Thursday, April 7, 2011

தேர்தல் களத்திலிருந்து ...







தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்த பிறகு தினமும் வலைப்பூவில் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், பிரச்சாரம் முடிவது பத்து மணிக்கு என்றாலும் அறைக்கு வருவதற்கு நள்ளிரவு ஆகிவிடுவதால் அது சாத்தியமாகவில்லை. இன்று எப்படியும் எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்துவிட்டேன். நேரம் இரண்டை நெருங்குகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நாட்கள் சீக்கிரம் முடிந்து எனது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தவிப்பாயிருக்கிறது. படிக்கவேண்டிய நூல்கள் அழைத்தபடி இருக்கின்றன. என்னைத் தூக்கிக் கொள் என்று கைகளை விரித்துக்கொண்டு நிற்கும் குழந்தையை நிராகரித்துவிட்டுப் போவதுபோல் இருக்கிறது நல்ல புத்தகம் ஒன்றைப் படிக்காமல் வைத்துவிட்டுச் செல்வது. எழுதவேண்டிய விஷயங்களும் சேர்ந்துகொண்டே போகின்றன. அது இன்னும் பெரிய அவஸ்தை. கைகளைக் கூப்பியபடி ஜீப்பில் பயணிக்கும்போது கண்ணில் தூசு வந்து விழுவதுபோல மனசில் வார்த்தைகள் வந்து விழுகின்றன.சற்று நேரத்தில் அவை கரைந்துபோய்விடுகின்றன. அல்லது மனசின் ஆழத்துக்குப் போய் படிந்துவிடுகின்றன.அவற்றைத் தேடி அளையும்போது எதிரே என்னை வரவேற்பவர்களின் முகங்களைத் தாண்டி என் கண்கள் எங்கோ வெறிக்கின்றன. இன்று கொள்ளிடக் கரையில் இருக்கும் ஊர்களில் வாக்கு சேகரித்தேன். நான் சட்டமன்றத்தில் வாதாடிக் கொண்டுவந்த திட்டம் - கொள்ளிடக் கரையை உயர்த்திப் பலப்படுத்தும் 115 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்- அங்கே செயல்வடிவம் பெற்று வருவதைப் பார்த்தபோது மனம் நிறைந்தது. அந்தத் திட்டத்தால் வெள்ளப் பாதிப்புக் குறையும் என்பது மட்டுமின்றி கரையின் அமைய இருக்கிற சாலையால் அப்பகுதி மக்களின் பல பிரச்சனைகள் தீரும். நண்பர் இமையம் அங்கே வந்திருந்தார். நான் சற்று நேரம் நின்று கொள்ளிடத்தின் மணல் வெளியைப் பார்த்தேன். நீரற்றுப் போனாலும் ஆறு அழகுதான். மணல் பெருகும் ஆறு. மணலும் பொங்கிப் பாய்ந்தோடுவதுபோல் ஒரு பிரமை. தேர்தல் பணிகளித் துவக்கிய நாளிலிருந்து ஒரு கேள்வி என்னுள் குளவியைப் போல ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது
. இப்படியான பதவிகளால் என்ன வரப்போகிறது? வாழ்வில் இதைவிடவும் உருப்படியான காரியங்கள் இல்லாமலா போய்விட்டது? மக்கள் என்பதை அருவமான ஒரு அரசியல் வகைப்பாடாகப் பார்த்துப் பணியாற்றியது ஒரு காலம். இப்போது அந்த மாயை உடைந்துவிட்டது. ஆனால் சுவாரஸ்யம் கூடிவிட்டது. எத்தனைவிதமான மனிதர்கள் என்று வியப்பாக இருக்கிறது. இன்னும் சில நாட்கள் இந்த மகிழ்ச்சிகரமான வேலை தொடரும், அப்புறம் எதை நோக்கி மனம் நகரப்போகிறதோ தெரியவில்லை. பார்ப்போம்.....

No comments:

Post a Comment