவில் புத்தகங்களை அதிக அளவில் மக்கள் வாங்க வேண்டும். மோசமான இந்த வளையத்தை எப்படி உடைப்பது? இங்கே முன்முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு பதிப்பாளர்களுடையதே. அவர்கள் செயலூக்கம் நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்; விசாலமான பார்வை, துணிவு போன்றவற்றுடன் தங்கள் துறைமீதும் தரத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
      அடிப்படையில் எண்வயத் தொழில்நுட்பம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பதைப் பதிப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரதியைப் பக்கமாக ஆக்குவது என்பது எளிதானதும் வேகமாகவும் செய்யக்கூடியது; முந்தையத் தொழில்நுட்பத்தின் குளறுபடிகள் குறைந்துவிட்டன. குறைந்தபட்ச முயற்சியைக் கொண்டே புத்தகத்தின் அட்டைகளை வண்ணமயமாகவும் பளபளப்பாகவும் தயாரிக்க முடியும். இந்தச் சாதகமான அம்சங்கள் பதிப்புத் தொழிலில் இறங்கும்படி அநேகரைத் தூண்டுகின்றன. ஒருவிதத்தில், எண்வயத் தொழில்நுட்பம் நிறைய புதுப் பதிப்பாளர்களை உற்பத்திசெய்திருக்கிறது. புத்தகங்களை விற்பதும் முன்பைவிட இப்போது சற்று எளிது; பொது நூலகங்கள் புத்தகங்களைக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எடுத்துக்கொள்கின்றன (ஆனால் அரசு நிர்ணயித்த விலையில்! இந்தக் கொள்கையின் பாதிப்பைப் பற்றித் தனியாக ஒரு ஆய்வே செய்ய வேண்டும்.); கூடவே, ஏராளமான புதிய பள்ளிகளும் வெளிநாடுவாழ் தமிழர்களைக் கொண்ட புதிய சந்தைகளும் அதிகரித்துவிட்டன. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் 1100 பிரதிகளை விற்பது அப்படியொன்றும் கடினமில்லை; தனிமனிதர்கள் புத்தகம் வாங்கும் பழக்கத்தை அதிகரிப்பதன் அவசியத்தில் பதிப்பாளர்கள் பெரிய அளவில் அக்கறைகாட்டுவது போலத் தெரியவில்லை. பொது நூலகங்களாலும் நிறுவனங்களாலும் எவைஎவை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது பதிப்பாளர்களுக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக, ஆங்கில அகராதி என்ற பெயரிலோ, குழந்தைகளுக்கான அறிவியல் நூல்கள் என்ற பெயரிலோ, சுயமுன்னேற்ற நூல்கள் என்ற பெயரிலோ எந்த நூலை வெளியிட்டாலும் அவற்றை விற்பதற்கு மிகவும் சிரமப்படத் தேவையில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் ஒரு அகராதியையோ அறிவியல் நூலையோ மதிப்பிடுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல்தான் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்பும், சங்கத் தமிழ் தொடர்பான அச்சில் இல்லாத நூல்களின் மறுபதிப்பும். சமீப காலமாக மறுபதிப்பு செய்யப்பட்டுவரும் அச்சில் இல்லாத நூல்களின் அளவைப் பார்த்தால் நமக்கு வியப்பு ஏற்படும். இந்த நிலையானது, முதன்முதலில் அச்சுத் தொழில்நுட்பம் வந்தபோது ஏற்பட்ட நிலையைப் போன்றதே; மரபு சார்ந்த, பழமையான நூல்களே அப்போது அதிக அளவில் அச்சிடப்பட்டன. பதிப்பாளர்களுக்கு இந்தத் துணிவையும் தன்னம்பிக்கையையும் அளித்தது எண்வயத் தொழில்நுட்பம்தான். அதன் விளைவாக இப்போது மடை திறந்திருக்கிறது. இது போன்ற பதிப்பு முறைகளையும் அதற்கான பொருளாதாரத்தையும் சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் பாதிப்பையும் ஆராய்ந்துபார்த்தால் அது வியப்பைத் தரும் முடிவுகளைத் தரும்.

தமிழ்ப் பதிப்புலகமும் இணையமும்
      அச்சுக்கான பிரதிகளைத் தயார்செய்வதைவிட மேலும் சில வகையில் எண்வயத் தொழில்நுட்பம் உதவும் என்பதைத் தமிழில் ஒரு சில இளம் பதிப்பாளர்கள் கண்டுகொண்டிருக்கின்றனர்; ஒன்று, எண்வயக் களஞ்சியமான இணையம்; அது பயன்படுத்தப்பயன்படுத்தத் தீர்ந்தேபோகாததும் அச்சிடுவதற்கான கச்சாப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உடனடி ஆதார மையமும் ஆகும்; இரண்டு, இணையமே பதிப்பிப்பதற்கான ஒரு ஊடகமும்கூட. தொழில்நுட்பத்தின் பளபளப்பு நம்பகத்தன்மையைத் திணிக்கிறது. இணையத்தில் இடம்பெறுவதும், காணப்படுவதும், ஒருவரின் வெற்றிக்கும் செல்வாக்குக்கும் அடையாளமாக ஆகிவிட்டன.  
      விளைவாக, கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் தீவிர அக்கறை கொண்டவையாகத் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் ஒரு சில அச்சிட்ட பத்திரிகைகள் பெருமளவில் இணையத்திலிருந்து இறக்குமதி செய்கின்றன. நிறைய தமிழ் எழுத்தாளர்களும் இதழியலாளர்களும்  இணையச் சுரங்கதிலிருந்து தோண்டி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள், அரபிய எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள், பல்வேறு மேற்கத்திய நாடுகளின் சினிமா, அறிவியல் போன்றவற்றைப் பற்றிய பெருமளவிலான தகவல்கள் போன்றவற்றை ஒருவர் இந்தப் பத்திரிகைகளில் காண முடியும். இந்தத் தகவல்கள் எல்லாம் வேண்டாதவை என்று நான் இங்கு குறிப்பிடவில்லை, அவையெல்லாம் வெறுமனே மறுசுழற்சி செய்யப்பட்ட, உறுதிப்படுத்தப்படாத கூற்றுகளைக் கொண்ட, பாரபட்சமான, செரிக்கப்படாத தகவல்களே.  இப்படிப்பட்ட இணையதள எழுத்தாளர்கள் தமிழ் வாசகர்களின் தேவைகளோடு அவற்றைத் தொடர்புபடுத்தும் முயற்சியை மேற்கொள்வதில்லை.  தாங்கள் தகவல்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதனால்தான், பிரபல எழுத்தாளர் ஒருவர் காஃப்கா தற்கொலைசெய்துகொண்டு இறந்ததாகச் சொல்கிறார்; இன்னொருவர் உலகத் தரத்தில் எழுதும் ஐம்பது அரபிய எழுத்தாளர்களின் பெயர்களைத் தன்னால் (அநாயாசமாக) குறிப்பிட முடியும் என்கிறார். இந்தப் போக்கானது தமிழ் எழுத்தாளர்களெல்லாம் பன்முகத் தன்மை வாய்ந்தவர்கள், ஆழக் கற்றவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தியிருக்கிறது. (இது போன்ற எழுத்தாளர்கள் அதே அளவு உற்சாகத்துடன் இந்தியாவில் உள்ள பிராந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றியோ பிற ஆசிய மொழி எழுத்தாளர்களைப் பற்றியோ பேசுவதில்லை. ஏனென்றால் இந்திய மொழிகள், ஆசிய மொழிகள் போன்றவற்றைப் பொறுத்தவரை இணையம் சற்று பலகீனமான தகவல் மையம்). புதிதாக வரும் பெரும்பாலான வாசகர்களெல்லாம் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும், வருபவர்கள் என்ற உண்மையை நாம் உணர்வோமானால் தற்போதைய சூழல் இவர்களை எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதை உணர முடியும்.
      தமிழின் இணையப் பத்திரிகைகள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அச்சிடப்படும் பத்திரிகைகளின் இணைய வடிவம் மட்டுமே. இணையப் பத்திரிகைகளுக்கென்று இருக்கும் வடிவங்களில்கூட எண்வயத் தொழில்நுட்பம் அளிக்கும் அதற்கே உரித்தான சாதகமான அம்சங்களை அவை பயன்படுத்திக்கொள்வதுபோலத் தெரியவில்லை. ஆவணப்படுத்துதல் என்பது ஒரு சாதகமான அம்சம் என்று ஒருவர் சுட்டிக்காட்டலாம், ஆனால் அதிலும்கூட முறையான, திட்டமிடப்பட்ட அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எந்த அறிகுறியையும் காணோம். இந்த இதழ்களுக்கு அப்பாற்பட்டு, தமிழில் காத்திரமாக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மிகச் சிலவே என்பதும் உண்மையே. இணையத்தில் அதிக அளவில்  தமிழை இடம்பெறச் செய்ய வேண்டியது இணையத் தமிழின் மீது அக்கறை கொண்டோர் கவனம் செலுத்த வேண்டிய உடனடிப் பிரச்சினையாகும். தமிழ் இணையதளங்களில் கொடுக்கப்படும் படங்கள் தரத்திலும் உள்ளடக்கத்திலும் மிக பலவீனமானவை, அனிமேஷன் மிகவும் அரிது. இந்த இணைய இதழ்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம், பொறிகள் (hardware), மென்பொருள்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக இயங்குவதில்லை என்பது நடைமுறை உண்மை. சில இணைய இதழ்களில் ஒவ்வொரு இதழைப் படிக்கும்போதும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  
      தற்போது இணைய இதழ்கள் என்பவை சுயதம்பட்டத்துக்கான வெளியீட்டு முறைக்கான தளமாக மட்டுமே இருக்கின்றன. பதிப்பு முறைக்கென்று இருக்க வேண்டிய தீவிரமான அக்கறையின் செல்வாக்கை   --அதாவது குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நிறைய விஷயஞானம் கொண்டிருத்தல், பெற்றுக்கொண்ட படைப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்தல், பிரதியை மேம்படுத்துதல் போன்றவற்றை-- இணைய இதழ்களில் பார்க்க முடியாது. இணையத்தின் உடனடித் தன்மையின் சாதகமான அம்சத்தையும் அச்சிட்ட பக்கங்களில் இருக்கக் கூடிய வரன்முறைகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தையும் இணைய இதழ்கள் எந்த விஷயத்தையும் தொட்டு வருவதற்கான, ஒவ்வொரு விஷயத்தினூடாகவும் புகுந்து வருவதற்கான அனுமதி என்று கணக்குப்போட்டிருக்கின்றன. இந்த வகையில், ஒருவர் தனது சுயகுறிப்புகளை எழுதும் வலைப்பூவின் குணாதிசயங்களோடு இவை பெரிதும் பொருந்துகின்றன. எண்ணங்களின் முறைப்படியான ஒருங்கிணைந்த வெளிப்பாடு தமிழ் இணையதளங்களில் காணக்கிடைப்பதில்லை.  
      தற்போதைய சூழலில் இணைய இதழ்களுக்கான வாசகர் வட்டம் தமிழ்நாட்டுக்குள் பரந்த அளவில் இல்லை. தமிழ்நாட்டில் கணிப்பொறியின் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை என்பது ஒரு காரணம். தகவல்களைப் பெறுவதற்காகத் தினமும் இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கம் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உள்ளதுபோல் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின்  ஒரு பகுதியாக இன்னும் ஆகவில்லை. வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்க்கையில் எண்வயத் தொழில்நுட்பம் இரண்டறக் கலந்ததற்குப் பண்பாட்டு ரீதியான காரணங்கள் உள்ளன.
      இணையம் உள்ளிட்ட எண்வயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அச்சு ஊடகங்கள், இணைய இதழ்கள் போன்றவை தங்களுக்கிடையே கிட்டத்தட்ட எந்த விதத் தொடர்பும் பரிமாற்றமும் இல்லாமல் செயல்படுவது வியப்பூட்டும் விஷயம். அவற்றுக்கிடையே விவாதங்கள் இல்லை. மொழி, கலாச்சாரம, இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் இணைய உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தமிழ் அச்சு ஊடகங்கள் விவாதிப்பதே இல்லை எனலாம். இணைய இதழ்களும் அச்சு ஊடகங்களைப் பற்றி விவாதிப்பதில்லை.

ஒருங்கிணைந்த செயல்பாடும் மொழிபெயர்ப்பும்
      தமிழ்ப் பதிப்பாளர்கள் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள பதிப்பாளர்களுடன் தொடர்பு இல்லாமலேயே தனித்து இயங்குகின்றனர். அச்சு இதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றில் வெளியாகும் ஒரு சில மொழிபெயர்ப்புகள் ஒரு பழக்க தோஷம்தான். இந்திய மொழிப் பதிப்பாளர்களுக்கும் இந்திய மொழிகள்மீது அக்கறை கொண்ட ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான பரிவர்த்தனை நடைபெற எண்வயத் தகவல்தொடர்பு முறைகள் வசதிசெய்துதர முடியும். பெரிய தளத்தில் ஒருவருக்கொருவர் தங்களுடைய அக்கறைகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகுக்க முடியும். இந்திய மொழிகளுக்கிடையேயான மொழிபெயர்ப்புகளுக்கும் இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளுக்கும் எண்வயத் தொழில்நுட்பம் ஒரு தூண்டுகோலாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் இந்திய மொழிகளுக்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் ஒரு விரிவான அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எல்லாவிதமான அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் தமிழ்ப் பதிப்பாளர்கள் தங்கள் பணியில் தொழில்முறைத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  

(*ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைபல திருத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதைத் தமிழ்ப்படுத்த உதவியவர் தே. ஆசைத்தம்பி. அவருக்கு என் நன்றி). 
( இந்தக் கட்டுரை மணற்கேணி இதழ் 3 ல் ( டிசம்பர் - ஜனவரி 2011) வெளியிடப்பட்டது. )